வியாழன், 29 ஆகஸ்ட், 2024

பொய் குற்றச்சாட்டு கொடுத்த நடிகைகள் மீதும் நடவடிக்கை வேண்டும்" - பிருத்விராஜ் வலியுறுத்தல்

 tamil.news18.-Vijay Ramanathan :   தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / "பொய் குற்றச்சாட்டு கொடுத்த நடிகைகள் மீதும் நடவடிக்கை வேண்டும்" - பிருத்விராஜ் வலியுறுத்தல்
“ஹேமா கமிட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், பொய் புகார் கொடுத்த நடிகைகளும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
கேரள நடிகை ஒருவர் கடந்த 2017ல் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.



இந்த ஹேமா கமிட்டி அறிக்கை சமீபத்தில் பல சிக்கலுக்கு பிறகு வெளியானது. அப்படி வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள திரை உலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. ஒரு சில நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்க கேரள அரசு சிறப்பு குழுவை நியமித்தது.

இதற்கிடையே, இந்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இயக்குநர் பிளெஸ்ஸி, நடிகர் டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசும்போது, “மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா பாலியல் புகார்களைத் தீர்க்கத் தவறிவிட்டது. நடிகைகளுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.

அது அவசியம். அதேநேரம், ஹேமா கமிட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்குப் பிறகு யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதேபோல், குற்றச்சாட்டுகள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், பொய் புகார் கொடுத்த நடிகைகளும் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Also Read: ‘அம்மா’ சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்ய 4 பேர் மறுப்பு? - வெளியான புது தகவல்

ஹேமா கமிட்டி விவகாரம் குறித்து மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இதுவரை எதுவும் பேசவில்லை. அதேநேரம் இளம் நடிகர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, தொடர்ச்சியான பாலியல் புகார்களை அடுத்து மலையாள திரைப்பட சங்கமான அம்மா(AMMA) நேற்று கூண்டோடு கலைக்கப்பட்டது. பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க நேற்று அம்மா சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: