திங்கள், 24 ஜூன், 2024

நீட் மறுதேர்வில் 750 மாணவர்கள் ஆப்சென்ட்: தேசிய தேர்வு முகமை!

 மாலை மலர்  :   புதுடெல்லி நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடுமுழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.
இதற்கியே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் நீட் தேர்வில் 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
6 தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட குறைவான நேரம் ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



தேர்வு வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும் 1,563 மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதை ரத்துசெய்ததுடன், 1,563 மாணவ, மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவ, மாணவிகளுக்கும் இன்று நீட் மறுதேர்வு நடைபெற்றது.

சத்தீஸ்கர், குஜராத், அரியானா, மேகாலயா, சண்டிகர் ஆகிய மாவட்டங்களில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மறுதேர்வு இன்று நடந்தது.

இன்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 48 சதவீத மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. மொத்தமுள்ள 1,563 பேரில் 813 பேர் மட்டுமே நீட் மறுதேர்வு எழுதியுள்ளனர். எஞ்சிய 750 பேர் நீட் மறுதேர்வை எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: