வியாழன், 28 மார்ச், 2024

பம்பரம் இல்லை... பானைக்கு சிக்கல்... ஆனால் தமாகாவுக்கு சைக்கிள் .தேர்தல் ஆணையத்தின் -----?

minnambalam.com - Aara  :  “திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம்,  அதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்ட பானை சின்னத்தையும் வழங்க முடியாது என்று கை விரித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதமே தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்ற திருமாவளவன் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
எனவே ஏற்கனவே நாங்கள் போட்டியிட்ட பானை சின்னத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார். அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ’கடந்த இரண்டு பொது தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒரு சதவீதம் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி வாக்குகளை பெறாததால் பொதுச் சின்னம் வழங்க சின்னங்கள் சட்டத்தில் இடமில்லை’ என்று தெரிவித்தது. 

இதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 1.51% வாக்குகளும் 2019 தேர்தலில் 1.18 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது. ஆனால் குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்குகள் கூட பெறவில்லை என தேர்தல் ஆணையம் தவறான தகவலை தெரிவித்துள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து தான் தெரிவித்த அந்த புள்ளி விவரங்களை திரும்ப பெற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று 27ஆம் தேதி மாலை 5 மணி வரை காலம் நிர்ணயம் செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். ஆனால் தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்காத நிலையில், மீண்டும் 28ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுகிறது விசிக.

1 நபர் மற்றும் தேநீர் மேக்கர் இன் படமாக இருக்கக்கூடும்

டெல்லியில் இருந்த விசிக நிர்வாகிகளிடம் நீதிமன்றத்தில் நடந்தது பற்றி கேட்டறிந்து கொண்டார் திருமாவளவன். தான் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் விசிக நிர்வாகிகளிடம் பேசிய அவர், ’2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம்  கேட்ட மோதிரம் சின்னத்தை தர மறுத்து பானை சின்னத்தைக் கொடுத்தது தேர்தல் ஆணையம். குறுகிய கால இடைவெளியில் பானையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தோம். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றோம். இந்த முறை பானை சின்னம் நிச்சயமாக கிடைப்பதற்கு நமக்கு சட்டபூர்வமான காரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை தேர்தல் ஆணையம் வேறு எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்’ என்று கூறியிருக்கிறார்.

8 பேர், நபர்கள் புன்னகைகின்றனர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், செக்வே மற்றும் பிக்னிக் இன் படமாக இருக்கக்கூடும்

பாஜக கூட்டணியில் இப்போது இடம்பெற்றிருக்கும் தமாகா கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. ஆனால் அந்த கட்சிக்கு வாக்கு சதவிகிதம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சைக்கிள் சின்னத்தைக் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.

நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டபோது, ‘அதை கர்நாடகா மாநிலத்தில் ஒரு தேசிய கட்சிக்குக் கொடுத்துவிட்டதால் உங்களுக்கு கொடுக்க முடியாது’ என மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். ஆனால் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை இங்கே வாசனுக்கு எவ்வித கேள்வியும் இல்லாமல் வழங்கியது.

7 பேர் மற்றும் , ’ப்பீர் வாக்களிப்பீர் TO மா கா’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

அதுபோல 2019 தேர்தலில் பாஜகவுக்கு எதிரணியில் இருந்த டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க மறுத்த தேர்தல் ஆணையம், கடைசி கட்டத்தில் குக்கர் சின்னத்துக்கு பதில் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது. ஆனால் இப்போது எவ்வித சிக்கலும் இல்லாமல் தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளது.

இப்படி தேர்தல் ஆணையத்தின் பார்வை என்பது சட்டப்படி இல்லாமல் பாஜகவோடு கூட்டணி வைத்திருப்பவர்கள் யார், எதிர்ப்பவர்கள் யார் என்ற அடிப்படையிலேயே இருக்கிறது என்ற விமர்சனம் கடுமையாக எழுந்துள்ளது.

திருமாவுக்கு பானை சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரே பானையோடுதான் சிதம்பரத்தில் களமிறங்கியிருக்கிறார். சுவர் விளம்பரங்களும் செய்துவிட்டார்கள். ஆனால் இப்போது திடீரென பானைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் திமுகவும் சற்று யோசனையில் இருக்கிறது. அதேபோல துரை வைகோ திருச்சியில் தீப்பெட்டி அல்லது சிலிண்டர் சின்னம் கேட்டிருக்கிறார்.

‘இதுவரையில் உதயசூரியன் அல்லது கை என பிரபலமான சின்னங்களுக்கே ஓட்டுக் கேட்டு வந்த நாங்கள் முதல் முறையாக ஒரு புதிய சின்னத்துக்கு ஓட்டு கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்’ என்று ஆதங்கப்படுகிறார்கள் திருச்சி திமுகவினர்.

மேலும்,  ‘கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போதே உதயசூரியனில் நில்லுங்கள் என்று கேட்டோம். ஆனால் விசிகவும், மதிமுகவும் தொடர்ந்து மறுத்தார்கள். தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் பம்பரமோ, பானையோ உங்களுக்கு கிடைக்க 100 சதவீதம் உத்தரவாதம் இல்லை என்று அப்போதே அவர்களிடம் சொன்னோம். ஆனால் அக்கட்சியினர் அதை கேட்கவில்லை.
இப்போது அவர்களை விட திமுகவினரான எங்களுக்குத்தான் ரிஸ்க் அதிகம். தொகுதியை வெற்றி பெறவில்லை என்றால் பதவி இருக்காது என்று எச்சரித்துள்ளார் ஸ்டாலின். வைகோ, திருமாவின் பிடிவாதத்துக்கு நாங்கள்தான் இப்போது பாடாய்ப்படுகிறோம்’ என்று வேதனையோடு சொல்கிறார்கள் திருச்சி, விழுப்புரம், சிதம்பரம் திமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: