வியாழன், 13 ஜூலை, 2023

டிஐஜி விஜயகுமார் கடைசியாக அனுப்பிய ரவுடிகள் பற்றிய செய்தியும் உத்தரவும்?

மின்னம்பலம் : டிஐஜி விஜயகுமார் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் செய்தி  இதுதான்!
தமிழக காவல்துறையை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையும் பொதுமக்களையும் அதிர வைத்த சம்பவம் கடந்த ஜூலை 7 ஆம் தேதி காலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதுதான்.
ஒவ்வொரு நாளும் காலையில் டிஐஜி விஜயகுமார் தனது நண்பர்களுக்கும், போலீஸ் குரூப்பில் உள்ளவர்களுக்கும் வாட்ஸ் அப்பில் தவறாமல் காலை வணக்கம் மற்றும் சில செய்திகளை அனுப்பி வந்திருக்கிறார்.
தற்கொலை செய்துகொண்ட அன்று (ஜூலை 7) காலை 6.40க்கும் வழக்கம்போல வாட்ஸ் அப்பில் இருந்து செய்தி  அனுப்பியிருக்கிறார் டிஐஜி விஜயகுமார்.
அன்று தன் வாழ்க்கையில் கடைசியாக அனுப்பிய மெசேஜ் என்ன என்ற தகவல், தற்கொலை வழக்கை விசாரித்து வரும் போலீஸ் வட்டாரங்களில் பேசியபோது நமக்குத் தெரியவந்தது.
“ஒவ்வொரு நாளும் டிஐஜி விஜயகுமார் ஆன்மீகம், தத்துவம் என்று பல்வேறு மெசேஜ்களில் காலை வேளையில் அனுப்பி வைத்து வருவார்.


அந்த வகையில் ஜூலை 7 ஆம் தேதி காலை 6.40 க்கு தனது போலீஸ் வாட்ஸ் அப் குரூப்பில் ஒரு செய்தியை  பதிந்திருக்கிறார் விஜயகுமார்.

அது என்னவென்றால் தத்துவமோ, காலை வணக்கமோ அல்ல…
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, கோவை சரகத்தின் ஒவ்வொரு காவல்நிலைய எல்லையிலும் இருக்கும் ரவுடிகளின் எண்ணிக்கை, அவர்களின் குற்றத் தன்மையை பொறுத்து ஏ, ஏ ப்ளஸ் என்று வகைப்படுத்தப்பட்டு அதுபற்றிய விவரங்களை உடனடியாக அவரவர் மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் அந்த மெசேஜ்.

சட்டம் ஒழுங்கு பற்றிய அரசியல் விவாதங்கள் அதிகரித்திருந்த நிலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியிடம் இருந்து வந்த மெசேஜைதான் அன்று தனது போலீஸ் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து…உடனடியாக ரிப்போர்ட் செய்யவும் என்று உத்தரவிட்டிருந்தார் டிஐஜி.

ஆக தான் இறப்பதற்கு  பத்து நிமிடங்கள் முன்பாகக் கூட டிஐஜி விஜயகுமார் போலீஸ் பணியைத்தான் பார்த்திருக்கிறார்” என்கிறார்கள் விசாரணை வட்டாரங்களில்.

–வணங்காமுடி

கருத்துகள் இல்லை: