புதன், 12 ஜூலை, 2023

ஈஸ்டர் தாக்குதல்- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 மில்லியன் இழப்பீடு வழங்கினார் முன்னாள் இலங்கை அதிபர் சிறிசேனா

மாலை மலர்  :  இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் அன்று அங்குள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இதுதொடர்பான வழக்கில், கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான ஈஸ்டர் தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் இலங்கை ரூபாய் வழங்க வேண்டும் என அப்போதைய அதிபர் சிறிசேனாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவிற்கு முன்னதாக, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் இலங்கை ரூபாயை முதல் தவணையாக வழங்கியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஜூலை 12 க்கு முன்னதாக, சிறிசேனா ஜூன் 28 அன்று இலங்கை ரூபாய் 15 மில்லியனை இழப்பீடாக செலுத்தினார்.

ஜூன் 30, 2024 முதல் 10 தவணைகளில் 8.5 மில்லியன் இலங்கை ரூபாயை செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: