புதன், 12 ஜூலை, 2023

காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும்”- கிருஷ்ணசாமி

மின்னம்பலம்  - Jegadeesh : தமிழகத்தில் காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் “குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம்” எனும் புத்தகத்தை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் 1971 ஆம் ஆண்டு வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது, 1971 ல் கலைஞர் மதுக்கடைகளை அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் அரசே மது விற்பனை செய்து வருகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழக மக்கள் போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். மதுவுக்கு இளைஞர்கள் அதிக அளவில் அடிமையாகி வருகின்றனர், டாஸ்மாக்கில் 2 வருடத்தில் 1 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் குறித்து ஆளுநரிடம் மே 10 ல் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக பார்கள் நடைபெற்று வருகிறது. 100 க்கு 60 சதவீதம் மட்டுமே ஆயத்தீர்வை வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசு காலை 7 மணிக்கு மதுபான கடைகளை திறக்க எண்ணியுள்ளது. காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “டாஸ்மாக் கடைகளை நடத்துவது குறித்து தமிழக அரசு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், குடிப்பழக்கத்தால் பல்வேறு வகையான பிரச்சினைகள் வருகிறது, இந்தியா அளவில் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

திமுக எதிர்வரும் தேர்தல்களை சந்திக்க வேண்டும் என்றால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களை விட்டு வெகு தூரத்திற்கு சென்று விட்டது. தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க கூடாது. மது நோய் எதிர்ப்பு சக்திகளை குறைக்கும். போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் யார் என காவல்துறைக்கு நன்றாக தெரியும்” என்றார் கிருஷ்ணசாமி.

தொடர்ந்து பேசிய அவர், “மது விற்பனை பணத்தில் திமுக கட்சியை வளர்த்து வருகிறது. கள்ளுக் கடைகளால் மக்கள் பாதிக்கப்படுவார்கள், மாநில அரசு மத்திய அரசு மீது பல வகையான குறைகளை கூறியது. திமுக 505 வாக்குறுதிகளை கொடுத்தது, திமுக ஏன் நீட் தேர்வுகளை ரத்து செய்யவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படும் என திமுக அறிவித்தது. 2 1/2 ஆண்டுகள் ஆகியும் 1000 ரூபாய் கொடுக்கவில்லை, 12 விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமைத் தொகை கொடுப்பது தவறு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமைத் தொகை கொடுக்க வேண்டும். 2 1/2 ஆண்டுகள் நிலுவைத் தொகையுடன் உரிமைத் தொகை கொடுக்க வேண்டும்.

திரைப்படங்கள் வாயிலாக பழைய சமூகப் பிரச்சினைகள் படமாக்க கூடாது. திரைப்படங்களில் அருவா கலாச்சாரம், சாதிய தூக்கல் தாக்குதல், ஆபாசம், வன்முறை இருக்க கூடாது. ஆளுநரை திரும்ப பெற முடியாது.

முதல்வர் போட்ட கடிதம் மட்டுமே திரும்பி வரும். மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டு வரும் பொழுது மக்களிடம் விளக்கம் கொடுக்க வேண்டும். மக்களிடம் புரிய வைக்காமல் ஒரு புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது” என்று கூறினார்.

இராமலிங்கம்

கருத்துகள் இல்லை: