செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

மாட்டு தீவன ஊழல்: லாலு குற்றவாளி என அறிவிப்பு!

 மின்னம்பலம் : : மாட்டு தீவன ஊழல் தொடர்பான ஐந்தாவது வழக்கிலும் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1990ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 950 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் ஏற்கனவே அவர் குற்றவாளி என விசாரணை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.


முதல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாவது வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்றாவது வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் நான்காவது வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்டது.

தற்போது ஜாமீனில் உள்ள அவர் டெல்லியில் உள்ள தனது மூத்த மகளுடன் வசித்து வருகிறார். மேலும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மாட்டு தீவன ஊழல் தொடர்பான ஐந்தாவது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி எஸ்.கே.சஷி அளித்த தீர்ப்பில், டோரண்டா அரசு கருவூலத்தில் இருந்து சட்டவிரோதமாக 139.35 கோடி ரூபாய் அளவுக்கு பணம் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டது..

இன்று தீர்ப்பு வழங்குவதையொட்டி லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 98 பேரும் ஆஜராகினர். அவர்களில் 24 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட 34 பேருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் முன்னாள் எம்பி ஜெகதீஷ் ஷர்மா, அப்போதைய பொது கணக்கு குழு தலைவர் துருவ் பகத் ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லாலு பிரசாத் யாதவ் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மேலும் சிலருக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 21ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் இவர்கள் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கும் உரிமை பெறலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: