செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தீட்சிதரை தரிசனம் செய்யவிடாமல் மிரட்டும் சக தீட்சிதர்கள்? - சிதம்பரம் கோவிலில் பரபரப்பு

பறச்சின்னு சொல்லி திட்டினாங்க; 

தினகரன் :   சிதம்பரம் கோயிலில் சக தீட்சிதர் மீது தாக்குதல் தீட்சிதர்கள் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு: பெண் பக்தரும் போலீசில் புகார்
சிதம்பரம்:  சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர். இதுகுறித்து கோயிலைச் சேர்ந்த கணேஷ் தீட்சிதர் என்பவர் சக தீட்சிதர்களிடம் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேஷ் தீட்சிதர் (57) நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது சிற்றம்பல மேடை முன்பு சென்ற அவரை தடுத்து நிறுத்திய ராஜாசெல்வம் தீட்சிதர், சிவசெல்வம் தீட்சிதர் மற்றும் சபேஷ் தீட்சிதர் ஆகிய 3 பேரும் கோயில் விதிமுறைகளை மீறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் எப்படி சாமி கும்பிட வரலாம் என கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.



 இது குறித்து அவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 3 தீட்சிதர்கள் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சிதம்பரத்தில் உள்ள பழைய புவனகிரி சாலையை சேர்ந்த லட்சுமி என்கிற ஜெயஷீலா(36), நேற்று மதியம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அவர் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி கும்பிட முயன்றதாக கூறப்படுகிறது. உடனே தீட்சிதர்கள் சிலர் ஜெயஷீலாவை ஆபாசமாக திட்டி திருப்பி அனுப்பி உள்ளனர். இது குறித்து அவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எஸ்.சி. பிரிவை சேர்ந்த பெண்ணான தன்னை கோயில் தீட்சிதர்கள் ஆபாசமாகத் திட்டி சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பியதாக கூறியிருந்தார். இது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: