புதன், 16 பிப்ரவரி, 2022

லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!!

  thesamnet.co.uk - த ஜெயபாலன் : லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limited அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.

ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.   ராகுலன் லோகநாதன் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்றும் அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் இந்நிறுவனம் இயங்குகின்ற ஹரோ பகுதியில் வாழும் எஸ் செந்தூரன் எனத் தன்னை அறிமுகப்படுத்தியவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தானும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலேயே கல்விகற்றதாகவும், தாங்கள் சில சமயம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதாகவும் தானும் இவ்வாறான ஒரிரு சம்பவங்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு மேல் தன்னால் எதுவும் தெரிவிக்க முடியாது என்று மேலதிக தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.

அப்பகுதியில் நீண்ட காலமாக நிதி ஆலோசகராக வீடு வாங்குவதற்கான ஆலோசணைகளை வழங்குவது மோற்கேஜ் பெற்றுக்கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் அபி என்றொரு பெண் ரீமோட்கேஜ் இன்வெஸ்ற்மன்ற் என்று செயற்பட்டதாகவும் இதனால் சிலர் பாதிக்கப்பட்டதாக தனக்கு தெரியவந்ததாகத் தெரிவித்தார். இப்போதெல்லாம் ஊரை கொள்ளையடித்து ஏப்பம் விடும் சிலரும் மோட்கேஜ் செய்து தருகின்றோம் என்று கடைவிரிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.  

ராகுலன் லோகநாதன், அபி கணேசலிங்கம் (படங்கள்) ஆகிய இருவரும் ரீமோட்கேஜ் எடுத்து முதலீடுகளை மேற்கொண்டு லாபமீட்ட முடியும் என ஆசை வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டி இந்த வயோதிபத் தம்பதிகள் உட்பட சிலரை அவ்வாறு செய்ய வைத்துள்ளனர். ஆனால் முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டுவது என்பது பல்வேறு புறச் சூழல்களிலும் தங்கியுள்ளது. ஆனால் இந்த முதலீட்டை மேற்கொண்டவர்களுக்கு இதன் ஆபத்துக்கள் பற்றி சொல்லப்பட்டதா என்பதோ சம்பந்தப்பட்ட இருவருமே நிதி ஆலோசணைகளை வழங்கத் தகுதி உடையவர்களா என்பதும் உறுதிபடத் தெரியவில்லை.

ஆனால் இவ்விருவரும் ஒரு மேட்டுக்குடித்தன வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ராகுலன் லோகநாதன் பிரித்தானியாவின் மட்டுமல்ல உலகெங்கும் அறியப்பட்ட உதைபந்தாட்ட விளையாட்டு பிரமுகர் டேவிட் பெக்கத்துடன் நின்று எடுத்த புகைப்படங்களை எல்லாம் தன் முகநூலில் பரிமாறியிருந்தார்.

இத்தம்பதியினரின் சில படங்களும் அவர்களின் டாம்பீகமான வாழ்க்கையை வெளிப்படுத்தி நின்றன. ஆனால் இவர்களை நம்பி முதலீட்டை மேற்கொண்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களை நம்பி முதலிட்டவர்களுடனான சகல தொடர்புகளையும் ரகு – அபி தம்பதியினர் துண்டித்துள்ளதைத் தொடர்ந்தே இவ்விடயம் பொதுத் தளத்திற்கு வந்துள்ளது.

பிரித்தானியா குறிப்பாக லண்டன் சுதந்திரமான செயற்பாட்டுக்கான களமாக இருந்தாலும் இந்தச் சுதந்திரம் என்பது மோசடிகளுக்கான சுதந்திரமாகவும் இருக்கின்றது. இந்த மோசடிகளுக்கு நடைமுறை விதி முறைகளில் உள்ள ஓட்டைகளும் உதவுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். லண்டன் உலகின் நிதிப்பரிவர்த்தனையின் தலைநகரமாக இருக்கின்ற அதே நேரம் நிதி மோசடியாளர்களின் கூடாரமாகவும் இருக்கின்றது. உலக மோசடியாளர்கள் பலரதும் வாழ்விடமாகவும் லண்டன் இருப்பது ஒன்றும்; இரகசியமானது அல்ல. அவர்களுக்கு எதிராக பிரித்தானிய அரசும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. ரஷ்யாவின் பெரும் பணமுதலைகள் கூட பிரித்தானியாவிலேயே ஒழிந்து கொண்டுள்ளனர். பிரித்தானிய பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மத்திய கிழக்கு பணமுதலைகளுக்கு லண்டனில் கோடிக்கணக்கில் சொத்துப் பத்துக்கள் உள்ளன. தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனே தவறான வழிகளில் தனது வீட்டைத் திருத்துவதற்கான செலவை செலுத்த முற்பட்டு அம்பலப்பட்டு உள்ளார். இந்தப் பின்னணியிலேயே லண்டனின் மோசடிகளை அணுக வேண்டியுள்ளது. லண்டனில் மோசடிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. தமிழர்கள் மத்தியிலும் இம்மோசடிகள் நிறைந்துள்ளது.

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி; ஒரு மனிதனின் வாழ்வில் வீட்டைக் கட்டுவது அல்லது வாங்குவது திருமணம் செய்து கொள்வது என்ற இரு விடயங்களுமே மிக முக்கிய அம்சங்களாக கணிக்கப்படுவதை குறித்து நிற்கின்றது. அப்படியான கஸ்டங்களுக்கு மத்தியில் வாங்கிய வீட்டை முதுமைiயில் பறிகொடுப்பது என்பது மிகக் கொடுமையானது. அவ்வாறான ஒரு நெருக்கடியில் தமது முதுமையில் கணவன் அல்ஸ்மியர் என்ற மறதி நோய்க்கு ஆளாகிய நிலையில் வீட்டையும் இழக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். லண்டன் குரொய்டனில் வாழும் இத்தம்பதியினரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் சேகரித்து இருந்த கட்டு ஆவனங்களையும் தேசம்நெற் பார்வையிட்டு இருந்தது.

இன்றைய காலகட்டங்களில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு இலகுவான பொறிமுறையல்ல. பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளில் மனிதர்கள் நேர்மையாக பொறுப்போடு நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் நம்பினால் அதற்கு பாரிய விலையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இந்த வீடு வாங்குவது விற்பது தொடர்பில் சற்று அசந்தாலும் பாரிய இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வீடு வாங்கும் விற்கும் விடயங்களில் சட்டத்தரணிகளுக்கூடாகவே நிதிப் பரிமாற்றம் நிகழும். இவ்வாறான பரிமாற்றங்களில் சட்டத்தரணிகளே நிதியை கையாடிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது என்கிறார் கிழக்கு லண்டனில் மோற்கேஜ் ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து வருபவர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஜெயசீலன் – ராணி தம்பதியினரும் அடக்கம். இவர்கள் 100,000 பவுண்களை (3.3 கோடி ரூபாய்) சட்டத்தரணியிடம் இழந்தனர். மற்றுமொரு இளைஞர் வாங்காத வீட்டுக்காக மோற்கேஜ் கட்டிக்கொண்டுள்ளார்.

குரொய்டன் தம்பதியினரிடம் இருந்து பெற்ற 200,000 முதலீட்டுக்கான வருமானம் செப்ரம்பர் 2021இல் நின்று போனது. இது தொடர்பாக தம்பதிகள் ரெய்டன் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தா பணத்தை போடுகின்றோம் என்று சொல்லப்பட்டதேயல்லாமல் பணம் போடப்படவில்லை. மாதாந்தம் 1500 பவுண்களும் 400 பவுண்களுமாக 1900 பவுண் பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேசம்நெற்றை அத்தம்பதியினர் டிசம்பரில் தொடர்பு கொண்ட போது அத்தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு இருந்தது. ரெய்டன் நிறுவனத்துடனனா அவர்களுடைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இருந்தது. “தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலில்லை. மின் அஞ்சல்கள் பதிலளிக்கப்படவில்லை. தபால்களுக்கும் பதிலில்லை. ஹரோ விலேஜ் வேயில் இருக்கும் அந்நிறுவனத்திற்கு நேரடியாகப் போனபோது அது பூட்டிக்கிடந்தது. அருகில் உள்ள பிரபலமான ரெஸ்ரோறன்ருக்கு போனால் அவர்கள் புதிய வாடிக்கையாளர்களை அங்கு வரும்படி சொல்லி சந்திப்பதாக அறிந்தோம்” என அத்தம்பதியினர் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் தேசம்நெற் ராகுலன் லோகநாதன் மற்றும் அங்கு பணியாற்றியதாக சொல்லப்பட்ட அபி கணேசலிங்கம் ஆகியோரது தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தோம் ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய முகநூலூடாகவும் அவர்களுடைய நண்பர்களுடைய முகநூலூடாகவும் தொடர்புகொள்ள முயற்சித்து அபி கணேசலிங்கம் ரகு லோகநாதனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அந்நிலையில் அபி கணேசலிங்கம் தேசம்நெற்றை தொடர்பு கொண்டார்.

அவரிடம், முதலீடு செய்யலாம் என்று சொல்லி ரீமோட்கேஜ் எடுத்து கொடுத்து தற்போது அவர்கள் தங்கள் முதலீட்டுக்கான வருமானம் இல்லாமல் வீட்டை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அவர் உடனடியாகவே தனக்கும் ரெய்டன் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று விட்டார். அப்படியானால் நீங்கள் எப்படி பாதிக்க்பட்ட க்ளைன்ற்றோடு தொடர்பில் இருந்தீர்கள் என்று தேசம்நெற் கேட்டபோது தான் 2013 அளவில் அதில் வேலை செய்ததாகவும் தாங்கள் ரீமோட்கேஜ் போன்றவற்றை செய்து கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

அப்படியானால் பாதிக்கப்பட்டவர் எப்படி குறித்த முகவரியில் வந்து ரீமோட்கேஜ் பற்றி பேசியுள்ளார் என தேசம்நெற் கேள்வி எழுப்பியது. திரு பில்சாட் என்பவரே மோட்கேஜ் விடயங்களை கையாண்டவர் என்றார். அவரே அந்நிறுவனத்தின் பிரென்ஜைஸி எனத் தெரிவித்ததுடன் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால் அதன் பிரென்ஜைசர் யார் (தாய் நிறுவனத்தின் உரிமையாளர்) எனக் கேட்ட போது ராகுலன் என்றார். ராகுலன் உங்கள் கணவரா? என்று தேசம்நெற் சார்பில் கேட்கப்பட்ட போது. ‘ஓம்’ என்றார் அபி.

அப்படியானல் உங்கள் கணவருடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றி இருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவருடைய மோட்கேஜ் விடையத்தை நீங்கள் கையாண்டு இருக்கிறீர்கள்? என்று தேசம்நெற் தனது கேள்விகளைத தொடர்ந்தது. என்னுடைய கணவருக்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் பற்றி தனக்குத் தெரியாது அதனை அவரோடு தான் கதைக்க வேண்டும் என்றவர், ஆனால் தான் தனக்கு குழந்தை கிடைப்பதற்கு முன் வரை வேலை செய்ததாகவும், குழத்தைகள் பிறக்க 2013இல் வேலையை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் இல்லை. நீங்கள் சில மாதங்களுக்கு முன் வரை மின் அஞ்சல் தொலைபேசியூடாக தொடர்பில் இருந்துள்ளீர்கள் அதற்கான ஆதாரங்கள் தேசம்நெற் இடம் உள்ளது என்று தெரிவித்ததுடன் அவருடைய கணவரை தொடர்பு கொள்ளுமாறு தேசம்நெற் கேட்டுக்கொண்டது.

இச்செய்தி எழுதப்படும் வரை ராகுலன் லோகநாதன் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அபி கணேசலிங்கம் முதலும் கடைசியுமாக அன்றைய உரையாடலின் பின் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அந்த உரையாடலை அடுத்து ராகுலன் லோகநாதன் அபி கணேசலிங்கம் இருவரது முகநூல்களும் மூடப்பட்டது. அதேச சமயம் தேசம்நெற் அபி கணேசலிங்கத்துடன் உரையாடியதன் பின் பாதிக்கப்பட்ட சிலருடன் ரெய்டன் தொடர்பு கொண்டதாக தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஆபி கணேசலிங்கம் தேசம்நெற்க்கு கூறியதற்கு மாறாக அவர் பாதிக்கப்பட்ட தம்பதியரோடு யூன் 7 2021 மற்றும் ஒக்ரோபர் 4 2021 இல் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஜனவரி 18 2021 காலை 8:23 மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அதனால் அபி கணேசலிங்கம் 2013இற்குப் பின் வேலை செய்யவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது.

கம்பனி ஹவுஸ் ஆவணங்களின் படி ரெய்டன் நிறுவனத்தின் பெறுமதி வெறும் ஒற்றைத்தான ஆயிரத்திற்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட இந்த தம்பதியினர் ரெய்டனில் வைப்பீட்டுக்கு வழங்கிய முதலீடு முத்தான ஆயிரமாக இருந்தது. ரெய்டன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் வாங்கிய பணத்தை கஃப்லிங் என்ற நிறுவனத்திலேயே முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தங்களையே முதலான தொடர்பாளர்களாகவும் ரெய்டன் பதிவு செய்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மையான முதலீட்டாளர்களுக்கும் இடையே எவ்வித சட்ட ரீதியான தொடர்பும் இல்லை.

அபி கணேசலிங்கம் இல்லாத நேரங்களில் பிரியா, மேகா ஆகிய பெயர்களில் சிலர் மின் அஞ்சலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பையும் ரெய்டன் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு என்ன ஆனாது என்று தெரியாமல் இருண்ட எதிர்காலத்தோடு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இழக்கும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

கருத்துகள் இல்லை: