செவ்வாய், 21 செப்டம்பர், 2021

உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி- தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும்

 மாலைமலர் : தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவதற்கு சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளன.
சென்னை:  தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது.
புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. 23-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 25-ந்தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.


ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் களம் காண்கின்றன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது.


விஜயகாந்தின் தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்தே களம் காண்கின்றன.

இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவதற்கு சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளன. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் அமர்ந்து பேசி யார்-யாருக்கு எந்த இடங்கள் என்பது பற்றி முடிவெடுத்து உள்ளனர்.

இதன்படி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டியிடுகின்றன.

இதே போல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதாவும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கேட்டு பெற்று களம் இறங்குகிறது. த.மா.கா.வுக்கு குறிப்பிட்ட சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த இரண்டு கூட்டணிகளுக்கு போட்டியாக பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி பதவிகளில் தங்களை வெற்றி பெற வைக்குமாறு அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் கிராமப்புறங்களில் பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய பதவிகளை பிடிக்க அனைத்து கட்சி வேட்பாளர்கள் மத்தியிலும் கடும் போட்டி நிலவுகிறது.

கிராமப்புறங்களை பொறுத்தவரை அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு பெற்றவர்களே வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுடன் மற்ற கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் தங்களது சொந்த செல்வாக்கை காட்டும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 12-ந்தேதி எண்ணப்படுகிறது. அன்றே முடிவுகளும் வெளியாக உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் கிராமப்புறப் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் களை கட்டி காணப்படுகிறது

கருத்துகள் இல்லை: