செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

அண்ணா பல்கலை ரத்து செய்யப்பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

minnambalam : ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு துறைகளுக்கான மேற்படிப்புக்கு இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனிடையே இத்துறை படிப்புகளில் சேர்வதற்காக நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்திருந்த மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டுக்கு முறைக்குப் பதில் மத்திய அரசின் 49.9% இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற நிர்ப்பந்தித்தது நடப்பு கல்வியாண்டில் இரு மேற் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் மேற்குறிப்பிட்ட இரு படிப்புகளும் தொடர்ந்து நடத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. எனினும் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை சேர்த்து மாநில அரசின் இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்திப் படிப்பைத் தொடர்ந்து நடத்தவும், மேலும் 9 இடங்களை உருவாக்குவதற்கான அனுமதி தேவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில், மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஒப்புதல் தேவையில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையைப் பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: