திங்கள், 8 பிப்ரவரி, 2021

தோழி ஒருத்தி சொன்னாள் " நம்மளையும் சிஸ்டராக சொல்றாங்கடி" !

Shalin Maria Lawrence : · படித்தது கிறிஸ்தவ கல்லூரியில்.அங்கே வருடத்திற்கு ஒரு முறை தியான வகுப்புகள் மூன்று நாட்களுக்கு நடக்கும். கிறிஸ்தவ மாணவிகளுக்கு தியானத்தில் கலந்து கொள்ளுவது கட்டாயம். முதல் வருட தியானம் நிகழ்ந்த போது கல்லூரிக்கே செல்லவில்லை.இரண்டாம் வருடம் தியானத்தன்று கட் அடித்துவிட்டு கும்பலாக பெசன்ட் நகர் பீச்சில் சுற்றி கொண்டிருந்தோம். க்ரிஸ்த்வ தியான நிகழ்வுகள் இளம் வயதுக்கு ஏற்றதல்ல.த்யானக்கூடங்களின் உள்ளே சென்றால் குற்றஉணர்வை வைத்து கல்லங்கோல் ஆடி கொண்டிருப்பார்கள். நாமே ஏசுநாதரை இழுத்து கொண்டு போய் சிலுவையில் அறைந்தது போல பழியை போட்டு மூளையை பிரண்டுவது பாதிரியார்களின் பழக்கம். அதற்கு பயந்தே 18 வயதுக்கு மேல் அவைகளை அதிகமாக புறக்கணித்தோம்.
கல்லூரியின் மூன்றாம் வ்ருடம் மீண்டும் தியான வகுப்பு வந்தது.இந்த முறை இரண்டு சாய்ஸ்கள் கொடுக்கபட்டன.Charismatic and Non-charismatic. அதாவது எப்பொழுதும் போல நெஞ்சை குத்தி கொண்டு "என் பாவமே,என் பெரும்பாவமே" எனும் வகை,இன்னொன்று ஆட்டம் ,பாட்டம் ,விளையாட்டு கொண்டு ஆன்மீகத்தை அடைதல்.
முதல் நாள் இந்த புது வகை தியானத்திற்கு சென்றவர்கள் அதை பற்றி அங்களாய்த்து வைக்க இரண்டாம் நாள் கலந்து கொள்ளலாம் என்று ஆசையுடன் முடிவெடுத்தோம். கூடவே திங்க கேக்கும் ,பிஸ்கெட் பாக்கெட்டும், சமூசாவும் தருகிறார்கள் என்று கேள்வி பட்டதும் உற்சாகம் தொற்றி கொள்ள.கட் அடிப்பதாக இருந்த அத்தனை தோழிகளையும் ஒன்று சேர்த்து கும்பலாக சென்றோம்.
சொன்னபடியே தின்பண்டம் கொடுத்தார்கள்.பரபரப்பான சாமி பாட்டு ஒன்றிற்கு பிரபுதேவா டான்சில் வரும் பிண்ணனி டான்சர்கள் போல வளைந்து நெளிந்து தெறித்து ஆடினோம்.
ஓஹோ என்று இருந்தது. உள்ளுக்குள்ளே ஆன்மீகம் குட்டி டைனோசர் போல குடுகுடுவென்று ஓடியது.
சற்றே ஆசுவாசம் செய்ய சொல்லி ரவுண்டாக சேர்களை போட்டு அமர சொன்னார்கள். காவி உடையணிந்த கன்னியாஸ்திரி ஒருவர் வந்தார் .அவர் கூடவே இரண்டு பெண்கள் கைகள் நிறைய கழுத்து நீண்ட பணக்கார சிவப்பூ ரோஜா ஒற்றை மலரை கொண்டு வந்து எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் தந்தார்கள்.
எங்களுக்கு மகிழ்ச்சி இருப்பு கொள்ளவில்லை. உண்மையிலேயே கிறிஸ்தவம் தன் பழைய முறைகளில் இருந்து மாறுகிறது என்பது எங்களுக்கு அதீத மகிழ்ச்சியை தந்தது.
அப்பொழுது அந்த கன்னியாஸ்திரி நாங்கள் அமர்ந்திருந்த வட்டத்தின் நடுவில் வந்து நின்று கொண்டார்.அவர் கையிலும் ஒரு அழகிய ரோஜா இருந்தது.
அந்த ரோஜாவை மிகவும் பாதுகாப்பாக ,இரு பொக்கிஷத்தை போல அவர் கைகளில் அதை எடுத்து பேச துவங்கினார்
"இந்த ரோஜாவை பாருங்கள்.இது எவ்வளவு அழகாக இருக்கிறது. கடவுளின் படைப்பில் எவ்வளவு நுட்பம்? இந்த வடிவத்தையும், நிறத்தையும் பாருங்கள். இது ஒரு அற்புதமான கலை வடிவமாக தெரியவில்லையா உங்களுக்கு? இது எவ்வளவு இளமையாக இருக்கிறது, எத்தனை மலர்ச்சி... கடவுளின் படைப்பில் மிக சிறந்தது இல்லையா? நீங்களும் உங்கள் கையில் இருக்கும் மலரை பாருங்கள்"
நாங்கள் எங்கள் கையில் இருந்த அந்த மலரை வாசனை செய்து ரசித்து பார்த்தோம்.
கன்னியாஸ்திரி அப்படியே பேசி கொண்டே நடக்க துவங்கினார். அப்படியே ஒரு மாணவியின் பக்கத்தில் சென்ற அவர் அவள் கையில் இருந்த ரோஜாவை வெடுக்கென்று பிடுங்கி அதன் இதழ்களை கொத்தாக கிள்ளி வீசி எறிந்தார். ஒரு நொடி எல்லோருக்கும் சப்த நாடியும் அடங்கியது போலானது. "ஹா...." என்று பலர் அதிர்ந்து போய் சத்தம் வெளியே கேட்டது.
கன்னியாஸ்திரி பேச துவங்கினார்,"இதோ பாருங்கள் நீங்கள் கைகளில் ஏந்திய இந்த அழகு ரோஜா எப்படி நாசமாகி போனது பாருங்கள்.இதே போல் தான் கடவுளை விட்டுவிட்டு லவ்கீக வாழ்வில் குறிப்பாக திருமண வாழ்வில் ஈடுபட்டால் உங்கள் வாழ்க்கை. இந்த தலையிழந்த ரோஜா வாக தான் மாறும்.இறைவனின் படைப்பில் அழகான உங்கள் வாழ்க்கை நாசமாக போகும்.இறைவனுக்காக உங்கள் வாழ்க்கையை ஒப்பு கொடுங்கள்".
சொல்லி விட்டு கன்னியாஸ்திரி போட்டுவிட்டார். ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.சிலருக்கு கண்களில் தண்ணீர் தளும்பி நின்றது.அவர்கள் இன்னும் ரோஜாவின் சாவில் இருந்து மீளவில்லை என்று புரிந்தது.
தோழி ஒருத்தி சொன்னாள் " நம்மளையும் சிஸ்டராக சொல்றாங்கடி" !
அட பாவிகளா என்று மனதில் நினைத்து கொண்டு அந்த நிமிடமே அங்கிருந்து தப்பி பிழைத்து வெளியே ஓடி வந்தோம்.
எனக்கெல்லாம் அப்பொழுது எந்த ஆம்பளை சகவாசமும் கிடையாது. பார்க்க சுமாராக இருந்த காரணத்தினால் யாரும் ப்ரொபோஸ் செய்யவில்லை.எல்லா ஆண்களும் என்னை friend zone செய்திருந்தார்கள். ஒரு நல்ல பாய் பிரென்ட் பிடிப்பதே என் கனவாக இருந்தது.
மற்றவர்களுக்கு காதலர்கள் இருந்தார்கள்.அவர்கள் காலில் சூடு வைத்தாலும் கன்னியாஸ்திரி ஆக மாட்டார்கள் .
அன்றே முடிவெடுத்தோம். சமோசா என்ன,பிரியாணியே போட்டாலும் கன்னியாஸ்திரிகளின் கண்ணியில் சிக்க கூடாது என்று.
மறுநாள் கல்லூரியின் உள்ளே சென்றவர்கள் வலுக்கட்டாயமாக தியான வகுப்புக்கு அனுப்பட்ட செய்தி கிடைத்ததும் நானும் ,அதே கல்லூரியில் படிக்கும் என் சொந்தகாரியும் அப்படியே 29சி பஸ்ஸில் எஸ்கேப் ஆகி புரசைவாக்கம் அபிராமி தியேட்டர் வந்து நூன் ஷோ "சாமுராய்" படம் பார்த்தோம். சாப்பிட tiffin பாக்சில் புளி சோறு இருந்தது. "ஒரு நதி ஒரு பவர்ணமி " பாட்டுக்கு சீட்டிலேயே டான்ஸ் ஆடினோம்.டிக்கெட்டை கிழித்து போட்டோம்.நன்றாக இருந்தது.
காலம் போக போக எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.ஆண்டவர் படைத்த அதி அற்புதமான காதல் ,காமம்,ஈர்ப்பு இத்யாதி இவைகளை இல்லாத ஆன்மிகமா ?
இயற்கைக்கு மாறாக புலன்களை அடக்குவதில் படைத்தவனுக்கு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?
வாய்க்கு ருசியான பிரியாணியை செய்த chef அதை யாரும் சாப்பிட கூடாதென்று நினைப்பாரா? பின்பு இயற்கை மட்டும் எப்படி அதன் விதிகளை மீறுவதை விரும்பும்?
வாழ்க்கை என்பது ரோஜா பூ கிடையாது. உடல் என்பது ரோஜா பூ கிடையாது. உடல் முதலில் பூவே கிடையாது.பூ என்பது உடல்களை அடைவதற்காக இரு உயிர்கள் பகிர்ந்து கொள்ளுவது. இதில் ஒரு செடியில் ஒரு பூ போன்ற அபத்தங்களை எல்லாம் வேறு திரைபடங்களில் எழுதி உயிரை வாங்குகிற ஒரு கூட்டம்.
இந்த உலகம் எந்த கஞ்சாவை அடித்து இப்படி எல்லாம் யோசிக்கிறது?
ரோஜாவை விட செக்ஸ் நல்லது.
Nothing equals a good orgasm (food can be considered at times)
I wish there is a world sex day rather than the rose day .Truth to be told.Amen.

கருத்துகள் இல்லை: