சனி, 27 பிப்ரவரி, 2021

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
dailythanthi.com ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
சென்னை,நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ளார். 

காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக தமிழகத்தில் அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்... தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே பொதுமக்களிடையே ராகுல் காந்தி பேசுகிறார். அதன்பிறகு கடற்கரை சாலை வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதியில் உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் அங்கிருந்து முக்கானி, ஆத்தூர், சாகுபுரம், குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு வருகிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்கு செல்கிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.

அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. 

முன்னதாக இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டிருந்த அறிக்கையில், “ ராகுல்காந்தி 27 ந்தேதி தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், நாங்குநேரி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வார். 28-ந்தேதி பாளையங்கோட்டை, நெல்லை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஆதரவு திரட்டுவார். மார்ச் 1-ந்தேதி குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுவார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: