செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

ஸ்கூட்டியை மீட்கும் போது அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு!

ஸ்கூட்டியை மீட்கும் போது அடித்துச் செல்லப்பட்ட பெண்  உயிரிழப்பு!
minnambalam :புதுச்சேரியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டார். புதுச்சேரி மாநிலம் சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சசிகுமார் - ஹசீனா பேகம். சண்முகாபுரம் ஓடைப் பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் இரு சக்கர வாகனத்தை ஓடைக்கு அருகில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதுபோல ஹசீனா பேகம் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கிறார். புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோன்று சண்முகாபுரம் ஓடை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி இருக்கிறது.

இதனால் ஹசினா பேகம் தனது வாகனத்தை நீரிலிருந்து மீட்க முயன்றபோது தண்ணீரின் வேகம் காரணமாக இரு சக்கர வாகனத்துடன் அவரும் அடித்துச் செல்லப்பட்டார்.

அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்பதற்குள் அவரை வெள்ளநீர் இழுத்துச் சென்றதில் மாயமானார்

இதையடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறையினரும் கோரிமேடு தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து மாயமான ஹசினா பேகத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேர தேடலுக்குப் பிறகு ஹசினா பேகத்தின் இருசக்கர வாகனம் மட்டும் மீட்கப்பட்டது. ஆனால் அவரது நிலை என்ன ஆனது என்பது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை விரைவில் மீட்டுத்தரக் கோரி சண்முகாபுரம் பகுதியில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்த நிலையில் இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள கனகன் ஏரியில் ஹசினா பேகத்தின் உடலைத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். வெள்ளத்திலிருந்து தனது வாகனத்தை மீட்க சென்ற பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதால் சண்முகபுரம் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மழை வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: