செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

தமிழ்நாட்டின் மொத்த கடன் 5.70 இலட்சம் கோடி! பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் 62 ஆயிரம் ரூபாய் கடன்

கமிஷன் பெற்றே தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி கடன்" முதல்வர் மீது ஸ்டாலின்  புகார்! - TopTamilNews
Vivekanadan T : · திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்திய முக்கிய பேச்சுகள்
1. ரூ.5.70 லட்சம் கோடி கடன், பிறக்கும் குழந்தையின் தலையில் ரூ.62 ஆயிரம் கடன் சுமை, ஆட்சியாளர்கள் நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.
2. திமுக ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டுவிட்டது.
கரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது.
3. தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து - அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்வர்.
அதிமுக ஆட்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் 78,854.25 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
2011 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் நிதி நிலை மிக மோசமானதன் விளைவாக 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி 4.6 சதவீதமாக குறைந்து சரிந்துவிட்டது என்று அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மத்திய பாஜக அரசின் 15ஆவது நிதிக்குழுவின் அறிக்கையே சொல்கிறது.

4. பெட்ரோல் - டீசல் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த 87 ஆயிரம் கோடி எங்கே போனது என்றே தெரியவில்லை?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி - ஜி.எஸ்.டி. வருவாய் வரி நிலுவைத் தொகை, நபார்டு நிதி, சர்வதேச நிதி நிறுவனங்கள் அளித்த நிதி அனைத்திலும் அமைச்சர்களும் - முதல்வரும் போட்டி போட்டுக் கொண்டு “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்று வாரிச் சுருட்டி, அப்பாவி மக்களின் வயிற்றில் ஓங்கி அடித்து இருக்கிறார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் - உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
5. வேலைவாய்ப்பும் இல்லை, தொழிற்சாலையும் இல்லை என்பதை விட - மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையைத் தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி - இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள். கஜானாவை முற்றும் காலி செய்தும், இன்னும் இந்த இருவரின் கோரப்பசி அடங்கவில்லை. எந்தத் திட்டத்தில் எவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்று பேயாட்டம் ஆடுகிறார்கள்.
கரோனா காலத்தில் வாங்கும் கடன்களிலும் கமிஷன் அடிப்பதை பழனிசாமியும், அவர் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் - நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சரவைப் பணி போல் செய்து - “கடைசி நேர டெண்டர்கள்” “கடைசி நேர கமிஷன்களுக்கு” தலையாய முக்கியத்துவம் கொடுத்து, முறைகேடுகளில் மூழ்கி இருக்கிறார்கள். தமிழக நிதி மேலாண்மை தறிகெட்டுப் போனதற்கு, இந்த இணைந்த ஊழல் கரங்கள்தான் காரணம்.
6. இப்படியொரு நிதியமைச்சரை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அந்த அளவிற்கு ஒரு கேடுகெட்ட நிதி நிர்வாகத்தை அளித்துள்ள முதல்வரையும் இதுவரை தமிழகம் பார்த்ததில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடனைச் சுமத்திவிட்டு - திமுக ஆட்சியில் இருந்ததை விட ஐந்து மடங்கு கடனை வாங்கி ஊழலில் திளைத்து சுகமான ஆட்சி நடத்தி - வெற்று அறிவிப்புகளைச் செய்தே காலம் கடத்தி, கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்வோரின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் - கூட்டத் தொடரையும் திமுக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் பேராதரவுடன், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் - “ஊழலுக்கு இணைந்த அதிமுகவின் இந்தக் கறைபடிந்த கரங்கள்” - ஒரு அரசின் செலவுகளில், கடனுக்கு வட்டி கட்டுவதே இரண்டாவது பெரிய செலவு என்ற அளவிற்கு நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து - தமிழகத்தின் நிதி நிலைமை - தமிழக மக்களுக்காக - தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக - என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும்.

கருத்துகள் இல்லை: