வியாழன், 25 பிப்ரவரி, 2021

சிங்கப்பூரில் சித்ரவதை செய்து மியான்மார் பணிப்பெண் கொலை.. தமிழ் தம்பதிகளும் மாமியாரும் சேர்ந்து செய்த கொடுமை

Cop's wife admits starving, torturing maid to death; Myanmar victim was  just 24kg in her final days, Courts & Crime News & Top Stories - The  Straits Times

சிங்கப்பூர்

husband-woman abused-starved-domestic-worker-till-she-died-interdicted-senior-police 

மியான்மார் நாட்டை சேர்ந்த இந்த சிறுமியை வீட்டு வேலைக்காக அமர்த்திய சிங்கப்பூர் வாழ் தமிழர்களான திரு.கெவின் செல்வம் (போலீஸ்காரன்) காயத்திரி தம்பதிகளும் கணவனின் தாயாரான பிரேமா நாராயணசாமியும் சேர்ந்து சித்திர வதை செய்து கொலை செய்துள்ளார்கள்.. இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 

 BBC :தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் ஒருவர் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.

காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். Gaiyathiri ,Prema Naraynasamy, Kevin Chelvam   

உயிரிழந்த பணிப்பெண் பியாங் இங்கை டொன், அவ்வப்போது காயத்ரி வீட்டில் தாக்கப்பட்டது தொடர்பான சில காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அக்காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததாக சிங்கப்பூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிபந்தனைகளை ஏற்று பணியில் சேர்ந்த பணிப்பெண்

கடந்த 2015ஆம் ஆண்டு மியான்மாரைச் சேர்ந்த பியாங் இங்கை டொன் என்பவர் பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண் தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்த நிலையில், காயத்ரியின் வீட்டில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.

கைபேசி பயன்படுத்தக் கூடாது, ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக் கூடாது என காயத்ரி விதித்த சில நிபந்தனைகளிளை ஏற்றுக் கொண்டார் பியாங் டொன். மற்றவர்களுடன் தனது பணிப்பெண் பேசக் கூடாது என்பதே காயத்ரியின் விருப்பம். அதனால் விடுப்பில்லாத நாட்களுக்கும் சேர்த்து பியாங் டொன்னுக்கு அதிக தொகை அளிக்க அவர் முன்வந்துள்ளார்.

காயத்ரி வீட்டில் அவரது கணவர், தாயார், இரு குழந்தைகள், வாடகைக்கு குடியிருக்கும் இருவர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

ணியில் சேர்ந்த சில தினங்களிலேயே பியாங் டொன் சரியாக வேலை பார்க்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளார் காயத்ரி. சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என்று பணிப்பெண் மீது புகார்களை அடுக்கியுள்ளார்.

தொடக்கத்தில் அவ்வப்போது உரக்க கத்தி பணிப்பெண்ணை திட்டித்தீர்த்த காயத்ரி, பிறகு உடல் ரீதியிலும் பியாங் டொன்னை துன்புறுத்த ஆரம்பித்தார். குறிப்பாக 2015, அக்டோபர் மாதம் முதல் அந்த அப்பாவி பணிப்பெண்ணுக்கு 'கொடுமைக்காலம்' தொடங்கியது.

குப்பைக்கூடையில் கொட்டப்படும் உணவைக் கூட சாப்பிட விடவில்லை

பணிப்பெண் பியாங் டொன் சிறு வயதுப்படம்

பணிப்பெண் பியாங் டொன் சிறு வயதுப்படம்

தமது குழந்தைகளையும் பணிப்பெண்ணையும் கண்காணிப்பதற்காக வீட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி இருந்தார் காயத்ரி. அவற்றில் பதிவான காட்சிகள்தான் பின்னாட்களில் அவரை போலிசில் சிக்க வைத்துள்ளது.

பணியில் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு பியாங் டொன் உடல் ரீதியிலான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளார். அடி, உதைக்கு மத்தியில் தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவு அல்லது சிறிதளவு சோறு ஆகியவைதான் அவருக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதிகம் சாப்பிடுவதாக குறை கூறிக்கொண்டே உணவின் அளவை வெகுவாக குறைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் காயத்ரி.

வேறு வழியின்றி வீட்டுக் குப்பைக் கூடையில் கொட்டப்படும் வீணாகிப்போன உணவை சாப்பிடுவதற்கும் தயாராக இருந்துள்ளார் பியாங் டொன். ஆனால் அதையும் கண்டுபிடித்து சாப்பிடவிடாமல் தடுத்துள்ளனர்.

தினமும் இரவு ஐந்து மணி நேரம் மட்டுமே பியாங் டொன் தூங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உறங்கினால் எட்டி உதைத்து எழுப்புவார் காயத்ரி.

குளிப்பது, கழிவறைக்குச் செல்வது என எதுவாக இருப்பினும் கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தனது பணிப்பெண்ணுக்கு காயத்ரி பிறப்பித்த கட்டளைகளில் ஒன்று.

14 மாத பணிக்காலத்தில் 15 கிலோ எடை குறைந்து போனார் பியாங் டொன். அதாவது பணிக்கு வரும் முன் இருந்த உடல் எடையில் 38 விழுக்காடு குறைந்து போனது.

பியாங் டொன் சுத்தமாக இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்த காயத்ரி, ஒரே சமயத்தில் பல முகக்கவசங்களை அணிந்தபடி வீட்டைச் சுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

தனது பணிப்பெண்ணின் முகத்தைப் பார்க்கக் கூட அவர் விரும்பவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தனது முதலாளி மற்றும் அவரது தாயாரால் பியாங் டொன் தாக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதே போல் ஒரே நாளில் பலமுறை தாக்குதலுக்கு ஆளாவதும் நிகழ்ந்தது.

கன்னத்தில் அறைவது, முகத்தில் குத்துவது, தள்ளிவிடுவது, உதைப்பது ஆகிய துன்புறுத்தல்களுடன், படுத்திருக்கும்போது எட்டி உதைப்பதும் கனமான பொருட்களைக் கொண்டு தாக்குவதும் கூட நடந்துள்ளது.

இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு உச்சபட்ச கொடுமை

பியாங் டொன் எதிர்பாராத சமயங்களில் அவரது தலைமுடியை மேல்நோக்கி இழுத்து, அங்குமிங்குமாக குலுக்கி, கொத்து முடியை காயத்ரி பிய்த்தெடுத்துள்ளார். ஒரு பொம்மையைப் போல் தனது பணிப்பெண் கையாண்டுள்ளார்.

கடந்த 2016 ஜூன் மாதம் பணிப்பெண் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொண்டிருந்த போது திடீரென வந்த காயத்ரி, இஸ்த்ரி பெட்டியை எடுத்து அவரது நெற்றியிலும் பிறகு கையிலும் சூடு வைத்துள்ளார்.

இதனால் பியாங் டொன் அலறித் துடிக்க, அப்போதும் அவர் சரியாக வேலை செய்வதில்லை என குத்திக்காட்டி உள்ளார்.

இதுபோன்ற துன்புறுத்தல்கள் நிறைந்த காணொளிப் பதிவுகள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அதில் பியாங் டொன் பரிதாபகரமான நிலையில் உடல் மெலிந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதும் பதிவாகி இருந்தது.

இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு பியாங் டொன்னுக்கு உச்சபட்ச கொடுமை நிகழ்ந்துள்ளது. அவரது இரு கைகளையும் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்துள்ளனர். அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் தனது அறையை விட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதில்தான் காயத்ரி கவனமாக இருந்துள்ளார்.

2016 ஜூலை 25ஆம் தேதி இரவு சுமார் 11.40 மணியளவில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பியாங் டொன்னை ஓங்கி குத்திய காயத்ரி, வேகமாக வேலைகளைச் செய்யுமாறு திட்டியுள்ளார்.

பின்னர் கோபம் குறையாமல் அவரது முடியைப் பிடித்து இழுத்தபோது பியாங் டொன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போதும் காயத்ரி விடவில்லை.

பின்புறமாக கீழே விழுந்ததால் எழ முடியாமல் பியாங் டொன் தத்தளிக்க, தனது தாயார் பிரேமாவை அழைத்துள்ளார் காயத்ரி. அதன் பின்னர் இருவருமாகச் சேர்ந்து பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பிரேமா தன் பங்குக்கு பியாங் டொன்னை சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என்று வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமாக இழுத்துச் சென்றபடியே தாக்கியுள்ளார்.

பியாங் டொன் வயிற்றில் காயத்ரி எட்டி உதைக்க, பிரேமா முகத்தில் குத்தியதுடன் கழுத்தையும் நெரித்துள்ளார்.

ஈரத்துணி, பட்டினி, காயங்களால் ஏற்பட்ட வலியுடன் கண்மூடிய பியாங் டொன்

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் எந்தவித எதிர்ப்பும் காட்டாத அந்த பணிப்பெண் தனக்கு இரவு உணவு கிடைக்குமா என்று கேட்க, ஏற்கெனவே உணவு கொடுத்தாயிற்று என்று கூறியுள்ளார். மேலும் இரவு தூங்கும் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று கூறி உரங்கச் செல்லுமாறும் பணித்துள்ளார்.

அன்றிரவும் பியாங் டொன்னின் கைகள் ஜன்னல் கம்பிகளுடன் கட்டப்பட்டன. துணிகளை துவைத்த போது அவர் அணிந்திருந்த ஆடைகள் ஈரமாகிவிட்டன. எனினும் உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அந்த நள்ளிரவு வேளையில் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் காயத்ரி.

ஈரத்துணியுடன், பட்டினியுடன், உடல் காயங்களால் ஏற்பட்ட வலி வேதனையுடன் கண் மூடியுள்ளார் பியாங் டொன். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அவரை எழுப்ப வந்துள்ளார் காயத்ரி.

பியாங் டொன் கண் விழிக்கவில்லை. இதனால் கோபமடைந்த காயத்ரி வழக்கம்போல் எட்டி உதைத்ததுடன், கழுத்திலும் தலையிலும் தொடர்ந்து குத்தியுள்ளார். இறுதியாக பணிப்பெண்ணின் தலைமுடியை தன் கைகளால் சுருட்டி பின்னோக்கி இழுக்க, பியாங் டொன்னின் கழுத்துப் பகுதியும் பின்னோக்கி இழுக்கப்பட்டது.

இந்த சித்ரவதைக்குப் பிறகும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. தன் தாயார் பிரேமாவை மீண்டும் அழைத்துள்ளார் காயத்ரி. இருவரும் சேர்ந்து பியாங் டொன்னுக்கு காப்பி போன்ற பானம் ஒன்றைப் புகட்ட முயன்றனர். சில்லிட்டுப் போயிருந்த உடலில் கை கால்களைத் தேய்த்துவிட்டு சூடேற்றவும் முயன்றுள்ளனர்.

எதற்கும் பலனின்றிப் போகவே மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார். காலை சுமார் 10.50 மணிக்கு வந்த மருத்துவர், பியாங் டொன்னை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார்.

பணிப்பெண்ணைத் தாக்கினீர்களா, அவருக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா என்று மருத்துவர் கேட்ட போது, பியாங் டொன் தவறி கீழே விழுந்ததாகவும், மருத்துவரின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை இயல்பாக இருந்ததாகவும் கூறி தாயும் மகளும் சமாளிக்கப் பார்த்துள்ளனர்.

முன்னதாக பியாங் டொன் அணிந்திருந்த உடையை மாற்றி அவரை வீட்டு சோஃபாவில் படுக்க வைத்திருந்தனர். அன்றைய தினம் காயத்ரியின் கணவர் கெவின் செல்வம் பணிக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அங்கு இல்லை.

போலிஸ் விசாரணையை அடுத்து காயத்ரி, அவரது தாயார், கணவர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பணிப்பெண்ணின் உடலில் அண்மைய 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் இருந்தது பிரேதப் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

ஜூலை 25 அன்று காலை காயத்ரி, பியாங்கின் கழுத்தை மீண்டும் மீண்டும் பின்னோக்கி இழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்ததால்தான் மரணம் நிகழ்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.

நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை காயத்ரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பணிப்பெண்ணைத் தாக்கியது தொடர்பாக காயத்ரியின் தாயாரும் கணவரும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.

தாய்மை அடைந்திருந்தபோது காயத்ரி கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 'ஓசிடி' எனப்படும் மனநலப் பிரச்சினையால் அவர் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி பியாங் டொன் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. எந்த மகனின் எதிர்காலத்துக்காக வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்தாரோ அந்த மூன்று வயது குழந்தையை மீண்டும் பார்க்காமலேயே கண்மூடிவிட்டார் பியாங் டொன்.

கருத்துகள் இல்லை: