வியாழன், 16 ஜனவரி, 2020

இலங்கை குடியுரிமை குறித்து நீங்கள் அறிந்ததும் அறியாததும்!

indianexpress.com   : 1964இல் விண்ணப்ப காலம் முடிவுற்ற நிலையில் 1,62,000 தமிழர்களுக்கு மட்டுமே இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியா 3,50,00 க்கும் அதிகமானவர்களுக்கு குடியுரிமை வழங்கியது.
: Story of Sri Lanka’s citizenship law : 2019ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் “புதிய குடியுரிமை சட்டம்” தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்தியா கடந்த காலத்தில் சிறப்பு காரணங்களுக்காக இந்தியாவிற்கு தப்பி ஓடிவந்த வெளிநாட்டவருக்கு சிறப்பு உரிமைகளின் கீழ் குடியுரிமை வழங்கியுள்ளது என்று கூறியிருந்தார்.  4.61 லட்சம் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை 1964-2008 காலங்களில் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இது 1964ம் ஆண்டு இலங்கையில் வாழ்ந்து வந்த இந்திய பூர்விக தமிழர்கள் குறித்து சாஸ்திரி-பண்டாரநாயக்கே இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டியுள்ளனர். வெளியிடப்பட்ட இந்த அறிக்கை அவ்வளவு துல்லியமானதாகவும் இல்லை. ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவினை மேற்கோள்காட்டுகிறது.
1948ம் ஆண்டு, நவம்பர் மாதம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட குடிமக்கள் சட்டம், இலங்கையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான பிளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும். அரசியல் தளங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க பெரும்பான்மை சமூகத்தினரான சிங்களர்களுக்கு மட்டுமே உரிமை அளிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இலங்கை மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக இடதுசாரி அமைப்புகளும் சேர்ந்து கொண்டு அவர்கள் வளர்ந்த விதம் அரசியல் சூழலில் பல்வேறு சிரமங்களை உண்டாக்கியது.
இலங்கையில் இருந்து 1964ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி இந்தியா வந்த தமிழர்கள் யாரும் தப்பி ஓடி வரவில்லை. பெரும்பாலானோர் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வாழ்ந்த இலங்கையில் இருந்து திரும்பி வருவதை விரும்பவில்லை. சில ஆண்டுகளாக நாடற்றவர்களாக இங்கும் அங்கும் வாழ்ந்தவர்களுக்கு 1987, 1993, மற்றும் 2003 ஆண்டுகளில் இலங்கை குடியுரிமை சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் விளைவாக குடியுரிமை கிடைத்தது. ஏன் என்றால் ஆளும் கட்சிகளுக்கு இம்மக்களின் வாக்குகள் தேவையாக இருந்தது.
1948ம் ஆண்டு போடப்பட்ட இந்த சட்டத்தின் விளைவாக எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் இலங்கை தமிழ் அரசு கட்சி உருவானது. பின்னர் அது தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியாக 1976ம் ஆண்டு உருப்பெற்றது. இறுதியில் தனி ஈழம் வேண்டுமென்று வடுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்பு நடந்தவையெல்லாம் வரலாறு.
பொலிட்டிகல் சயன்டிஸ்ட் அமிதா சாஸ்திரி “குடியுரிமை சட்டம் மக்கள் மத்தியில் இன வேறுபாடுகளை உருவாக்குவதற்காகவும், இலங்கையில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த சிங்கள மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் வகையில் தான் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார்”. இலங்கை தமிழ் சிறுபான்மையினரை பலியாக வைத்து இலங்கையில் இருந்த இரண்டு பெரும் கட்சிகள் (ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி) தங்கள் பக்கம் சிங்கள மக்களை ஈர்க்க முயன்றனர். இந்த சட்டம் தான் பிற்காலத்தில் (1970 மற்றும் 1980களில்) பிரிவினைவாதத்திற்கு ஆதரவு, இனக்கலவரங்கள் மற்றும் உள்நாட்டுப் போர் ஆகியவற்றை உருவாக்க காரணமாக அமைந்தது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள்

இவர்கள் இலங்கை வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழர்களில் இருந்து வித்தியாசப்படுபவர்கள். இங்கிலாந்து அரசு இலங்கையில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் இலங்கையின் மத்திய மற்றும் யுவா மகாணங்களில் உள்ள 5 மலை மாவட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். தற்போது அவர்கள் மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்த தருவாயில் மொத்தம் 8 லட்சம் மலையக மக்கள் அங்கே இருந்தனர். அவர்கள் தேயிலை தொழிற்சாலைகளின் முதுகெலும்புகளாக அங்கே செயல்பட்டனர். அரசு சார்பான வேலைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கிய அவர்கள், இடது சாரிகள் மற்றும் சங்கங்களின் மூலமாக தங்களின் உரிமைகளை தக்கவைத்துக் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
சுதந்திரத்திற்கு முன்னதாக, இலங்கையின் ஆளும் வர்க்கத்தினர் ஆங்கிலேயர்களிடம் குடியுரிமை, வாக்குரிமை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான கேள்விகள் குறித்து கடுமையான விவாதங்களை நடத்தின. இலங்கை சட்டமன்றத்திற்கான 1947 தேர்தல்களில், இலங்கை இந்திய காங்கிரஸ், ஆல் சிலோன் தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது . சி.ஐ.சி (Ceylon Indian Congress ) 7 இடங்களை வென்றது, இடதுசாரி கட்சிகள் 14 இடங்களை வென்றது, மேலும் 5 அல்லது 6 இடங்களில் வெற்றியை தீர்மானித்தது.
சிங்கள மேட்டுக்குடியினர் ஆதிக்கம் செலுத்திய ஐக்கிய தேசியக் கட்சி ( United National Party ) 95 இடங்களில் 42 இடங்களை வென்றது. இந்த தோல்வியை நியாயப்படுத்தும் வகையில், தமிழர்கள் விசுவாசமற்றவர்கள், உள்ளூர்வாசிகளின் வேலைவாய்ப்பினை தட்டிப் பறித்தவர்கள், வழியில் செல்லும் பறவைகள் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். இறுதியாக இலங்கையின் முதல் பிரதமர் சேனநாயக்கே, இலங்கை சுதந்திரம் அடைந்த உடனே 7 மாதங்களில் இலங்கை குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றினார்.
பதிவு செய்யப்பட்டவர்கள் அல்லது ஆண் சமூகத்தின் ஒரு உறுப்பினர் இலங்கை பூர்வகுடியாக இருத்தல் – என்பதன் அடிப்படையில் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. திருமணமாகாதவர்கள் 10 ஆண்டுகள் இலங்கையில் வசித்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களை பதிவு செய்யப்படும் போது காட்ட வேண்டும். அதே போன்று மணமானவர்கள் 7 ஆண்டுகள் இலங்கையில் தங்கியதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். ஆனால் இலங்கை மலையக தமிழர்கள் பெரும்பாலானோர் படிக்காதவர்கள், அவர்களிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை. மொத்த தமிழ் சமூகமும் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள்.
1949ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தானிய குடியிருப்பாளர்கள் சட்டம் ( Indian & Pakistani Residents’ Act of 1949) குறிப்பிட்ட அளவு வருமானம் கொண்டவர்களை காப்பாற்றியது. 1949ம் ஆண்டு இலங்கை குடிமக்கள் மட்டுமே வாக்களிக்கும் நிலை உருவாகியது. இலங்கை தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு 7 இந்திய தமிழர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள். 1952ல் ஒருவரும் இல்லை. ஆகஸ்ட் 5, 1951ம் ஆண்டு, இரண்டு ஆண்டு கெடு நிறைவுற்றது. 2,37,000 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டது. 1964ம் ஆண்டு, மக்கள் தொகை அதிகரிப்பால் இந்திய தமிழர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது. அதில் 1,40,000 பேருக்கு மட்டுமே பாகிஸ்தானிய குடியிருப்பாளர்கள் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியாவில் 2,50,000 மக்களை இந்தியா இந்திய குடிமக்களாக அங்கீகரித்தது.
இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு இலங்கை தமிழ் மக்கள் விவகாரம் பெரிய பிரச்சனையாக உருமாறியது. 1947ம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு, சேனநாயக்கேவிடம், இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் (1948-ன் படி ஏழு ஆண்டுகளால இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கு) குடியுரிமை அளிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை தோல்வி அடைந்தது. நாடற்ற இலங்கை வாழ் இந்திய தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தான் அவர்கள் உடனே இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேரு ஒதுக்கினார்.
1962 சீனாவுடனான போருக்குப் பிறகு, பிரதமர் சாஸ்திரி இலங்கையுடனான உறவை சரிசெய்ய ஆர்வமாக இருந்தார். அவர் பண்டாரநாயக்கரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார், மேலும் இலங்கை 3,00,000 மலையக தமிழர்களையும் அவர்களின் குடும்பத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்தியா 5,25,000 தமிழர்கள்ளையும் அவர்களின் குடும்பத்தினரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மீதமுள்ள 1,50,000 தமிழர்களின் நிலை பின்னர் தீர்மானிக்கப்பட இருந்தது. சுமார் 4,00,000 பேர் இந்தியாவின் குடியுரிமைக்கு வேண்டாவெறுப்புடன் விண்ணப்பித்தனர்; 6,30,000 பேர் இலங்கைக்கு விண்ணப்பித்தனர். 1964இல் விண்ணப்ப காலம் முடிவுற்ற நிலையில் 1,62,000 தமிழர்களுக்கு மட்டுமே இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. அதே காலகட்டத்தில், இந்தியா 3,50,00 க்கும் அதிகமானவர்களுக்கு குடியுரிமை வழங்கியது.
மேலும் படிக்க : ‘சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!
இலங்கையின் யுனைடட் நேசன் பார்ட்டியில் இருந்து SWRD பண்டாரநாயக்கே 1951ம் ஆண்டு பிரிந்து வந்தார். பின்பு இலங்கை சுதந்திர கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்தார். 1956ம் ஆண்டு இலங்கையின் பிரதமரானார் அவர். தொடர்ந்து தமிழர்களால் எதிர்ப்புக்கள் எழுந்தன, மற்றும் செல்வநாயக்கத்தின் கட்சி தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மற்றும் கிழக்கிற்கு சுயாட்சி கொண்ட புதிய கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது. 1957 “பண்டா-செல்வா ஒப்பந்தம்” கையெழுத்தானது. UNP கட்சி கடுமையாக எதிர்த்தது. இனக் கலவரம் வெடித்தது, SWRD ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டார்.
இனக்கலவரம் அப்போது எல்லை கடந்த ஒன்றாக இருந்தது. அதனை தொடர்ந்து அந்த ஆண்டுகளில் சுதந்திரம் கேட்டு விடுதலைப் புலிகள் போரினை துவங்கினர். 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தாலும், ஆயிர கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் இந்த போரினால் மிகப்பெரும் பாதிப்பை அடைந்தனர்.

கருத்துகள் இல்லை: