வெள்ளி, 3 ஜனவரி, 2020

உள்ளாட்சித் தேர்தல்: திமுக வெற்றி முகம்!


 உள்ளாட்சித் தேர்தல்: திமுக வெற்றி முகம்!மின்னம்பலம் : தமிழகத்தில் இரு கட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜனவரி 2) காலை தொடங்கி இப்போது வரை நீடித்து வருகிறது. இன்று (ஜனவரி 3) பகலில்தான் முழு முடிவுகள் வெளியாகும் என்றாலும் ஒவ்வொரு கட்டமான தேர்தல் முடிவுகள் தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் போன்ற கட்சி சின்னமில்லா இடங்களுக்கான வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய கட்சிகளுக்கு இடையே நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பல இடங்களில் பல்வேறு வகையான தகராறுகளால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதும், நடப்பதும், பின் நிறுத்தப்படுவதாகவுமே இருக்கிறது.

நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 5,090 இடங்களில் 1,529 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் திமுக 688 இடங்களிலும், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 37 , இந்திய கம்யூனிஸ்டு 20, மார்க்சிஸ்ட் 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக 518 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான பாஜக 22, தே.மு.தி.க. 30 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. பிற கட்சிகள் 208 இடங்களில் வெற்றிபெற்றன. இவற்றில் அமமுகவே அதிக இடங்களில் ஜெயித்திருக்கிறது.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி இடங்களிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபெற்று வருகிறது. மொத்தம் 515 மாவட்ட கவுன்சிலர்களில் நேற்று நள்ளிரவு வரை 22 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. 14 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அதிமுகவுக்கு 6 இடங்களே கிடைத்தன.
வெற்றி பெற்ற நிலவரம் இது என்றால் முன்னிலை நிலவரத்தில் திமுகவே அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: