திங்கள், 30 டிசம்பர், 2019

சொத்துகள்: சிறையிலிருந்து சசிகலா எழுதிய கடிதம்!

சொத்துகள்:  சிறையிலிருந்து சசிகலா எழுதிய கடிதம்!மின்னம்பலம் : பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட கரன்சித் தாள்களைப் பயன்படுத்தி சசிகலா 1,674 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கியிருக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. இதற்கு பதிலாக தானும் ஜெயலலிதாவும் பங்குதாரர்கள் என்று சசிகலா தெரிவித்ததையும் வருமான வரித்துறை பதிவு செய்திருந்தது. இந்நிலையில்... இது தொடர்பாக சில சாட்சிகளின் வாக்குமூலங்களோடு சசிகலா தன் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் ஆதாரமாக இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் 2017-ல் நவம்பர் மாதம் சோதனை நடத்தியபோது அந்த கடிதம் கிடைத்தது என்று வருமான வரித்துறை கூறுகிறது. பெங்களூரு ஜெயிலில் இருந்த சசிகலா செப்டம்பர் 2017-ல் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அதில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அந்தக் கடிதம் பற்றி விவேக்கிடம் கே
ட்டபோது, ‘அந்தக் கடிதத்தை 2 மாதத்துக்கு முன்பு யாரோ ஒரு நபர் எனது வீட்டு வாசலில் இருந்த காவலாளியிடம் கொடுத்து விட்டு சென்றனர். காவலாளி அதை என்னிடம் கொடுத்தார். அதை நான் வீட்டில் வைத்திருந்தேன். எந்தக் காவலாளி என்று நினைவில் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.
சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் அந்த கடிதத்தில் இருப்பது சசிகலாவின் கையெழுத்துதான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் வருமான வரித்துறை கூறியிருக்கிறது. வழக்கறிஞர் செந்திலிடம் வருமான வரித்துறையினர் விசாரித்தபோது, ‘ ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு செல்லாத பணத்தை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக என்னிடம் சில தகவல்களை சசிகலா கூறினார். அதில் உள்ள விவரங்கள் தான் கடிதத்தில் இருக்கின்றன’ என்று கூறியதாக வருமான வரித்துறை கூறுகிறது.
2017-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் விவேக்கின் வீட்டுக்கு சென்றபோது விவேக் இந்த கடிதத்தை தன்னிடம் காட்டியதாகவும் செந்தில் கூறியிருக்கிறார். இந்தக் கடிதத்தை சிறையில் இருந்துதான் சசிகலா எழுதியிருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கருதுகிறது,. அப்படியென்றால் சிறை அதிகாரிகள் கடிதத்தை தணிக்கை செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

கருத்துகள் இல்லை: