செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஜப்பானில் ஒதுங்கும் கொரியா படகுகள் ...2 தலைகள்... 5 உடல்கள்..


படகுபடகு2 தலைகள்... 5 உடல்கள்.. கொரிய எழுத்துகள்.. ஜப்பான் தீவில் கரை ஒதுங்கிய `பேய்ப் படகு'! vikatan.com/ - ராம் பிரசாத் : ஜப்பானில் கரை ஒதுங்கிய மர்மப் படகில் கிடந்த சடலங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜப்பானின் சாடோ தீவு அருகே நேற்று மர்மப் படகு ஒன்று கரை ஒதுங்கியது. வெள்ளிக்கிழமையன்றே படகு சாடோ தீவுக்கு அருகில் மிதந்துகொண்டிருந்ததைப் பொதுமக்கள் கவனித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக மர்மப் படகுக்கு அருகே செல்ல முடியாத சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில்தான் படகானது சனிக்கிழமை மாலை தரைதட்டியது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அவர்கள் அங்கு கண்ட காட்சி அதிர்ச்சிக்குள்ளாகியது.

மர்மப் படகில் 5 சடலங்கள் சிதைந்த நிலையில் இருந்துள்ளன. வெட்டப்பட்ட நிலையில் இரண்டு தலைகள் இருந்துள்ளன. பிரேதப் பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். படகு பாதி உடைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. படகில் கொரிய மொழியில், எண்களும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. படகில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கொரிய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த மாதத்தில் சாடோ தீவில் ஒதுங்கும் இரண்டாவது படகு இது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
படகுஜப்பான் மக்களுக்கு இந்த மர்மப் படகுகள் பழக்கமாகிவிட்டன. வறுமையின் காரணமாக கொரிய நாட்டிலிருந்து பிழைப்பைத் தேடி வெளியில்வரும் மக்கள் மோசமான வானிலை காரணமாக அலைகளில் சிக்கி உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. 2016-ம் ஆண்டு மட்டும் சுமார் 44 படகுகள் சடலங்களோடு ஜப்பானில் கரை ஒதுங்கியுள்ளன.
கரை ஒதுங்கும் படகுகளில் அழுகிய நிலையிலும், எலும்புக்கூடுகளாகவும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் கரைஒதுங்கும் கொரியப் படகுகளின் எண்ணிக்கை வருடம் வருடம் அதிகரித்து வருகிறது. ஜப்பான் ஊடகங்கள் இதனை `பேய்ப் படகு' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றனர். இவையெல்லாம் வடகொரியா நாட்டைச் சேர்ந்த படகுகள் என்றும் ஜப்பான் ஊடகங்கள் கூறியுள்ளன.
நாட்டின் உணவு விநியோகத்திற்காக அதிகப்படியான மீன்களைப் பிடிக்க மீனவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் இதன்காரணமாக கொரியப் படகுகள் கடல்களில் நீண்ட நாள்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோசமான படகுகள் கடலில் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிப்பதில்லை. மோசமான வானிலை, பலத்த காற்று ஆகியவற்றின் காரணமாக அவை கடலில் உடைந்துவிடுகின்றன.
மீன் பிடிக்க வருபவர்கள் சடலங்களாகத்தான் கரை ஒதுங்குகின்றனர் என ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் வடகொரியாவிலிருந்து வேறு நாடுகளுக்குத் தஞ்சமடைய செல்லும் மக்கள் கடலில் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. வடகொரியா- ஜப்பான் இடையே சுமுகமான உறவு இல்லை. ஜப்பான் எல்லையில் ரோந்துக் கப்பல்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை: