ஞாயிறு, 29 டிசம்பர், 2019

BBC : பிரியங்கா காந்தி: “உத்தர பிரதேச காவலர்கள் என் கழுத்தைப் பிடித்து திருகினர்”.... வீடியோ

லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருகியதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியைக் கைது செய்ததற்காக அவரை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்ற போது இவ்வாறு நடந்ததாகக் கூறினார் பிரியங்கா காந்தி.
76 வயதாகும் ஓய்வுபெற்ற அதிகாரி எஸ். ஆர். தாராபுரி இந்த வாரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டார். அவரை சந்திக்க அவர் வீட்டுக்குச் செல்வதற்காக முதலில் இருசக்கர மோட்டார் வாகனத்தின் பின்னே அமர்ந்தும் பின்னர் நடந்தும் சென்றார் பிரியங்கா காந்தி. அவருடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் இருந்தனர்.
பிரியங்கா காந்தி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு காணொளியில் அவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவருடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த காணொளிக்கு மேலே அவர், "உத்திர பிரதேச மாநில காவல் துறையினர் என்ன செய்கிறார்கள்? இப்போது நாங்கள் எங்கேயும் சென்று வருவதுகூட தடை செய்யப்படுகிறது. நான் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சமூக சேவகர் தாராபுரியின் வீட்டுக்குச் சென்றேன். உத்திர பிரதேச மாநில காவல்துறையினர் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடியதற்காக அவரை கைது செய்தனர். இப்போது ஒரு பெண் காவல்துறை அதிகாரி என் கழுத்தைப் பிடிக்கிறார். ஆனால் என்னுடைய லட்சியம் திடமானது. காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான அனைத்து குடிமக்களுடனும் நான் நிற்கிறேன். " எனப் பதிவிட்டுள்ளார்.

மறுக்கும் காவலர்

இதனை அந்த காவலர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண் காவலர் மேலதிகாரிகளுக்கு கொடுத்துள்ள விளக்கக் கடிதத்தில், பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
"காங்கிரஸார் அனுமதி வாங்கிய பாதையில் செல்லாமல், வேறு பாதையில் சென்றனர். அதனால் அவர்களை தடுக்க வேண்டியதாகிவிட்டது." என்று விளக்கம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: