ஞாயிறு, 18 அக்டோபர், 2015

சாருஹாசன்: தமிழனை நடிகர் சங்கம் எப்பவாவது மதித்துள்ளதா? தமிழ்நாட்டில் சினிமா ஆட்சி நடக்கிறது..இனி கிரிகெட்டு ஆட்சி நடக்கும்..

சென்னை: தேர்தல் என்ற பெயரில் நடிகர் சங்கத்தினர் இரண்டாகப் பிரிந்து, பிளந்து அடித்து நாறிக் கொண்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தைப் போட்டு வறுத்தெடுத்திருக்கிறார் நடிகர் சாருஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன். தமிழில் நடித்ததை விட பிற மொழிப் படங்களில் இவர் நடித்ததே அதிகம். அதற்கான காரணத்தையும் சேர்த்து விலக்கி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார் சாருஹாசன். இதுகுறித்து சாருஹாசன் எழுதியுள்ளதாவது... நான் நடிகர் சங்கத்தின் ஆயுள் சந்தாதார். ஆனால் சங்க தேர்தலில் ஓட்டு போட செல்லவில்லை. யார் அழைக்கிறார்கள்? அவர்கள் என்னை ஒரு நடிகனாக எற்று கொண்டதில்லை. நானும் சினிமாவை இந்தியனின் பெருமையை வளர்க்கும் ஒரு சமூக நல தொண்டு நிறுவனமாக கருதுவதில்லை. வக்கீல் தொழில் செய்யும்போது ஒரளவு ஆங்கிலம் பேசியது தொழில் வளர்ச்சிக்காக. அதை தவிர எனக்கு தமிழ் ஒன்றுதான் பேசத் தெரியும். ஆனாலும் தமிழ் சினிமாவில் நடிக்க நான் அழைக்கபட்டதே இல்லை.
மலையாள கன்னட சினிமாக்களில் நடிக்கதான் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் நடப்பு வேறு மொழியில் இருந்து வந்தவர்களைதான் சிறந்த நடிகர்களாக ஒப்புக்கொள்வது. அந்த காலத்தில் மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட எம்ஜிஆர் அவர்கள். அதன் பின் அந்த அளவு சிறந்து விளங்கியது நமது சூப்பர் ஸ்டார். ஆக எப்போதுமே மற்ற மொழி நடிகர்கள்தான் தமிழ் சினிமாவில் அதிகம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் பண்பு அது. மதத்தில்கூட தமிழ் கடவுளைவிட வட இந்தியாவின் யாதவ கடவுளைத்தான் சிறப்பாக வணங்குகிறார்கள். தங்கள் உழைப்பின் சரி பாதியை சினிமா கொட்டகைகளுக்கு கொடுத்து, அரை வயிறு நிரப்பி பிள்ளைகளைவிட சினிமாவுக்கு செல்பவர்கள் அதிகம் ஆனதால் இங்கே சினிமா ஆட்சி நடக்கிறது. அடுத்தது கிரிக்கெட். நேற்று காலை சென்னையில் கவுன்டர் திறந்தவுடன் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள் எல்லாம் விற்று போய்விட்டன. அனேகமாக சினிமா ஆட்சி முடிந்தவுடன் ஒரு கிரிக்கெட் ஓபனிங் பேட்ஸ்மன் முதல் மந்திரியாகவும் வேகபந்து வீச்சாளர் நிதி மந்திரியாகவும் ஆகலாம். நாடு உருப்படுமா? மன்னித்து விடுங்கள். கிரிக்கெட் மீது கோபமில்லை. கல்லூரி கிரிக்கெட்டில் மூன்று கல்லூரிகளிலும் நான் ஒரு வேகபந்து வீச்சாளன். ஒரு கல்லூரியில் கிரிக்கெட் கேப்டன். பின்னாளில்தான் நடிகன். அதிலும் நீங்கள் ஒப்புக்கொள்ளாத ஒரு தேசீய விருதும் பிலிம் ஃபேர் விருதும் பெற்றவன். என்னை யாரும் யோசனை கேட்க போவதில்லை. நானும் ஒரு நலிந்த நடிகன்தான். நடிகர் சங்க தேர்தல் முடிந்ததும் இரு அணி பெரியவர்களும் கூடி பேசி என் போன்ற சிலகாலமே உயிருடன் இருக்க போகிறவர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சாருஹாசன்.

Read more at:/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: