சனி, 2 மார்ச், 2013

தமிழக அமைச்சருக்கு கழிவுநீரால் "அபிஷேகம்'

சென்னை: பழங்குடியின கல்லூரி மாணவியருக்கான விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற, ஆதி திராவிட அமைச்சரை வரவேற்றவர்கள், சால்வைக்கு பதில் புடவை தர, வளாகத்தை சுற்றிப் பார்த்த அமைச்சர் உள்ளிட்டவர் களுக்கு, மாணவியர் கழிவு நீர் அபிஷேகம் நடத்த, அமைச்சர் பங்கேற்ற விழா, கலாட்டாவாக நடந்து முடிந்தது.சென்னை, ராயபுரம், கல்லறை சாலை சந்தில் உள்ள, பழங்குடியின கல்லூரி மாணவியருக்கான விடுதி திறப்பு விழா மற்றும் விடுதிக்கான சமையல் பாத்திரங்கள், மாணவியருக்கு போர்வை உள்ளிட்டவை வழங்கும் விழா, நேற்று நடைபெற்றது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், முன்னாள் சபாநாயகர் ஜெயகுமார், பழங்குடியின நலத்துறை இயக்குனர் கிரிதர், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சீதாலட்சுமி உள்ளிட்டோர், விடுதி அறைகளை திறந்து வைத்து பார்வையிட்டனர். முன்னதாக அமைச்சர் மற்றும் முன்னாள் சபாநாய கரை வரவேற்ற அதிகாரிகள், சால்வைக்கு பதில் புடவையை அணிவித்து வரவேற்றனர். இதைக் கண்ட அமைச்சரும், முன்னாள் சபாநாயகரும், "இது என்ன புதுப் பழக்கமா இருக்கு?' எனக் கேட்க, புடவையானாலும் பரவாயில்லை என, அவரது சகாக்கள், புடவையை மடித்து எடுத்துச் சென்றனர். அதன் பிறகு நடந்த அனைத்துமே அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு அதிர்ச்சியாகவே அமைந்தது.

வெடி சத்தம்:
விடுதி அறையை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறக்க, வாயில் மேலே தொங்கவிடப்பட்டிருந்த, பூக்கள் நிறைந்த பலூனை, மாணவியர் வெடிக்க வைத்தனர். எதிர்பாராமல் திடீரென வெடிச் சத்தம் கேட்டதும், அமைச்சர் சற்று அதிர்ந்து போனார். தொடர்ந்து, விடுதியையும் அதனருகே இருந்த பயன்பாடற்ற கட்டடங்களையும் அமைச்சர் சுற்றிப் பார்த்தார். கட்டடம் அருகே குப்பை குவியலும், நாய்களும் நிறைந்திருந்தன; ஆங்காங்கே கழிவு நீர் ஓடிக்கொண்டிருந்தது.

கழிவுநீர் அபிஷேகம்:
அமைச்சர் உள்ளிட்டவர்கள், மூக்கைப் பொத்திய படியே, வளாகத்தைச் சுற்றி வந்த போது, மேலே மாணவியர் தங்கிய அறையின் ஜன்னலில் இருந்து, அமைச்சர் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்கள் மீது, கழிவுநீர் கொட்டப்பட்டது. உடனே அனைவரும், எச்சரிக்கை குரல் மட்டும் கொடுத்து, அங்கிருந்து வெளியேறினர். பின், எதுவுமே நடக்காதது போல், மாணவியருக்கு, போர்வை உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கி, விடுதியில் உள்ள வசதி மற்றும் தரப்படும் உணவு உள்ளிட்டவற்றை கேட்டு அறிந்தார். ராயபுரம் சட்டசபை உறுப்பினரான ஜெயகுமார், தொகுதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கி, பயன்பாடற்ற கட்டடத்தை மேம்படுத்த உதவுவதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: