வெள்ளி, 9 செப்டம்பர், 2011

சினிமா தொழிலாளர்கள் அறிவிப்பு பிலிம் சேம்பர் முடிவு எங்களை கட்டுப்படுத்தாது



சென்னை : பிலிம் சேம்பர் எடுத்துள்ள எந்த முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து பெப்சி தலைவர் ராமதுரை, பொது செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிலிம் சேம்பர் நிர்வாகம் தற்போது நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையை வேறு கோணத்தில் திசை திருப்புவதற்காக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் கடந்த 2000ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்தத்தை எங்களுடன்தான் போட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ள படி, இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில்தான் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் எதிர்ப்போ மறுப்போ தெரிவிக்காத பிலிம் சேம்பர், இப்போது திடீரென்று கூட்டம் போட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

தற்போது பிலிம்சேம்பர் எடுத்துள்ள முடிவு எந்த வகையிலும் சம்மேளனத்தை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் அந்தந்த மாநில மொழி தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி, தொழிற்சங்கங்களோடு சம்பள ஒப்பந்தம் செய்துகொண்டு நல்ல முறையில் தொழில் நடத்தி வருகிறார்கள். மற்ற மாநில தொழிலையும் தொழிலாளர்களையும் பெப்சியையும் பாதிக்கும் வகையில் பிலிம்சேம்பர் அறிக்கை வெளியிட்டிருப்பது ஏதோ உள்நோக்கத்துடன் உள்ளது.  எனவே படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு நியாயமான புதிய சம்பளத்தை வழங்கி வருவதால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொழில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். அதே போல மீதமுள்ள சங்கங்களின் சம்பளம் பற்றி பேச எப்போதும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: