புதன், 7 செப்டம்பர், 2011

மணமேடையில் வைத்து மணப்பெண்ணை கடத்திச் செல்ல முயற்சி: சாவகச்சேரியில் சம்பவம்

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பின்னர் மணமகனையும் பெண்ணின் தந்தையையும் தாக்கி விட்டு மணப் பெண்ணைக் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் பிடிக்கப்பட்டார்.

சினிமாப் பாணியில் கடந்த 31 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் இளைஞரை விசாரித்த போது மச்சாள் முறையான மணப்பெண்ணை சிறுவயது முதல் விரும்புவதாகவும் தான் விரும்புவது மணப்பெண்ணுக்குத் தெரியாது எனவும், திருமண நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி சினிமாப் பாணியில் அழைத்துச் செல்ல முயற்சித்த தாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இளைஞரை மண்டபத்தில் உள்ளவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கையில் மணப்பெண் தாலிகட்டிய கணவருடன் காரில் ஏறிப் பறந்து விட்டார். திருமண ஏற்பாட்டின் பிரகாரம் கடந்த 31 ஆம் திகதி மாலை திருமணப் பதிவும் இடம்பெற்றது.

இளைஞர் திருமண மண்டபத்தில் குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: