புதன், 7 செப்டம்பர், 2011

புலிப்பாடசாலைகளுக்கு சுவிற்சர்லாந்தில் மூடுவிழா ஆரம்பம்.

சுவிற்சர்லாந்தில் இயங்கி வந்த தமிழ்க் கல்விச் சேவையை சேர்ந்த பாடசாலைகளுக்கு மூடுவிழா ஆரம்பமாகியுள்ளது. சுவிற்சர்லாந்தில் புலிகளின் செயற்பாடுகள் யாவும் தமிழ்க் கல்விச் சேவை மற்றும் இளையோர் அமைப்புக்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் என்கின்ற பெயர்களை கொண்ட அமைப்புக்கள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தது.
குறிப்பிட்ட பாடசாலைகள் சுவிற்சர்லாந்தில் அரச பாடசாலைக் கட்டடங்களில் பிரதி புதன்கிழமை பிற்பகல் தோறும் இடம்பெற்று வந்தது. இப்பாடசாலைகளின் பின்னணியில் புலிகள் உள்ளனர் என்பதும் இங்கு பயிலுகின்ற மாணவர்கள் புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர் என்கின்ற விடயமும் சுவிற்சிலாந்து அரசிற்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து சில நகரங்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில் டியரிகோண் (Dietikon-ZH), வின்ரத்தூர் (Winterthur-ZH) எனப்படுகின்ற நகரங்களின் நிர்வாகங்கள் தமது பாடசாலைகளில் வழங்கப்பட்டிருந்த கட்டிடங்களை வாபஸ் பெற்றுள்ளதுடன் தமிழ்க் கல்விச் சேவைக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் அனுமதி வழங்கப்படும் என நிபந்தனை விதித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இங்கு ஒரு சில பாடசாலைகள் மட்டும் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் தமிழ் கல்வி தேர்வுகள் போன்ற விடயங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்விச் சேவை மூலமே நடைபெற்று வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது என்பதுடன், இவையும் தடைசெய்யப்படவாய்ப்புகள் உண்டு எனவும் சந்தேசிக்கப்படுகின்றது. அவ்வாறு தடைசெய்யப்பட்டால் அவர்களால் வழங்கப்பட்ட சான்றிதல்கள் யாவும் செல்லுபடியற்றதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலங்கள் வரை சுவிஸில் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரம் , சுவிஸ் வங்கி மோசடிகளுக்கு பின் கடுமையாக்கப்பட்டுள்ளதோடு , புலிகள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து சுவிஸ் காவல் துறை முன்னரை விட அவதானமாக கண்காணிப்பதாக அறிய முடிகிறது. இவர்களது செயல்பாடுகள் சுவிஸில் பிறந்த இளைய தமிழ் தலைமுறையினரை தவறாக வழி நடத்தலாம் எனும் சந்தேகத்தையும் சுவிசில் உருவாக்கியுள்ளது.

இப்பாடசாலைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவிஸ் அரசாங்கத்தினர் தமிழ் கல்விக்கு எதிரான செயற்பாடுகளை செய்கின்றனர் என்ற பிரச்சாரத்தை புலிகள் முன்னெடுப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால் சுவிற்சர்லாந்து அரசு தமிழ் கல்விக்கு தாராளமான உதவிகளை செய்து வருவதுடன் தமிழ் பாடசாலைகளை புதிதாக உருவாக்குவோருக்கு உதவியும் வருகின்றது.
இங்கு வேதனைக்குரிய விடயம் யாதெனில் கற்பித்தல் பற்றிய எவ்வித பயிற்சியும் அற்ற சிலரின் கைகளில் இப்பாடசாலைகள் சென்றுகொண்டிருக்கின்றது. எனவே இவ்விடயத்தில் அனுபவமும் ஆற்றலுமுள்ளோர் நேரடியாக அரச கல்விச்சேவையை தொடர்பு கொண்டு தமது பங்களிப்பை வழங்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: