வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மண்ணில் புதையத் தொடங்கிய கட்டடம் ஆய்வு செய்த அதிகாரிகள் "பகீர்'

கோவை:"மண் பரிசோதனையில் கோட்டை விட்டது தான், கட்டடம் புதைவதற்குக் காரணமாகி விட்டது' என, கோவை உக்கடம் அடுக்குமாடி கட்டடங்களை ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜவகர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 118 கோடி ரூபாயில் கோவை உக்கடத்தில் 2,904 வீடுகளும், அம்மன் குளத்தில் 936 வீடுகளும், அடுக்குமாடிகளாகக் கட்டப்படுகின்றன. நகரங்களைக் குடிசைகளற்ற பகுதியாக மேம்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கம்.அம்மன் குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று, கடந்தாண்டு மண்ணில் புதைந்தது. அதை இடித்து அகற்றி, பிரச்னையைச் சமாளித்த நிலையில், உக்கடம் கழிவுநீர்ப் பண்ணையில் கட்டியுள்ள, 21 அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று, மண்ணில் புதையத் தொடங்கி விட்டது. கடந்த 2ம் தேதி இரவு பெய்த மழை காரணமாக, ஒரே நாளில், அரை அடி ஆழத்துக்கு கட்டடம் புதைந்து விட்டது.

தரைத் தளமும், அதற்கு மேல் ஐந்து தளங்களும் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தில், தளத்துக்கு 24 குடும்பத்தினர் வீதம், 144 குடும்பத்தினர் வசிக்க முடியும். அதிக பொருட்செலவில், நவீன வசதிகளுடன், பிரமாண்டமாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம், மண்ணில் புதையத் துவங்கியது, அரசுத் துறையினரை பீதியடைய வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, நேரடி ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, பொதுப்பணித் துறையினருக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, துணை மேற்பார்வைப் பொறியாளர் ராமலிங்கம், சிறப்பு கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளர் பழனிசாமி ஆகியோர், நேற்று அடுக்குமாடி கட்டடங்களை ஆய்வு செய்தனர்.

மண்ணில் புதையத் தொடங்கிய கட்டடம் கட்டப்பட்ட முறை, எடுத்துக் கொண்ட காலம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த அவர்கள், வரைபடங்களையும் பார்வையிட்டனர். ஆய்வில் தெரியவந்த விவரங்களை, உயர் அதிகாரிகளிடம் மொபைல்போனில் தெரிவித்தனர்.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கழிவு நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில், தரைத் தளம் மற்றும் ஐந்தடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அஸ்திவாரம் போடும்போது, தரையில் இருந்து மூன்று மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. "அதற்குக் கீழ் இருக்கும் மண், எந்த வகையானது, அது கடினத் தன்மை வாய்ந்ததா' என்பது உறுதி செய்யப்படவில்லை.

"எந்த ஆழத்துக்கு அஸ்திவாரம் போடப்படுகிறதோ, அதன் இரண்டு மடங்கு அளவுக்குக் கீழேயும், அதே வகையான மண் இருக்கிறதா, அதில் கடினத் தன்மை இருக்கிறதா' என்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.மண்ணின் தாங்கும் திறன் அடிப்படையில், கட்டுமானத்தின் எடையானது, சதுர மீட்டருக்கு 20 டன் என்ற அளவில் இருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. தற்போதைய நிலையில், கட்டுமானத்தின் எடை, சதுர மீட்டருக்கு 35 முதல் 40 டன் வரை என்ற அளவில் இருப்பதே, பிரச்னைக்குக் காரணம்.

கட்டி முடித்து, ஓராண்டு கழிந்த நிலையில், கட்டடம் மண்ணில் புதையத் தொடங்கியுள்ளது. அம்மன் குளத்திலும், இதே போன்ற பிரச்னை தான் ஏற்பட்டது.
"இங்கு கட்டப்பட்டுள்ள அனைத்து அடுக்குமாடிகளுக்கும், மீண்டும் மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தான், முடிவெடுக்க இயலும்' என, உயர் அதிகாரிகளிடம் பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.நேரடி ஆய்வு பற்றி, துணை மேற்பார்வைப் பொறியாளர் ராமலிங்கத்திடம் கேட்டபோது,""கட்டடங்களின் உறுதித் தன்மை பற்றி ஆய்வு செய்வதற்கு, அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. குழுவினர் ஆய்வு முடிவில் தான், உண்மை நிலவரம் என்னவென்று தெரியவரும். எங்களது நேரடி ஆய்வில் தெரியவந்த விவரங்களை, அரசுக்குத் தெரியப்படுத்துவோம்'' என்றார்.இதற்கிடையே, "புதையும் அடுக்குமாடி கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராய, ஐ.ஐ.டி., பேராசிரியர் ஒருவர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்படலாம்' என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

எல்லாமே தண்டம்!இந்த அடுக்குமாடி திட்டத்துக்கு, தனியார் நிறுவனம் ஒன்று, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கியுள்ளது. "இதற்காக, இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தொகை மட்டும் இரண்டரை கோடி ரூபாய்' என்றும், "இதன் பின்னணியில் முக்கிய அதிகாரி ஒருவர் இருந்துள்ளார்' என்றும், குற்றம் சாட்டுகின்றனர் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள்."விரிவான திட்ட அறிக்கை வழங்கிய கன்சல்டிங் நிறுவனத்தினரைப் பிடித்தால், அடுக்குமாடி ஊழலின் ஆணிவேரைப் பிடித்து விடலாம்' என்றும் சொல்கின்றனர் கவுன்சிலர்கள்.

கருத்துகள் இல்லை: