புதன், 7 செப்டம்பர், 2011

இன்டர்நெட்டில் மங்காத்தா... திரையரங்குகளில் வசூல் பாதிப்பு!

மங்காத்தா படம் வெளியான ஆறாவது நாள் அதன் 'பக்கா' பிரிண்ட் நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் உலா வர ஆரம்பித்துவிட்டது.
இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இன்டர்நெட்டில் திருட்டுத்தனமாக புதிய படங்களை ஒளிபரப்புவது திருட்டு டிவிடியைவிட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மங்காத்தா வெளியான மிகச் சில தினங்களுக்குள் அதன் ஒரிஜினல் பிரிண்டே இணையதளங்களில் வெளியாகிவிட்டது.

இதனால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்கும் இளம் தலைமுறையினர், டிக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏதுமின்றி, வீட்டில் இணையதளம் மூலம் பார்த்துவிடுகின்றனர்.
இது தியேட்டர் ரிசல்டை கடுமையாக பாதித்துள்ளது. மங்காத்தா வெளியானபோது அந்தப் படத்துக்கு தொடர்ந்து 5 நாட்கள் பெரிய ஓபனிங் கிடைத்தது. ஆனால் அடுத்த நாளே கமலா, காசி, உதயம் உள்ளிட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. மாலை காட்சிக்கு மட்டும் ஓரளவு நல்ல கூட்டம்.
செவ்வாய்க்கிழமையும் நிலைமை இதுதான். இதற்கான பின்னணியில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக படத்தை ஒளிபரப்பும் கும்பல் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளது மங்காத்தா குழு.

இதனால் ஹிட் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள மங்காத்தாவின் ஒட்டுமொத்த ரிசல்டே பாதிக்கும் நிலை உள்ளதால், நாளை போலீசாரிடம் புகார் தரவும் முடிவு செய்துள்ளார்களாம் வெங்கட் பிரபு மற்றும் குழுவினர்.

கருத்துகள் இல்லை: