வெள்ளி, 17 ஜனவரி, 2025

மதுரை எம். எஸ். பொன்னுத்தாய் அம்மையார் உலகின் முதலாவது பெண் நாதசுவரக் கலைஞர் நினைவுநாள்

Madurai City - மதுரை மறந்த உலகின் முதல் நாதஸ்வர பெண்... | Facebook
Madurai City : மதுரை மறந்த உலகின் முதல் நாதஸ்வர பெண் கலைஞர் கலைமாமணி MS  பொன்னுத்தாய்
பொன்னுத்தாய் ஒரு பொக்கிஷம்
தமிழகத்தின் கலாச்சார நகரம் மதுரை. அரசியல் சினிமா எதுவானாலும் தமிழனின் மன உணர்வை பிரதிபலிக்கும் நகராக மதுரை திகழ்கிறது. மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட வெளியூர்களைச் சேர்ந்த கலைஞர்களும் கூட பரிணமித்திருக்கிறார்கள் என்பது வரலாறு. மதுரை எத்தனையோ விஷயங்களில் முன்னோடி. அந்த வரிசையில் தமிழகத்தின் புகழ்பெற்ற முதல் பெண் நாதஸ்வரக் கலைஞரைத் தந்ததும் மதுரை. ஏறக்குறைய தமிழகம் மறந்து விட்ட அந்த நாதஸ்வர இசைக்கலைஞர்களை நினைவூட்டுவதே இந்தப் பகுதியின் நோக்கம்.
 மதுரை சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி தான் விழாவின் உச்சகட்டம். அந்த நிகழ்ச்சியில் தான் பொன்னுத்தாயின் நாதஸ்வர அரங்கேற்றம் நடத்துவது என முடிவாகியிருந்தது.
ஆயிரக்கணக்கில் ஜனங்களை மடியில் ஏந்தி வைகைக் கரையில் கம்பீரமாக நிற்கும் ராமராயர் மண்டபத்தின் புருவங்கள் அத்தனை யும் அன்றைக்கு ஆச்சர்யத்தில் உயர்ந்தன!
மதுரையின் கோலாகலமான சித்திரைத் திருவிழா நேரம், 'தசாவதார வைபவம்’ நிகழும் அந்த மண்டபத்தில் அன்று 'மோகினி அவதாரக் காட்சி’ அரங்கேற இருந்தது. அப்போது, நாகஸ்வரத்தின் உயரம்கூட வளராத 9 வயதுச் சிறுமி பொன்னுத்தாய், சிறு தேர்போல அசைந்து வந்தமர்ந்து, தனது இசைப் பயணத்தைத் தொடங்கினாள். அடடா, இது அசுர வாத்தியமாச்சே! பச்சை மண்ணு இப்படி மூச்சடக்கி, சுருதி சுத்தமா வாசிக்குதே! இது நாக்குல சரஸ்வதி இறங்கியிருக்கா. இல்லாட்டி, இப்படி வாசிக்க முடியாது'' என்று அன்றைய பிரபல மேளக்காரர்கள் வியந்தனர்.
காட்சிகளைக் காண கூட்டம் அலைமோதியது. அதற்கிடையே நாதஸ்வர இசை காற்றில் பரவத் துவங்கியது. "ஏதோ சிறுமி நாதஸ்வரத்தை தூக்க முடியாமல் தூக்கி வாசிக்கிறாள்.." எனக் கூட்டம் முதலில் "உச்" கொட்டி பரிதாபப்பட்டது. ஆனால். அவர் வாசிக்க வாசிக்க கூட்டம் பிரமித்தது. வாசிப்பது யார்.. என கூட்டம் முண்டியடித்து வந்துப் பார்த்தது.
அதன் பின்னர் பொன்னுத்தாய்க்கு ஏறுமுகம் தான். செகந்திராபாத் ராமநவமி கலாசார விழாவும் பம்பாய் சண்முகானந்தா சபையும் இலங்கை, மலேசிய இசைச் சபைகளும் பொன்னுத்தாயை எங்கோ கொண்டு போய் நிறுத்தின.
பொன்னுத்தாய் எழுப்பிய நாதஸ்வர ஓசை.... ஆணாதிக்கமிக்க சமுதாயத்தில் சாதித்திருக்கிறார்
 ‘ஆண்களால் மட்டுமே நாதஸ்வரம் வாசிக்க முடியும்... நாதஸ்வரத்தின் எடை, அதைக் கையாளும் ஆற்றல், அனைத்தும் ஆண்களுக்கே சாத்தியம்’ என்ற எண்ணத்தை முதன்முதலாக தகர்த்தவர் பொன்னுத்தாய்
துவக்ககாலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை அழைப்புக்கு நாதஸ்வரம் வாசிக்க பொன்னுத்தாயைக் கூப்பிட்டார்கள். பெண் நாதஸ்வரம் வாசித்தவாறு நடந்து வருவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாத காலம் அது. "பிரச்னை வருமே" என பலர் பயந்தார்கள். "எதுவும் வராது நீ வாசிம்மா.." மகளை உற்சாகப்படுத்தினார் தந்தை. வாசித்தார் பொன்னுத்தாய். இப்படி, பெண்கள் நாதஸ்வரம் வாசிப்பதற்கு இருந்த தடைகள் ஒவ்வொன்றையும் தந்தையின் உதவியுடன் தகர்த்தார் பொன்னுத்தாய்.
"கச்சேரியின்போது மூச்சு வாங்கும் என்பதால், இரண்டு கலைஞர்கள் மாற்றி மாற்றி நாதஸ்வரம் வாசிப்பதுதான் வழக்கம். ஆனால், ஆண் கலைஞர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் தனி ஆளாகவே வாசித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பொன்னுத்தாய். மேடையைக் கையாளும் ஆளுமைப் பெற்றவர். அவரது இளம் வயதில் மாதத்திற்கு இருபத்து மூன்று நாட்கள் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதிக ஆசைப்படாதவர். நாதஸ்வர கலைஞர்களுக்காக நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் வீட்டுமனை ஒதுக்கிய போது "என்னிடம் போதுமான இடம் இருக்கிறது. நலிந்த கலைஞர்களுக்குக் கொடுங்கள்." என பெருந்தன்மையாகச் சொன்னவர்.. யாரிடமும் வாய்ப்பு கேட்டு போகாதவர்.
  "அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சிக்கு மூவாயிரம் ரூபாய் வாங்கினார். இவரது இசை நிகழ்ச்சிக்கு தேதி கேட்டு பணத்துடன் பலர்  காத்திருந்தனர்.. 1953-ல் இவருக்கு திருமணமானது.   இவரது கணவர் சிதம்பர முதலியார் மதுரை நகராட்சி தலைவராகவும் எம்.எல்.சியாகவும் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்குழு தலைவராகவும் இருந்தவர்.
மதுரை நாதஸ்வர சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். திருச்சி வானொலியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நாதஸ்வர ஆர்ட்டிஸ்டாகப் பணியாற்றியிருக்கிறார். தமிழகத்தில் அவரது நாதஸ்வர இசை ஒலிக்காத கோயில்கள், பிரபல மன்றங்கள் இல்லை. அதுபோல இந்தியாவில் பல மாநிலங்களில் இவர் நாதஸ்வர இசை ரீங்காரமிட்டிருக்கிறது. புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளையோடு இணைந்து அவர் கடம்பூர், சென்னை ஆகிய இடங்களில் நாதஸ்வர நிகழ்ச்சி நடத்திய நாட்களை தன் வாழ்நாளின் பாக்கியமாக கருதியவர்.  
மதுரையில் 1960-ல் காந்தி மியூசியம் திறப்பு விழாவுக்கு ஜவஹர்லால்நேரு வந்தபோது  இவரது நாதஸ்வர இசையைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனார். "எப்படியம்மா.. இவ்வளவு அழகாக.. வாசித்தாய்" என வியந்து பாராட்டினார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சியளித்து அங்குள்ள தமிழர்களின் மனங்களிலும் நிறைந்தார்.
இவரது கணவர் மறைவுக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்திக் கொண்டார். அதனால் வருமானம் குறைந்தது. அவரிடமிருந்த சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது. தனது பெண்களின் திருமணத்துக்காக அவருக்குப் பரிசாகக் கிடைத்த 23 தங்கப்பதக்கங்களையும் விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் அரசு கொடுத்த ஐநூறு ரூபாய் மாத பென்ஷனை நம்பி வாழ்ந்தார். ஆனால் கடைசி வரை யாரிடமும் உதவி கேட்டு அவர் போய் நின்றதில்லை..."
 பாட்டி யாரிடமும் எதையும் கேட்டுப் பெறாதவர்.. மதுரை சோமு தான் பாட்டிக்கு கலைமாமணி விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர். அப்போதுகூட வேண்டாம் என்று தான் சொன்னார்.  என்றார் விக்னேஸ்வரன்.
பல ஆயிரம் கச்சேரிகள் நடத்தியிருக்கும் பொன்னுத்தாய்... நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதுகூட, வாசிப்பை நிறுத்தவில்லை. இப்படி அர்ப்பணிப்பு காட்டி, அதற்காக 23 தங்கப் பதக்கங்கள், கலைமாமணி, கலைமுதுமணி, நாத கான அரசி உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்த பொன்னுத்தாய், ஜனவரி 17-ம் தேதியன்று, 2012-ம் ஆண்டு, தன் 84 வயதில் விண்ணுலகம் சென்றுவிட்டார்! மிகப்பெரிய சாதனையாளரின் சகாப்தம் சத்தமில்லாமல் முடிந்தது. அதன் பின்னரும் அவர் குறித்து சிலாகிப்பவர்கள் இல்லை.
  ஆண்கள் மட்டுமே சாதிக்கமுடியும் என்ற துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் சாதித்திருக்கிறார் என்றால் பெருமிதப்படவேண்டிய ஒன்று. ஆனால் அவர் தகுதிக்கேற்ற அளவு நினைவுக்கூரப்படவில்லை என்பது வேதனையானது.
1990ல் அனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி அனைவரின்  கண்களை குளமாகின.
அந்தக் கட்டுரை பின்வருமாறு
ஒரு கலைமாமணியின் கண்ணீர்...
சுமாரான வீடு. அதையட்டி சீமைக் கருவேல முள் சூழ்ந்த குறுகலான பாதை. அதையடுத்து, மாட்டுக் கொட்டகையுடன் இணைந்த ஒரு சிறிய அஸ்பெஸ்டாஸ் குடிசை. உள்ளே பழைய கம்பீரம் குறையாமல் பொன்னுத்தாய். வீட்டில் ஒரு மூலையில் நாகஸ்வரம் நிற்கவைக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். காணோம். ''அதை இங்கே வெச்சிருந்தா எலி கடிச்சிரும். கரையான் அரிச்சிரும்னு பக்கத்து வீட்ல குடுத்து வெச்சிருக்கேன். பத்திரமா இருக்கு. எடுத்துட்டு வாரேன்'' என்று கிளம்பினார் கலைமாமணி பொன்னுத்தாய். நாகஸ்வரத்துடன் அவர் திரும்பி வரும்போது, அவரது காதில் புதிதாக ஒரு கம்மல் பளிச்சிட்டது. ''நான் இது வேணாம்னுதான் சொன்னேன். போட்டோ எடுக்கறப்ப வெறும் காதா இருந்தா நல்லா இருக்காதுனு போட்டுவிட்டாங்க'' என்று சிரித்த பொன்னுத்தாய், சற்று சீரியஸாகி ''நான் 100 பவுனுக்கு மேல் நகை வெச்சிருந்தேன். பரிசா மட்டும் 23 தங்கப் பதக்கம் வாங்கினேன். இப்ப ஒண்ணும் இல்லை'' என்று மீண்டும் சிரித்தார். கண்கள் கடந்த காலத்தைத் தேட, அவர் சொன்னார்.
''நான் ருதுவாவறதுக்கு முன்னால என் ஒன்பதாவது வயசுலயே நாகஸ்வரத்தை எடுத்துட்டேன். அப்போ திருச்சிக்குத் தெற்கே நாகஸ்வரம் வாசிக்க ஒரு பொண்ணுகூடக் கிடையாது. நான் வாசிக்கிறதைப் பார்த்துட்டு எல்லோருக்கும் ஆச்சர்யம். என்னோட முதல் குரு மதுரை சேதுராமன், பொன்னுசாமியின் அப்பா நடேசப்பிள்ளைதான். நான், சேதுராமன், பொன்னுசாமி, திருமோகூர் முனியாண்டி, மீனாட்சி கோயில் ஆஸ்தான வித்வான் அழகுசுந்தரம் எல்லோரும் சேர்ந்து நடேசப்பிள்ளைகிட்ட நாயனம் கத்துக்கிட்டோம். நான் 'அடைமழை’ பெய்யற மாதிரி 'அட சாதகம்’ பண்ணுவேன். பொறாமைபிடிச்சவங்க சிலர் என் குருநாதர்கிட்ட, 'நீ ஒரு ஆம்பளையா? ஒரு பொம்பளப் புள்ளைக்குப் போய் நாகஸ்வரம் சொல்லிக் குடுக்கிறேயே’னு கேலி பேசிக் கலைச்சு விட்டுருவாங்க. அப்போ எங்க குடும்பமும் நல்ல வசதியா இருந்துச்சு. அப்படிப் பழகின பழக்கத்தில்தான் ஒம்பது வயசுல நாயனத்தை எடுத்த நான் ஒன்பது மாசக் கர்ப்பிணியா இருக்கறப்பவும் சிரமப்படாம விடிய விடியக் கச்சேரி வாசிப்பேன்.  ஒரு கச்சேரிக்கு மூவாயிரம் ரூபாய்கூடச் சமயத்தில் கிடைக்கும். வருஷத்தில் ஆறு மாதங்கள் (கார்த்திகை துவக்கம் முதல் சித்திரை பத்தாம் தேதி வரை) கொல்லத்தில் நல்ல சீஸன். ஆறு மாசமும் அங்கேயே தங்கி ஊர் ஊராப் போய் வாசிப்பேன்...'' என்ற பொன்னுத்தாய் கடந்த கால அனுபவங்களை மேலும் தொடர்ந்தார்...
''நானும் என் அக்கா தங்கமும் 1953-ல் மதுரை முனிசிபல் சேர்மனா இருந்த சிதம்பர முதலியாருக்கு வாழ்க்கைப்பட்டோம். என் வீட்டுக்காரர் தொடர்ந்து மூணு முறை எம்.எல்.சி-யா இருந்தார். ரொம்ப வசதியான குடும்பம். நான் கச்சேரிக்குப் போவதையோ விடிய விடிய நாகஸ்வரம் வாசிக்கிறதையோ அவர் தடுத்ததே இல்லை. எங்க வீட்டுக்கு 'தங்கம் - பொன் இல்லம்’னு பேர். எந்த நேரமும் இருபது, முப்பது விருந்தாளிகளாவது இருப்பாங்க.''
நாகஸ்வர மேதை பொன்னுத்தாய் சற்று நேரம் அமைதியாக இருந்தார். அவர் விழிகள் கலங்கின.
''என் வீட்டுக்காரர் 1972-ல் இறந்தார். அதோட என் இசை வாழ்க்கையும் முடிஞ்சுபோச்சு'' என்று நிறுத்திக்கொண்டார்.
''ஏன், தொடர்ந்து வாசிக்க வேண்டியதுதானே?'' என்றோம் விவரம் தெரியாமல்.
''நாகஸ்வரமும் மேளமும் மங்கல வாத்தியங்கள்... கல்யாணம், கோயில் விழாக்கள்னு சுபகாரியங்களுக்கு வாசித்துப் பெயர் பெற்ற நான், என் கணவர் மறைவுக்குப் பின் பொது நிகழ்ச்சிகளில் நாகஸ்வரம் வாசிக்க முடியாமல்போச்சு. அமங்கலப் பெண் மங்கலக் காரியத்துக்கு நாயனம் வாசிக்கிறதை உலகம் ஏத்துக்கலை. பலர் மறைமுகமா முதுகுக்குப் பின்னாடி பேசினாங்க. நாகஸ்வரத்தை எடுப்பதில்லைனு அன்னையோட முடிவு பண்ணிட்டு, பல வருஷங்கள் சும்மா இருந்தேன். எங்க குடும்பத்துக்குள் சொத்துப் பிரிவினை நடந்து, எங்க பங்கை வித்துச் சாப்பிடத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமா கஷ்டம் வரத் தொடங்கிச்சு. ரேடியோவில் வாசிக்கக் கூப்பிட்டாங்க. தொடர்ந்து வாசிச்சேன். 1979 வரைக்கும் ஒரு மணி நேரம் கச்சேரி தந்தாங்க. திடீர்னு அதை மாத்தி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளைப் போல 'காலையில் அரை மணி நேரம் மாலையில் அரை மணி நேரம் வாசி’ன்னாங்க. நான் முடியாதுனு சொல்லிட்டேன். அப்புறம் அவங்களும் என்னைக் கூப்பிடுறது இல்லை.
வருஷாவருஷம் ஒரே ஒரு நாள் சரஸ்வதி பூஜை அன்னைக்கு மட்டும் தூசி துடைச்சு கொஞ்ச நேரம் நாயனம் வாசிப்பேன், அவ்வளவுதான்.
என் தங்க மெடல்கள் இருபத்து மூணையும் அழிச்சு நகை செஞ்சு, ரெண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்தேன். ஒரு பையன் தற்கொலை பண்ணிக்கிட்டான். இன்னொரு பையன் இப்போ ஜோசியம் பார்க்கிறான். தாள முடியாத கஷ்டம்தான்.
மதுரை காந்தி மியூஸியம் திறப்பு விழா. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு எல்லாம் நான்தான் நாகஸ்வரம். எம்.எஸ்.விஸ்வநாதன் கல்யாணத்துக்குக்கூட என் கச்சேரிதான். நான் நாகஸ்வரக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரா மூணு வருஷம் இருந்தப்போ, பல கலைஞர்களுக்கு அரசாங்கத்தோட வீட்டுமனை கிடைக்கச் செய்தேன். எனக்கும் குடுத்தாங்க. அப்போ நான் வசதியா வாழ்ந்ததால, வேண்டாம்னு திருப்பிக் கொடுத்துட்டேன். இப்போ 10 வருஷமாக் கஷ்டம் தாங்காம, அரசாங்கத்திடம் உதவி கேட்டு, மனு மேல் மனு போட்டேன். ஒண்ணுமே நடக்கலை. தனி மனிதர்கள் யார்கிட்டயும் உதவி கேட்க என்னால் முடியாது. பணம், வசதி எது போனாலும், என்னோட இருக்கும் இசையும் தன்மானமும்தான் முக்கியம். அதனால்தான் யார் கண்ணிலும் படாம இப்பிடி ஒதுங்கி இருக்கேன். எனக்குச் சிபாரிசு பண்ண ஆள் இல்லை. அரசியல் பின்னணியும் இல்லை.
போன வருஷம் மதுரை சோமு என் நிலையைக் கேள்விப்பட்டுப் பதறிப்போனாராம். 'கவலைப்படாதீங்க... இந்த வருஷம் 'கலைமாமணி’ விருது உங்களுக்குத்தான்... தைரியமா இருங்க’னு கடுதாசி எழுதியிருந்தார். நான் நம்பலை. காலம் போன காலத்தில் யார் தருவாங்கனு இருந்தேன். திடீர்னு பேப்பர்ல அறிவிப்பு வந்திருக்குனு சொன்னாங்க. எனக்கு விருது கிடைக்கச் சிபாரிசு பண்ணிட்டு, அது கிடைக்கும்போது அதுக்குக் காரணமான சோமு அண்ணன் உயிரோடு இல்லை'' என்று கண் கலங்கிச் சொல்லிவிட்டு, தூசி துடைத்து நாகஸ்வரத்தை எடுத்து உதட்டருகே வைத்தார்.
அதே கம்பீரம்... அதே மிடுக்கு... அவரது 10 விரல்களும் மாறி மாறி ஸ்வர வாய்களை ஆறுதலாகப் பொத்த, பிசிறு இல்லாமல் பொங்கிப் பொங்கி இசையாய் நெகிழ்ந்தது நாகஸ்வரம்!
- சௌபா

Thulakol Soma Natarajan : மதுரை எம். எஸ். பொன்னுத்தாய் அம்மையார் உலகின் முதலாவது பெண்
நாதசுவரக் கலைஞர் நினைவுநாள்
இன்று ஜனவரி ,17 (2012) திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில்
பிறந்தவர் பொன்னுத்தாய்.
இசைவேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்
இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் ..என்பதால்,
அவரது வழியில் நாதஸ்வரக் கலைஞராக பொன்னுத்தாய்
புகழ்பெற்று விளங்கினார்.
மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம் தமது 9 வது வயதில் நாதசுவரக் கலையைப்
பயின்ற பொன்னுத்தாய்,
 13வது வயதில் அரங்கேற்றம் கண்டார்.
இவரது கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார்.
 முன்னாள் முதல்வர்கள் காமராஜர் ,
பக்தவத்சலம் ஆகியோர் இவரின் நெருங்கிய
தோழர்கள் ஆவர்.
இவரும் சிறந்த நாதஸ்வரக் கலைஞாவார்
 திருமணத்திற்குப் பின் இருவரும் சேர்ந்தே நாகஸ்வர இசைக்கச்சேரிகள்
நிகழ்த்தினர்.
புகழும் பொருளும் குவிந்தன.
இவர் கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருதுகள் பெற்றுள்ளார்
இவர்களின் குழந்தைகள் தங்கவேல்முருகன் என்ற மகனும் , வள்ளி ராணி ,பாலசுந்தரி
என்ற இருமகள்களும் ஆவர்.
எம்.எஸ்.பொன்னுத்தாயின் கணவரின் மறைவிற்குப்பின் ,
இவர் கைம்பெண் என்பதால்இவரைக்கச்சேரிக்கும் மணவிழா நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பது
நின்றுவிட்டது.
குடும்பம் வறுமையில் வாடியது.
இங்கு ஒன்றைக் குறிப்பிடவேண்டும்.
இதே இசைவேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த "எம்.எஸ"்.என்று அறியப்பட்ட மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி வாய்ப்பாடடுக்கலைஞர்.
'
இவர். பார்ப்பனர் கல்கி சதாசிவத்தை மணந்தார்.
புகழ்பெற்ற இசைக்கலைஞராகத் திகழ்ந்தார்.
ஆனால் , சதாசிவத்தின் மறைவிற்குப் பிறகும் பூவும் பொட்டும் வைத்துக்கொண்டு இசை
மேடைகளில் பாடிவந்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.. ஏன்? எப்படி?
இவருக்குப் . பார்ப்பனக் கும்பலின் ஆதரவு இருந்தது.
நம் பொன்னுத்தாய்க்கு அந்த ஆதரவு இல்லை
என்பதுதான் வேதனை தரும் உண்மை.
 தமது 87 ஆம் அகவையில் 17.1.2012ஆம் ஆண்டு மதுரையில் தமது மகள் பாலசுந்தரி
இல்லத்தில் மதுரை சிதம்பர முதலியார்
பொன்னுத்தாய் இசையுடன் கலந்தார்.
வாழ்க வளர்க அம்மையாரின் புகழ்.
                                      (தொகுப்பு)
                // ⚖️✍️ #துலாக்கோல், 17.01.2025✍️ சீனாவில்

கருத்துகள் இல்லை: