வெள்ளி, 12 ஜூலை, 2024

அமைச்சர் கீதா ஜீவன் : சீமான் தனது மனநிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது!

 நக்கீரன் : விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.



அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுவதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் இன்று (08.07.2024) விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி அடுத்த கெடார் கிராமத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரத்தூர் பொதுக்கூட்டத்தில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்டமாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரசாரம் செய்தனர். இதனையடுத்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாளை மறுதினம் (10.07.2024) வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசுகையில், “மதம், சாதியை வைத்து இளைஞர்களிடம் நஞ்சை விதைக்கின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் நிச்சயம் ஒருநாள் வெட்கப்படுவார்கள். சாதி, மதம், கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள் மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. திமுகவை அகற்றாமல் இந்த மண்ணில் நல்ல அரசியல் இருக்காது. நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள். 60 ஆண்டுக் குப்பையை 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம். நான் தமிழன் என்பது தான் எனது அடையாளம் ஆகும். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர், அது தவறு. ஒரு மொழியைப் பேசும், குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும் போது உங்களுக்குப் புரியாது, பாதிக்கும் போது உங்களுக்குப் புரியும். இளையராஜா பெரும்பான்மை இந்து அவரது மகன் இஸ்லாம் என்பதால் சிறுபான்மை. சாதி, மதம் எல்லாம் நேற்று வந்தது” எனத் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். இது சமூக நீதிக்கான தேர்தல். திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரத்து செய்தார்களா?. நீட் தேர்வு ரத்து குறித்து, பிரசாரத்திற்கு வந்துள்ள அமைச்சர் உதயநிதியிடம் கேளுங்கள். பாமகவிற்கு வாக்களித்தால், நல்ல எதிர்காலம் உண்டு.

திமுக அரசிடம் எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. மக்கள் தனது பிரசாரத்தில் பங்கேற்காத வகையில் மக்களை அடைத்து வைக்கின்றனர். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்களை அடைத்து வைக்கும் கலாச்சாரத்தைக் கண்டுபிடித்தவர் செந்தில் பாலாஜி ஆவார். பாமக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

கருத்துகள் இல்லை: