ஞாயிறு, 16 ஜனவரி, 2022

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி

 தினத்தந்தி : சென்னை   தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. அதன்படி  கடந்த 6-ந்தேதி முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி இன்று தமிழ்நாட்டில்  முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு காரணமாக இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.‘டாஸ்மாக்’ மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இயங்காது. ஆனால் மின்சார ரெயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயங்குகின்றன ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படுகின்றன.

ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும்.

முழு ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். சென்னையில் 312 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர். முக்கிய மேம்பாலங்கள் தவிர்த்து அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்படும், போக்குவரத்து சிக்னல்களும் நிறுத்தப்படும்.

எனவே முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். எனவே தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து கணிசமாக குறைந்து விட்டது. சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பிரதான சாலைகளும் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன

கருத்துகள் இல்லை: