சனி, 22 ஜனவரி, 2022

நடந்தது நடந்துபோச்சு: சோனியா காந்தியை தொடர்புகொண்ட மம்தா!

 நக்கீரன் செய்திப்பிரிவு : 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸுக்கு இடையே மோதல் வெடித்தது.
திரிணாமூல் காங்கிரஸ், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை தனது கட்சிக்கு இழுத்தது. இது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் மம்தா உள்ளிட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி அளித்தது.
இந்தசூழலில், கோவா தேர்தலில் கூட்டணி அமைக்க திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ் எந்த பதிலையும் அளிக்கவில்லை.


இந்தநிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் பவன் கே வர்மா, சில வாரங்களுக்கு முன்பு மம்தாவே சோனியா காந்தியை தொடர்புகொண்டு, கடந்த காலத்தில் நடந்ததை விட்டுவிட்டு, 2022ல் புதிய தொடக்கத்தை எதிர்நோக்குவோம் என கூறியதாகவும், சோனியா காந்தி இதுதொடர்பாக கட்சி தலைவர்களிடம் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக தெரிவித்ததாகவும், ஆனால் இன்று வரை எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: