சனி, 30 ஜூன், 2018

அரசு , அரசு உதவி பெறும் பள்ளி 12 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி...


மின்னம்பலம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் படித்த 12 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான மருத்துவ கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் நேற்று(ஜூன் 28) வெளியிடப்பட்டது. இதில், அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
1 முதல் 1000 வரையிலான முதல் ஆயிரம் இடங்களில் 4 பேரும், 1001 முதல் 3000 வரை 8 பேரும், 3001 முதல் 5000 வரை 16 பேரும், 5001 முதல் 10000 வரை 76 பேரும், 10001 முதல் 15000 வரை 157 பேரும், 15,001 முதல் 25000 வரை 1,059 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதில், முதல் 3000 இடங்களில் இடம்பெற்றுள்ள 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர ஒரு சில மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று,சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு ஒதுக்கீடு பிரிவின்கீழ் 5,449 பேர் சிபிஎஸ்இ மாணவர்கள் உள்ளனர்.

நீட் தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக, அரசு சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி மையங்கள் அமைத்து, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 1,337 பேர் தகுதி பெற்றனர். இதில், 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: