வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பன்னீர்செல்வம் தினகரன் நாடகம் அடுத்த காட்சி ... எல்லாரும் ஒண்ணா வழக்குகளில் இருந்து எஸ்கேப்?

அ.தி.மு.க.,வில், சசிகலா எதிர்ப் பாளர்களை அணி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ள, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், திடீரென, 'சரண்டர்' அடைந்துள்ளார் தினகரன்.
ஆட்சியை அழிக்க, தி.மு.க., திட்ட மிடுவதாக, புகார் கூறிய அவர், 'கட்சியில் இருந்து பிரிந்து
சென்றவர்கள், மீண்டும் வர வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தார். 'கட்சியிலும், ஆட்சியிலும் தங்கள் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது' என்றும், அவர்களுக்கு உறுதி அளித்தார்.

சிறை செல்லும் முன், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை, தன் அக்கா மகன் தினகரனிடம் ஒப்படைத்தார் சசிகலா. அவரால், துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், நேற்று, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பொறுப்பு ஏற்றார். சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள, தலைமை அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அவை தலைவரும், அமைச்சருமானசெங்கோட்டையன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட, பலர் பங்கேற்றனர்.


பின், தினகரன் அளித்த பேட்டி:

* சட்டசபையில் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஜனாதிபதி யிடம் புகார் கொடுக்க சென்றுள்ளாரே?

ஸ்டாலின், எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியை கலைத்து விட வேண்டும் என, முயற்சி செய்தார். அவரது முயற்சியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ராணுவ கட்டுக் கோப்புடன் செயல்பட்டு முறியடித்து, ஜெ., ஆட்சி தொடர வழி செய்தனர். தோல்வியின் விரக்தியில், ஸ்டாலின், எதை எதையோ செய்து கொண்டிருக்கிறார்.

* பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?


எம்.ஜி.ஆர்., காலத்திலும், ஜெ., காலத்திலும், எத்தனையோ துரோக செயல்களை எதிர்த்து, அ.தி.மு.க., போராடி வெற்றி பெற்றது. சில புல்லுருவிகளின் செயல், எக்கு கோட்டையான, அ.தி.மு.க.,வை பாதிக்காது.

* பன்னீர்செல்வத்தையும், அவரது

ஆதரவாளர்களையும், மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்வீர்களா?

அ.தி.முக., என்பது தாய் கட்சி. சிலர் வழிதவறி சென்றுள்ளனர்; நிச்சயம் தேடி வருவர் என்பது தெரியும்.

* கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவர் என, ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறாரே?

அ.தி.மு.க., ஆட்சி என்பது, 1.50 கோடி தொண்டர் களால் நடத்தப்படுகிறது. இதில், எந்த ஒரு தனி நபரோ, ஒரு குடும்பமோ, ஆதிக்கம் செலுத்திய தில்லை. வருங்காலத்தில் செலுத்தவும் விடமாட்டோம்.

* உங்களை, ஒரே நாளில் கட்சியில் சேர்த்து, துணை பொதுச்செயலர் பதவி கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதே?


எம்.ஜி.ஆர்., மறைந்த காலத்திலேயே, ஜெய லலிதாவால் அரசியலுக்கு கொண்டு வரப் பட்டேன். 11 ஆண்டுகள், எம்.பி.,யாக பணி யாற்றி உள்ளேன். ஜெ., பேரவை செயலராக, அமைப்பு செயலராக, பொருளாளராக பணியாற்றி உள்ளேன்; திடீரென்று வந்தவன் அல்ல.

என்னை சில காலம் ஒதுங்கி இருக்கும்படி, ஜெ., சொன்னார். சசிகலா தலைமையேற்ற பின், என் சேவை தேவை என, கட்சியினர் கோரிக்கை வைத்ததால், என்னை கட்சியில் சேர்த்து, துணை பொதுச்செயலராக்கினார்.

* உங்கள் மீது பொது மக்கள் கோபம் தொடர்கிறதே?


அப்படி திட்டமிட்டு பரப்புகின்றனர். தி.மு.க., வினர் செய்கிற சதி இது. பொது மக்கள் போர்வையில், பல பிரச்னைகளை கிளப்பு கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை கிளப்பி, சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்ற நிலையை ஏற்படுத்த நினைக்கின்றனர்.

* சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா?

கட்சி யாரை முடிவு செய்கிறதோ, அவர் தான் வேட்பாளர்.

* சசிகலாவை, தமிழக சிறைக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?


எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

* அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, தற்காலிக

பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப் பட்டது செல்லாது. எனவே, அவரால் நியமனம் செய்யப்பட்ட, உங்களது பதவியும் செல்லாது என கூறப்படுகிறதே?

சசிகலா தேர்வும், அறிவிப்புகளும் செல்லுபடி யாகும். இது, மதுசூதனனுக்கும் தெரியும்.

* தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளதே?


அதற்கு, கட்சியின் சட்ட வல்லுனர்கள் பதில் அளிப்பர்.
* கட்சியின் வங்கி கணக்கை இயக்கக் கூடாது என, பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளாரே?

அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின், எந்த கடிதம் கொடுத்தாலும் செல்லாது. கட்சி கணக்கு, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மூலம், தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

* ஜெ., அண்ணன் மகள் தீபா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


கருத்து கூற விரும்பவில்லை.

* ஜெ., முழு உருவ சிலை, கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட உள்ளதா?


ஏற்பாடு நடந்து வருகிறது.

* இன்றைய அரசியல் சூழ்நிலையில், உங்கள் கட்சியின் பிரதான எதிரி பன்னீர்செல்வமா அல்லது தி.மு.க.,வா?

என்றைக்குமே, தி.மு.க., தான் பிரதான எதிரி.

* பன்னீர்செல்வம் மீண்டும் வந்தால் சேர்த்து கொள்வீர்களா?


பிரிந்து சென்ற யாராக இருந்தாலும், மீண்டும் வந்து சேருவர் என்ற நம்பிக்கை உள்ளது. யாராக இருந்தாலும், இந்த இயக்கம் ஏற்றுக் கொள்ளும்.இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

ஜெ., படம் 'மிஸ்சிங்'

தினகரன் பொறுப்பேற்ற நிகழ்ச்சி தொடர்பாக, கட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படத்தில், ஜெ., போட்டோ இல்லை.

தினகரன், நேற்று பகல், 12:00 மணிக்கு, கட்சி அலுவலகம் வந்தார். அவரை, அமைச்சர்கள் வரவேற்றனர். அமைச்சர்கள் கார் அலுவலகத் திற்கு வெளியே நிற்க, அவர் கார் மட்டும் உள்ளே நிறுத்தப்பட்டது.

அவர் துணை பொதுச் செயலராக பொறுப்பேற்ற பின், முதல் தளத் தின் மாடத்தில் வந்து நின்று, ஜெயலலி தாவை போல், வணக்கம் தெரிவித்தார்.

பகல், 1:00 மணிக்கு, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி வந்தார். அவரது காரும், கட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. அவர், தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்ததும், சென்று விட்டார்.தினகரன் பொறுப்பேற்ற போது, அவரது மேஜையில், சசிகலா மற்றும் ஜெ., படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

பத்திரிகை களுக்கு அனுப்பிய புகைப்படத்தில், ஜெ., படம் இடம் பெறவில்லை. சசிகலா படம் மட்டும் இடம்பெற்றிருந்தது.- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: