சனி, 25 பிப்ரவரி, 2017

அரசியல் விபசாரம் கொடிகட்டி பறக்கும் தமிழகம் ...

நான்கு டோங்கிரிகளும், நாசமாய்ப் போன நடுநிலையும். -- BY Arivazhagan Kaivalyam
"திராவிடத்தால் வீழ்ந்தோம்" "திராவிடக் கட்சிகள் தான் தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்" "திராவிடத்தை வீழ்த்துவோம்" என்று நேரடியாகவோ, பட்டும் படாமல் அப்படி ஒரு தொனியிலோ பலர் பேசுவதை நீங்கள் தமிழகமெங்கும் கேட்கலாம், அவர்களை நான்கு வகைகளாகப் பிரித்து அறிந்து கொள்வோம்.
முதல் வகை - ஈழடுமீல்டோங்கிரி.
தமிழ்த்தேசியம் பேசுகிற ஈழப்போரின் போது அரசியலுக்குள் நுழைந்த இளம் பருவத்தினர் நிறைந்த இந்த வகை பெரும்பான்மை வகையாகும், தமிழ்த் தேசியத்தின் மொத்தக் குத்தகைதாரர் அண்ணன் சீமானின் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களைத் தொடர்ந்து மேடைகளிலோ, "யூ டியூப்" பிலோ பார்த்துவிட்டு ஒருவிதமான மயக்க நிலையிலேயே இருக்கும் 16இல் இருந்து 25 வயது நிரம்பிய இளைஞர்கள் தான் இந்த அணியில் இருப்பார்கள்.
பொதுவாக இவர்கள், திராவிட இயக்கங்கள் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி சார்ந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த வரலாறு, பரவலாகத் தமிழகமெங்கும் அரசுப் பள்ளி கல்லூரிகளை நிறுவிய தி.மு.கவின் அரசியல் பயணம், உயர் கல்வி வரையிலும் கல்வியை இலவசமாக்கிய விவரங்கள், தொழிற்பேட்டைகளையும், சிறுதொழிற்கூட வளாகங்களையும், தகவல் தொழில் நுட்பத் பூங்காக்களையும் உருவாக்கிய கலைஞரின் அளப்பரிய சாதனைகள் என்று எந்த அகர வரிசை அரசியலும் அறியாதவர்கள்.
இவர்களுக்குத் தெரிந்த அரசியல் எல்லாம், இலங்கைக்கு கலைஞர் ஆள் அனுப்பி எல்லோரையும் போட்டுத் தள்ளினார், தனது சட்டைப்பையில் ஒளித்து வைத்திருந்த தமிழ் ஈழ முட்டாயை கடைசி வரை கொடுக்கவேயில்லை, சர்க்காரியா கமிஷன் மண்டியில வேலை பார்த்தார், அங்கே வாழைப்பழம் திருடினார், அதிமுகவும், திமுகவும் ஒன்னு, அத அறியாதவன் வாயில மண்ணு.....போன்ற அதே வழக்கமான பார்ப்பனீயப் புராதனக் குற்றச்சாட்டுக்கள்.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சியால் சமூக, அரசியல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கடும் பின்னடைவைச் சந்தித்த பார்ப்பனர்கள் தங்கள் இயலாமையால் பரப்புகிற குற்றச்சாட்டுக்களை அட்சரம் பிசகாமல் பின் தொடர்பவர்கள், ஒருவகையில் சொல்லவேண்டுமென்றால் பார்ப்பனர்களின் உண்மையான பீ டீமே இந்த அரைகுறைத் தமிழ் தேசியக் குஞ்சுகள் தான். நேரடியாக திராவிட இயக்கங்களின் கோட்பாடுகளோடு வாதிட விரும்பாத, அதன் நன்மை தீமைகளைக் குறித்து விவாதம் செய்ய விரும்பாத நவீனப் பார்ப்பனர்கள் உருவாக்கிய சொத்தைப் பல்லே இந்த முதல் அணி.
இரண்டாம் வகை - டலிட்புரட்டோங்கிரி.
முதல் தலைமுறை திராவிட இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டு, அவற்றால் பயனடைந்து ஓரளவு சமூக நீதியின் பயன்களை அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் நிறைந்த இந்த வகையினர், திராவிட இயக்க அரசியல் வரலாறும், அவற்றால் தமிழ்ச் சமூகம் அடைந்த நன்மைகளும் குறித்து நன்கு அறிவார்கள், ஆனாலும், சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது இரட்டைக் குழல் என்று பல்ட்டி அடிப்பதும், பிறகு கண்ணாடி விரியன் என்று அந்தர் பல்ட்டி அடிப்பதுமாய் போக்கு காட்டுவார்கள்.
அரசியல் தரகர்களின் சொர்க்கம் இவர்கள், உள்ளடி வேலைகள் செய்து தங்கள் சொந்தத் தலைவர்களையே பல இடங்களில் வீழ்த்தி வேடிக்கை பார்த்தபடி தலைமைக்கு விசுவாசம் காட்டும் மஹா நம்பிக்கைக்குரியவர்கள். நமக்கென ஒரு கட்சி உருவாகி விட்டது என்கிற ஒரே காரணத்துக்காக வரலாற்றை மறந்தவர்கள்.
நீ பெரியாரையும், கலைஞரையும் அடிப்பது போல அடி, பிறகு கூட்டணிக்கோ இன்ன பிற தேவைகளுக்கோ திராவிடம் தேவைப்படும் போது நான் அழுவது போல அழுகிறேன் என்பார்கள், திடீரென்று நாக்பூர் காவி சேவக்குகளுடன் நெருக்கம் காட்டும் பொதுச் செயலாளர்களையும், தேர்தல் நேர ஒப்பந்தக்காரர்களையும் பெற்ற இந்த வகையின் திராவிட அரசியல் எதிர்ப்பு, ஆட்சி மற்றும் அதிகார அரசியலுக்கான ஒருவிதமான தேடல்.
மூன்றாம் வகை - நடுசென்டோங்கிரி.
ஏதாவது ஒரு காவி அமைப்பின் அடிப்படை உறுப்பினராக இருந்து கொண்டு நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பல வியக்கத்தக்க பெயர்களில் உலா வரும் நேரடிப் பார்ப்பனர்கள், அவர்களை அடிவருடிப் பிழைக்கும் ஆண்டைகள், சாதிய ஆற்றல்களை ஒன்றிணைத்து அதன் மூலம் அதிகாரப் பலன்களை அரசியல் வணிகத்தின் மூலம் அறுவடை செய்யும் பாமக, ஐ.ஜே.கே, கொங்கு மண்டலத்தின் சில சாதிக் கட்சிகள் மற்றும் பல சில்லறை ஆண்டைகளின் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் இந்த வகையில் பெரும்பான்மையாக இருப்பவர்கள்.
மிக முக்கியமாக ஊடகங்களில் உலா வருகிற இந்த வகையினர் எல்லா வகை அரசியல் வரலாறும் அறிந்தவர்கள், ஜனதா, காங்கிரஸ், பாரதீய ஜனதா, தி.மு.க, அ.தி.மு.க, குடியரசுக் கட்சி, அமெரிக்க ஜனநாயகக் கட்சி, போலந்து மக்கள் கட்சி என்று உலகெங்குமிருக்கும் எந்தக் கட்சியிலும் பதவி கொடுக்கப்பட்டால் சேர்ந்து கொள்ளக் கூடிய உயரிய கொள்கைகளும், வாழ்வியல் அறமும் கொண்ட சந்தர்ப்பவாதக் கும்பலின் இந்த வகை சிறுபான்மையாக இருந்தாலும் வீரியமிக்க பரப்புரை அணிகளைக் கொண்டது.
நான்காம் வகை - நெறிடோங்கிரி.
கடும் நச்சினை நாவில் கொண்ட மிக ஆபத்தான கடைசி வகை, தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளில், ஜெயா அல்லது சசிகலாவின் பகற் கொள்ளைகளை, பாரதீய ஜனதாவின் மக்கள் விரோத, மதவாத, கார்ப்பரேட் தரகு அரசியலை ஒரு நடுநிலையான ஊடகவியலரோ, திராவிட இயக்க ஆளுமையோ மக்களுக்குச் சொல்ல முற்படும் போது தட்டையாக முகத்தை வைத்துக் கொண்டு சர்க்காரியா, ஈழம், 2ஜி, ஸ்பெக்ட்ரம், ஏர்செல், ஆ.ராசா என்று திமுகவையும், அதிமுகவையும் பொதுமைப்படுத்தும் வேலையை ஒரு தேர்ந்த கவிஞனுக்கே உரிய நளினத்துடனும், திறமையுடனும் மடை மாற்றும் ஊடகக் களவாணிகள் அல்லது "ப்ரீபெய்டு" ஜர்னலிசம் செய்யும் மீடியாப் பார்ப்பனீயத்தின் செல்லப்பிள்ளைகள் இந்த வகையினர்.
மதிப்புக்குரிய பேராசிரியர் திரு.ராஜன் குறை அவர்களின் கீழ்க்கண்ட கருத்து ஆழமானதும், இந்த நான்காம் வகை நெரிடோங்கிரி வகையினருக்குப் போதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகவும் நான் கருதுகிறேன்.
"தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், ஊழல், பாபுலிசம் என்றெல்லாம் கூறும் போக்குகளை சிந்தனை மறுப்பு என்றே கணிக்கிறேன். இரண்டில் ஒன்றை ஆதரிக்கலாம்; வேறொரு கட்சியைக் கூட ஆதரிக்கலாம். ஆனால் நடுநிலை என்ற அபத்தமான கற்பிதத்திலோ, இலட்சியவாத பிரமைகளாலோ இரண்டு கட்சிகளையும் ஒன்றாக்கி பேசுவது என்பது அரசியல் சிந்தனையை, ஆய்வை முளையிலேயே கிள்ளி எறியும் செயல்.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கலாம்; இருக்கின்றன. ஆனால் அந்த ஒப்புமைகளை ஆராய்வதும் வித்தியாசங்களை நுட்பமாக புரிந்துகொள்ளும் நோக்கில் அமைவதுதான் நலம்".......
அ.தி.மு.கவும், தி.மு.கவும் ஒன்று என்று எந்த அடிப்படை ஆதாரங்களையும் சொல்லாமல், அதே கீறல் விழுந்த ரிக்கார்டைப் போட்டு ஆடுகிற யாரும் (கம்யூனிஸ்ட்கள் உட்பட) பேராசிரியர் சொல்வதைப் போல சிந்திக்க மறுப்பவர்கள், அ.தி.மு.க பெயரளவில் திராவிடத்தைப் பயன்படுத்துகிற ஒரு போலியான மக்கள் விரோத இயக்கம், தி.மு.கவின் வரலாற்றோடு மக்கள் விரோத ஜெயா மற்றும் இன்றைய பினாமி அரசின் பொதுச் செயலாளர் A2 வை ஒப்புமை நோக்கில் பேசும் ஊடகக் களவாணிகள் சிந்திக்க மறுப்பவர்கள் அல்ல, சிந்திக்கும் தகுதியே அற்ற மடச் சாம்பிராணிகள்.
-- BY Arivazhagan Kaivalyam  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: