செவ்வாய், 28 ஜூன், 2016

திருநெல்வேலி : அண்ணன் தங்கை மாலாவை வெட்டி கொன்றான்.. ஆணவ கொலை

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள மேலமூன்றடைப்பைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற கணேசன். அரசுப் பேருந்து நடத்துநர். இவரது மகன்கள் கிருஷ்ணராஜா, செல்வக்குமார், மகள் மாலா. இதில், கிருஷ்ணராஜா சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றுகிறார். மாலா, பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தபோது, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் வேலை செய்துவந்த சார்லஸ் என்பவருக்கும் மாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். சார்லஸுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனராம். இந்த விவரம் தெரியவந்ததும், மாலாவை பெற்றோர் கண்டித்ததால் அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. இதனிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மாலா காணாமல் போயிருக்கிறார்.

இதுகுறித்து, மாலாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், மூன்றடைப்பு போலீஸார் விசாரணை நடத்தி, சார்லஸிடம் இருந்து மாலாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து மாலாவுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றுவந்ததாம். இதற்கு மாலா எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இருந்து ஊருக்கு வந்த கிருஷ்ணராஜா, தங்கையிடம் திருமணத்துக்கு சம்மதிக்குமாறு கூறினாராம். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜா, மாலாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த மாலாவை பெற்றோர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனையில் மாலா இறந்தார். இதுதொடர்பாக மூன்றடைப்பு காவல் நிலைய ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் வழக்குப் பதிந்து, தலைமறைவான கிருஷ்ணராஜாவை தேடி வருகிறார்.thetimestamil.com

கருத்துகள் இல்லை: