புதன், 16 டிசம்பர், 2015

ஜெயலலிதா 700 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியை மூடி....ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் அளித்தார். சைதாப் பேட்டையில் உள்ள ஜோதியம்மன் நகர், கோதாமேடு, சீனிவாசா தியேட்டர், எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் உடமைகளை இழந்த 14,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள்,போர்வை, புடவை, லுங்கி, பாய் உள்ளிட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை நிவாரண உதவியாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது, ’’முதல்வர் தனக்கென்று குடும்பம் கிடையாது என்று கூறி இருக்கிறார். ஆனால் வேளச்சேரி மாலில் உள்ள 11 தியேட்டர்களை தன்னுடைய தோழி சசிகலா பெயரில் வாங்கியது குறித்து இந்து பத்திரிக்கை ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. அதற்கு எந்தவிதமான மறுப்பும் ஜெயலலிதா இன்னும் தெரிவிக்கவில்லை.

கொடநாடு, சிறுதாவூர் போன்ற இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் பங்களா வைத்துள்ள அவர் தான் இன்று தனக்கென்று எந்த சுகமும் கிடையாது என்ற சினிமாவில் பேசுவது போல் "வாட்ஸ் அப்பில்" பேசியிருக்கிறார்.
மழை வெள்ளத்தால் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் தான் ஒரு நாடகத்தை என்று சொல்லுவதை விட நீலிக்கண்ணீரை வடித்திருக்கிறார் ஜெயலலிதா.
செம்பரம்பாக்கம் ஏரியை மிகவும் தாமதமாக அதுவும் ஜெயலலிதாவின் உத்தரவுக்காக காத்திருந்து ஒரே நேரத்தில் 35.000 கன அடி தண்ணீரை திறந்து விட்ட காரணத்தால் தான் சென்னை மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல 700 பேருக்கு மேல் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியை கூட மூடி மறைத்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது தொடர்பாக தன்னால் பதில் சொல்ல முடியாததால் தவறான ஒரு தகவலை தலைமை செயலாளரை விட்டு சொல்ல வைத்திருக்கிறார். எப்படி சொத்து குவிப்பு வழக்கிற்கு பவானி சிங் ஜெயலலிதாவிற்கு துணை நின்றாரோ அதே போல் ஜெயலலிதாவின் ஆணவ போக்கிற்கும் அநியாயத்திற்கும் தலைமை செயலாளர் துணை நிற்பது உள்ளபடியே வெட்கபட வேண்டிய விஷயம். ஊர் மக்கள் எல்லாம் எதற்கும் லாயக்கில்லாதவர்களை வாயிலே வடை சுடுறாங்கனு சொல்லு வதுண்டு.

அது போல தான் இன்று ஜெயலலிதா வாட்சப்பில் வடை சுடுகிறார். நிவாரண நிதியையும், நிவாரண உதவிகளையும் மிகச் சிறப்பான வகையில் செயலாற்றி வரும் பொது நலச் சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சி குழு மூலமாக கொடுத்தால் தான் முறையாக சென்றடையும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களை ஒரு முறை சந்திக்காத ஜெயலலிதா அதையெல்லாம் மறைத்து விட்டு இன்றைக்கு "மக்களுக்காக நான், மக்களால் நான்" என்று சொல்லி கொண்டு நீலிக்கண்ணீர் வடித்து கொண்டிருகிறார். மக்கள் இவர் மீது இப்போது கடும் கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டு தான் இன்று சினிமாவில் வசனத்தை பேசுவது போல வாட்சப்பிலும் வசனம் பேசியுள்ளார்’’என்று தெரிவித்தார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: