வியாழன், 13 ஆகஸ்ட், 2015

மரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்? சீமைக் கருவேல மரங்களும், பார்த்தீனியம் செடிகளும், படர் தாமரையும் (ஆகாய தாமரை), தைலமரம் எனப்படும் யூக்கப்லிடக்ஸ்....

karuvela maramஎழுத்தாளர்: முகிலன்  keetru.com
 மரம் வளர்ப்போம் எனும் முழக்கங்கள் நாடு முழுக்க எழும் போது, மரத்தை வெட்டு எனும் முழக்கம் நம்மைப் போன்ற இயற்கை ஆர்வலர்களால் தீவிரமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஏன் தமிழகத்தில் இந்த நிலை என எண்ணிப் பார்க்க வேண்டும்.
சீமைக் கருவேல மரம் என்று அழைக்கப்படும் மரங்களும், பார்த்தீனியம் செடிகளும், படர் தாமரையும் (ஆகாய தாமரை), தைலமரம் எனப்படும் யூக்கப்லிடக்ஸ் மரங்களும் இன்று மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் மொத்த காடுகளையும் அழித்து அட்டுழியம் செய்பவைகளாக இவை உள்ளது.
உயர்ந்த மலைகள் முதற்கொண்டு, பாதுகாக்கப்பட்ட வன சரணாலயங்கள், நெல் விளையும் நிலங்கள், கடற்கரை பகுதிவரை பரவியுள்ளது. எல்லா வகையான மண்ணிலும், எவ்வகையான வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளர்ந்து நிற்பதால் நமது மண்ணிற்கே உரிய அனைத்து வகையான தாவரங்களும், பறவை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் அழிவை நோக்கியுள்ளன.


சீமைக்கருவேலமுள் இல்லாத இடமென்று எதுவுமில்லை. சீமைக்கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. தமிழ் குமுகத்தில் உள்ள அனைவரும் இவைகளை பற்றியும் இவற்றின் பாதிப்பை பற்றியும் கட்டாயம் உணர்ந்திருக்க வேண்டும்.
சீமைக் கருவேலமரம் என்று அழைக்கப்படும் மரம், தமிழகத்தில் வேலிகாத்தான், உடைமரம், வேலிமரம், முள் மரம், வேலிக்கருவை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கருவேல மரம் எனும் போது நமது பாரம்பரிய மண்ணின் வழிவழியான நாட்டு கருவேல மரம் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியது தேவையானதாகும். நமது வளத்தை அழிக்கும் சீமைக் கருவேல மரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நமது தமிழ் மண்ணுக்குரிய கருவேலமரத்திற்கு இருக்கும் எந்த ஒரு சிறப்பும் ரவுடி மரம், நிலத்தரகன் மரம் என அழைக்கப்படும் வேலிக்கருவை எனப்படும் சீமைக் கருவேல மரத்திற்கு கிடையாது.
நாட்டு கருவேல மரத்தின் பயன்பாடுகள் :
===================================
நமது கருவேல மரம் உயர்ந்து வளரும். இம்மரங்கள் வைரம் பாய்ந்த மரங்கள். மிக உறுதியான தன்மை கொண்டவை. எனவேதான் வேளாண்மைக்கு தேவையான ஏர்கலப்பை, அரிவாள் மற்றும் கோடாரிக்குத் தேவையான காம்புகள், கைப்பிடிகள் செய்யவும், மாட்டு வண்டிகள், வீட்டிற்கு தேவையான வாசல், சன்னல், பலகை, சட்டங்கள் போன்ற பல்வேறு மரப்பொருள் செய்வதற்கு இம்மரங்கள் பயன்பட்டு வருகிறது. நாட்டு கருவேல மரத்தால் உறுதியானவையாக இருப்பதால் உளுத்து போய் விடுவதில்லை.
நாட்டு கருவேல மரத்தின் பிஞ்சு குச்சிகள், பல்துலக்க பயன்படுத்தப்ட்டுகளாக கட்டி அன்றாடம் சந்தையில் விற்கப்படுகிறது. நம்மீபடுகிறது. இன்று சிறு நடுத்தர ஊர்களில் கருவேல மரம் பல்குச்சி சிறு சிறுகது பற்பசை, பல்துலக்கி என எண்ணற்றவை திணிக்கப் பட்டாலும் கூட கருவேல மர பல்குச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. எனவேதான் "ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி" என்ற பழமொழி உள்ளது. கருவேலம்பட்டை பற்பொடி என்பது எங்கள் பகுதியில் ஒரு காலத்தில் மிகச்சிறப்பாக விற்பனையான பற்பொடியாகும். அந்தப் பற்பொடியின் துவர்ப்பு சுவை இப்போதும் எனது நாவில் உள்ளது.
மேலும் வேலமரத்தின் காய்கள் விலங்குகளுக்கு குறிப்பாக ஆடுகளுக்கு உணவாகப் பயன்படக் கூடியது. கருவேல மரத்தில் வடியும் பிசின்கள்தான் ஒரு காலத்தில் பள்ளியில் தேங்காய் ஓட்டியில் எடுத்து வந்து வைத்துக் கொண்டு ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இப்படி பல்வேறு வகையில் நாட்டு கருவேலமரங்கள் பயன்படுத்தப்பட்டன, பயன்பட்டு வருகின்றன.
தமிழர்களும் மரங்களும்
=====================
ஒவ்வொரு மண்ணும் அதற்கேற்ற மரபான மரம் உட்பட அனைத்தையும் கொண்டு இருக்கும். தமிழர்கள் தங்களது நிலத்தை ஐந்து வகையாக் பிரித்து, அதை ஐந்திணைகள் என அழைத்து அதில் ஒவ்வொரு வகையிலும் வளரும் மரம், செடிகளை அறிந்து வைத்து செயல்பட்டார்கள். பல மரங்களை அதன் பயன்பாட்டு முக்கியத்துவம் கருதி கடவுள் எனவும் கூறிக் கூட வணங்கினார்கள்.
இயற்கையை அறிந்து, புரிந்து, இயற்கையோடு இணைந்து, இயற்கையையே கடவுளாக வணங்கும் நீண்ட நெடிய பாரம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் தமிழர்கள். ஆனால் இன்று இந்த மண்ணிற்கு எந்த வகையிலும் பொருத்தப்பாடு இல்லாத ஒரு மரம், சீமைக் கருவேல மரம் நமது தலையில் திணிக்கப்பட்டு, தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது.
சீமைக் கருவேல மரம்
=====================
மெக்சிகோ, கரீபியன் தீவு, தென் அமெரிக்காவை தாயகமான கொண்ட இந்த சீமைக் கருவேல மரம் ஆஸ்திரேலியாவில் இருந்து விதைகளாக கொண்டு வந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு தூவப்பட்டது என சொல்லப்படுகிறது. மஞ்சக் நிற நீண்ட பூக்களையும், முதிர்சசியில் மஞ்சள் நிறமாக மாறிவிடும் பச்சை நிற கைகளை உடைய சீமைக் கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் Prosopis Julifora என்பதாகும்
சீமைக் கருவேல மரம் விறகு, அடுப்புக்கரி, வேலி போன்ற பயன்பாடுகளை முன்வைத்து கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. தமிழநாட்டின் தீராப் பகையாக விளங்கிவரும் சீமைக் கருவேல மரம். காங்கிரசு கட்சியிஆட்சியில் இவை தமிழநாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக பரப்பப்பட்டது. யாருடைய யோசனை என்பது இன்று வரை அறியப்படாமலேயே உள்ளது
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு பரப்பப்பட்டு இன்று தமிழநாடு முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சீமைக் கருவேல மரம் எனப்படும் வேலிகாத்தன் மரங்கள் தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும், சுற்றுச் சூழலுக்கும், நீர்வளத்திற்கும், உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் தொந்தரவுகள் பாதிப்புகள் அளவிட முடியாதவை.
மக்களுக்கு எந்த ஒரு அறக்கேடும், கொடுமையும் அரசால் இழைக்கப்படும் போது முதலில் அதை எதிர்த்து மிகக் கடுமையான கோபமும், அதை எதிர்த்த போராட்டமும் நடக்கும். பின்பு அரசின் தொடர் அச்சுறுத்தல், அடக்குமுறை, நெருக்கடிகளால் அதுவே பழகிப் போய், மக்கள் கொடுமைமைகளை இயல்பானதாக மாறி ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும். இதுதான் அரசு வழிமுறை. பின்பு மாபெரும் மக்கள் புரட்சி ஏற்படும் வரை நீடிக்கும் நிலை இதுதான்.
ஏற்கனவே நம்மீது பசுமைப்புரட்சி எனும்பெயரில் நம்மீது திணிக்கப்பட்ட வேதியியல் உரங்கள், வெளிநாட்டு விதைகள், பூச்சி மருந்து எனப்படும் விச மருந்துகள் நமக்கு பழகிப் போனது போல, இன்று சீமைக் கருவேல மரங்கள் எனும் வேலிக்கருவையையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்.
சீமைக் கருவேல மரம் பரவும் விதம் :
===============================
வேலிக்கருவியின் பச்சை நிறமாக இருந்து பின்பு மஞ்சள் நிற காய்களை கொண்டதாக மாறும். இதை ஆடு, மாடுகள் எப்பவாதுதான் சாப்பிடும். விரும்பி சாப்பிடுபவை அல்ல. கால்நடைகள் சாப்பிட்டு அதன் விதைகள் மூலம் அனைத்து இடத்திற்கும் வேலிக்கருவை பரவுகிறது. மேலும் மஞ்சள் நிற காய்கள், அதில் உள்ள விதைகள் எத்தகைய பூச்சி அரிப்புக்கும் உள்ளாகாமல் பத்தாண்டுகள் வரை உயிர்ப்பு தன்மையுடன் இருக்கும். எனவே இந்த விதைகள் காற்றின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு அவை புதைகின்ற இடத்தில் எல்லாம் முளைத்து விடுகின்ற வீரிய தன்மை கொண்டவையாக சீமைக் கருவேல மரம் உள்ளது.
சீமைக் கருவேல மரம் பாதிப்புகள் :
===============================
சீமைக் கருவேல மரம் நிழலில் செடிகள், மரங்கள் மட்டும் வளராமல் போவது போல் அதன் நிழலில் கட்டி வைக்கப்படும் ஆடுமாடுகளும் மலட்டுத் தன்மை கொண்டவையாக மாறி வருகின்றன. வேலிக் கருவை நிழலில் தொடர்ந்து தங்கி இருப்பவர்களுக்கு குழந்தை பேறு இன்மை ஏற்படுகிறது. பால்சுரக்கும் ஆடு, மாடுகளின் பால் சுரக்கும் திறன் குறைந்து வேலிக் கருவையின் இலை, தழைகளை எந்த விலங்குகளும் சாப்பிடுவதில்லை.
இன்றும் சீமைக் கருவேல மரத்தின் முள் குத்தி கால்களில் பாதிப்பு ஏற்பட்டவர்களை ஒவ்வொரு சிற்றூர்களிலும் பார்க்கலாம். முள் மரங்கள் பலவுண்டு. ஆனால் வேலிக்கருவை மரத்தின் முள் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு பலருக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மண், நீர், காற்று, ஆகாயம் :
===========================
உடை மரம் எனும் பெயரில் தென்மாவட்டத்தில் அழைக்கப்படும் சீமைக் கருவேல மரத்தின் சல்லி வேர்கள் நிலத்தடி நீரை பூமிக்குள் விடாமல் மேல் பகுதியிலேயே நிறுத்தி தேங்க வைத்து விடுகிறது. எனவே சீமைகருவேல மரங்கள் இருக்கும் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் என்பது அறவே இல்லாமல் போய்விடுகிறது.
நீர்நிலை பகுதிகளில் (ஆறு, ஏரி, குளம், குட்டை, கண்மாய், கிணறு) சீமைக் கருவேல மரங்கள் இருப்பதால் தொடர்ந்து உதிரும் இம்மரத்தின் இலைகள் மூலம் அந்த நீர்நிலைகள் நச்சுத்தன்மை உடையவைகளாக மாறுகின்றன. தண்ணீரில் உள்ள உயிர்வாழும் திறன் கொடுக்கும் வாயுக்கள் இல்லாமல் செய்து விடுகின்றன இதனால் அதில் வாழும் தவளை, மீன்கள், நண்டு உட்பட நீர்வாழ் உயிரினங்கள் அதில் தொடர்ந்து வாழ முடியாமல் சாகின்றன அல்லது வெளியேறுகின்றன. இதனால் நீர்நிலைகளில் வாழும் பாம்புகளுக்கு தனது தேவையான உணவு கிடைக்காததால் அவையும் வெளியேறுகிறது. ஒரு மிகப்பெரிய உணவு தொடர சங்கிலி அறுபடுகிறது. மேலும் அந்த நீராதாரம் அழிந்து, தூர்ந்து பயனற்றவையாக மாறிவிடுகிறது
சீமைக்கருவேல மரங்கள் நிலத்தில் ஆழத்தில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி வாழ்வதால் நீர்வளம் உள்ள பகுதியில் மட்டுமின்றி வறண்ட நிலங்களில் கூட வேர்பிடித்து வளரும் தன்மை கொண்டது. நிலத்தில் நீர் இல்லா விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி வாழும்.
40 அடி உயரம் வரை கூட வளரும் தன்மையுடைய இம்மரங்கள் ஏறக்குறைய 100 அடி ஆழம் வரை இதன் வேர்கள் செல்லும் தன்மையுடையது. அமேரிக்க நாட்டில் உள்ள அரிசோனோ என்ற மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சீமைகருவேல மரத்தின் வேர் 175 அடி (53மீட்டர்) ஆழம் வரை சென்றது கண்டறியப்பட்டது. இதன் வேர் செல்லும் அனைத்துப் பகுதியிலும் நீராதாரத்தை வேகமாக உறிஞ்சக் கூடியதாக இவை உள்ளது. இம்மரத்தின் எடையைப் போல இம்மரத்தின் வேர்கள் இரண்டு மடங்கு எடையைக் கொண்டவையாக உள்ளது.
சீமைக் கருவேல மரம் எங்கு வளர்கிறதோ, அங்கு அவை மட்டுமே வளரும், வாழும் சீமைக் கருவை கைப்பற்றிய நிலங்கள் அவைகளுக்கு மட்டுமே சொந்தமானவை. அதன் கீழ் வேறு எந்த தாவரங்களும், மரங்களும், விலங்குகளும், பறவைகளும் உயிரினங்களும் எவையும் வாழ முடியாது.
சீமைக் கருவேல மரத்தில் எந்த பறவைகளும் அமர்வதும் இல்லை. கூடுகட்டி வாழ்வதும் இல்லை. இம்மரத்தில் பறவைகளுக்கு தேவையான குளிர்ச்சியோ, பழங்களோ. விரிந்த கிளைகளோ இல்லை. மேலும் இம்மரத்தில் உள்ள மிகக் கூர்மையான அடர்த்தியான முட்களின் காரணமாகவே பறவைகள் கூடுகட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யவும் முடிவதில்லை. இம்மரங்கள் உயிர்க்காற்றினை(ஆகசிஜனை) குறைவாகவே வெளியிடும். எனவே பறவைகள் போன்ற மற்ற உயிரினங்கள் இம்மரத்தை நெருங்கி வருவதில்லை.
சீமைக் கருவேல மரம் மிக விரிவாக படர்ந்து வளருவதால் பறவைகளுக்கான வாழ்விடம் மிகவும் சுருங்கி வருகிறது. பல்வேறு நீர்நிலைகளிலும் வேலி கருவை மரங்கள் வளர்வதால் நீரில் வாழும் பறவைகள் இதன் முட்கிளைகளில் சிக்கி இறக்கவும் நேரிடுகிறது.
இன்று நகரங்களில் மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு கற்கூரைக் கட்டடங்களாக மாற்றப்பட்டுள்ளது. சிற்றூர்களில் வேளாண்மை அரசின் கொள்கைகளால் லாபமற்ற தொழிலாகவும், மதிப்பற்ற தொழிலாகவும் மாற்றப்பட்டு விட்டது. மக்கள் வேளாண்மை செய்யவே அச்சப்பட்டு வேளாண்மை நிலங்களை சும்மா தரிசாகப் போடுவதால் எங்கு நோக்கினும் சீமை கருவேல மரங்களாக நிறைந்து உள்ளது. இதனால் பறவைகளின் எதிர்காலம் என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாக மாறி வருகிறது.
தமிழகத்தில் இருந்து சீமைக் கருவேல மரம் இன்று டெல்லி, குஜராத், அஸ்ஸாம் என அனைத்து பகுதியிலும் இது நீக்கமற உள்ளதை இந்தியா முழுக்க பயணம் செய்யும் நாங்கள் பார்க்கிறோம். கேரளம் மட்டும் விழிப்புணர்வோடு இருந்து சீமை கருவேல மரம் இல்லாத பகுதியை உள்ளது. இன்று நாடு முழுக்க அறிவிக்கப் படாத தேசிய மரம் சீமைக் கருவேல மரங்களே உள்ளது.
ஆய்வு தகவல்கள் :
================
தமிழகத்தில் 10 ச. மீ. க்கு ஒரு மரம் என்றிருந்த சீமைக் கருவேலமரம் தற்போது 4 ச. மீ. க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2. 5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துவருவதாக வேளாண்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக ளவிலும், திண்டுக்கல், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அதிகளவிலும் சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. பொதுவாக கருவேல மரம் அதிகமாகவும், நெருக்கமாகவும் டெல்டா மாவட்டங்களில் உள்ளன. இந்த மாவட்டங்களில் 10 ச. மீ. க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரங்களின் எண்ணிக்கை தற்போது 4 ச. மீ. க்கு ஒரு மரம் என்ற விகிதத்துக்கு அதிகரித்துவிட்டன.
இந்த மரங்கள் டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகளில் காவிரி நீர் சேராத பகுதிகள், மற்ற மாவட்டங்களில் நீர் வசதியில்லாத பகுதிகள், மாற்று விவசாயம் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளை சென்றடையாத பகுதிகளில் புற்றீசல் போல் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. சிறியதாக இருக்கும் இந்த மரங்களின் செடிகளை அலட்சியப்படுத்துவதால் மரமாக வளர்ந்தபின் அவற்றை எடுப்பதற்கான நிதி ஆதாரமில்லாமல் விவசாயிகள் விட்டுவிடுகின்றனர்.
வண்டல், களிமண்ணில் உள்ள கால்சியம் மற்றும் நீர் ஆதாரத்தை நிலைத்து வைத்திருக்கும் தன்மை இந்த மரங்களுடைய விதை பெருக்கத்துக்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் தற்போது இந்த மரங்கள் வேலிகளைத் தாண்டி வயல்வெளிகளிலும் பரவிவிட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் 10 ஏக்கர் பரப்பு நிலத்தையாவது இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 முதல் 400 பஞ்சாயத்துகள் உள்ளன.
மொத்தமாக கணக்கிடும்போது, தமிழகத்தில் 10 ச. மீ. க்கு ஒரு மரம் என இருந்த சீமைக் கருவேல மரம் தற்போது 4 ச. மீ. க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 1. 75 முதல் 2. 5 சதவீதம் சாகுபடி பரப்பு குறைகிறது. மற்ற மாவட்டங்களில் 0. 9 முதல் 1. 2 சதவீதம் சாகுபடி பரப்பு குறைகிறது.
இந்த சீமைக் கருவேலமரம் ஆணி வேர் கொண்டவை. இதன் வேர்களுடைய உள் அமைப்பு பல அடுக்குகளை கொண்டது. வறட்சியை தாங்கி வளர்ந்து, வேர்கள் உயிருடன் நிலைத்து இருக்கும் தன்மை கொண்டவை. பிற தாவரங்களுக்கு வேலி பயிராக இந்த மரங்களை வைத்திருந்தால், அந்த செடிகளுக்கு அளிக்கக்கூடிய தண்ணீரை 35 முதல் 45 சதவீதம் உறிஞ்சிக்கொள்கின்றன. அதனால், வேலி பயிராகக்கூட இந்தசீமைக் கருவேலமரங்களை வைத்துக் கொள்ளக்கூடாது.
இன்று வேலிக்கருவையை வெட்டி மூட்டம் போட்டு அடுக்கரி எடுத்து வணிகம் செய்பவர்கள் அனைவரும் வேளாண்மையால் பாதிக்கப்பட்டவர்கள், வேளாண்மை ஈட்டல் இன்மையால் அதை கைவிட்டவர்கள்.
அரசின் மோசமான அராஜகமான பொருளாதார கொள்கையால் வேளாண்மை முழுக்க நசிந்து போய் விளைநிலங்களில் சீமைக் கருவேல மர ஆக்கிரமிப்பில் உள்ளது. நமதுநாடு எப்படி பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு உள்ளதோ அதே போல் விளை நிலங்கள் சீமைக்கருவேல மரங்களின் வேட்டைக் காடாக மாற்றப்பட்டு உள்ளது
சீமைக்கருவேல மரம் ரவுடி மரம்:
=============================
சீமைக்கருவேல மரம் பலராலும் ரவுடி மரம் என அழைக்கப்படுகிறது. ரவுடிகள்தான் தாங்கள் இருக்கும் பகுதியில் தங்களை மீறி யாரையும் வளரவிட மாட்டார்கள், அடக்கி நசுக்கி விடுவார்கள். அதுபோல் வேலிக்கருவை இருக்கும் பகுதியில் அதன் நிழல்படும் பகுதியில் வேறு எந்த புல்லினமும் முளைக்காது. எனவே இவை பரவியதன் மூலம் தமிழகத்தில் இருந்த எண்ணற்ற மூலிகைகள் இன்று இல்லாமலேயே அழிந்து போய் வருகிறது.
சீமைக்கருவேல மரம் நிலத்தரகன் மரம்
=====================================
அரசின் மோசமான அராஜகமான பொருளாதார கொள்கையால் வேளாண்மை முழுக்க லாபமின்ரி நசிந்து போய் விளைநிலங்கல் பலவும் தரிசாக போடப்பட்டு வருகிறது. டெல்டா பகுதியில் போதுமான மழை, தண்ணீர் இன்மையால் நிலம் தரிசாக கிடக்க, இது சீமைக் கருவேல மரம் எனும் நச்சு மரம் அனைத்து இடங்களிலுள் பரவலாக வளர வாய்பாகி விடுகிறது. டெல்டாவின் கடைமடை பகுதியில் உள்ள நிலத்தில் வண்டல், களிமண்ணில் உள்ள கால்சியம் மற்றும் நீர் ஆதாரத்தை நிலைத்து வைத்திருக்கும் தன்மை இந்த சீமைக் கருவேல மரங்களுடைய விதை, மரம் பெருக்கத்துக்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.
சீமைக் கருவேல மரம் வளர்ந்த இடங்களில் நிலத்தை மீண்டும் சரி செய்து பயிர் விளைய வைப்பது என்பது அவ்வளவு இலகுவான விசயமல்ல. இதற்க்கு பணம் நிறைய செலவாகும். அந்த செலவை ஏழை, நடுத்தர விவசாய்கள் ஏற்பது மிகவும் கடினமான செலவாகும். எனவே வேறு வழியின்றி இந்த நிலங்கள் விற்பனைக்கு வந்து விற்கப்படும். சீமைக் கருவேல மரம் வளர்ந்தால் அந்த நிலம் விற்பனைக்கு என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. எனவே சீமைக் கருவேல மரம் ஒரு வகையில் நிலத்தை விற்றுக் கொடுக்கும் நிலத்தரகன்(புரோக்கர்) மரம் ஆக விளங்குகிறது.
இன்றைய நிலைமை
=====================
பாதுகாக்கப்பட்ட வனங்களில் இவற்றின் வளர்ச்சியால் வனவிலங்குகளுக்கும், நமது ஊர்ப்புறங்களில் ஆடு, மாடுகளுக்கும் மேய்ச்சல் நிலம் கூட இல்லாமல் போய்விட்டது. ஆவாரை, கொழுஞ்சி, துளசி என மண்ணின் எண்ணற்ற மூலிகைகள் நிலத்தில் இல்லாமல் இவற்றால் அழிந்து வருகின்றன.
வறட்சிக்கும், வறுமைக்கும் இட்டுச் செல்லக்கூடிய இந்தத் தாவரத்தினை வேரோடு நீக்கினாலொழிய நமது நீர், நிலம், ஆகியவற்றுடன், பல்வேறு உயிரினங்களையும், மனிதகுலத்தையும் பல்வேறு பாதிப்பில் இருந்து எதிர்காலத்தில் காக்க முடியும். மண், நீர், காற்று மாசுபடுததலில் இருந்து பாதுகாக்க முடியும். விவசாயம் பாதுகாக்க முடியும்
நாம் பின்பற்ற வேண்டிய அமெரிக்க அணுகுமுறை:
============================================
நிலத்தடி நீர் எத்தனை அடி ஆழத்தில் இருந்தாலும் அதுவரை இதன் வேர்கள் சென்று நீரை உறிஞ்சி வறட்சியாக்கும். இம்மரங்களின் அருகில் எவ்வித செடியோ, கொடியோ, மரங்களோ வளரமுடியாது. படிப்படியாக மற்ற தாவரங்கள் வளர முடியாமல் போகும். நீரை எல்லா இடத்திலும் சுரண்டி எடுத்து விடுவதால் இம்மரம் உள்ள அனைத்து இடங்களிலும் மண் களர் நிலமாக மாறிவிடுகிறது எனவே அமெரிக்க அரசு வளர்க்கக்கூடாத நச்சு மரங்களின் பட்டியலில் இம்மரத்தை வைத்திருக்கிறது.
கேரளா அணுகுமுறை :
=====================
அண்டை மாநிலமான கேரளாவில் இம்மரங்களைக் காண முடியாது. அம்மக்களும், அரசும் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்து தங்களது பகுதியினைப் பாதுகாத்து வருகிறார்கள். கடவுளின் தேசம் எனப்படும் கேரளத்தில் இம்மண்ணுக்கு விரோதியான சீமை கருவேல் மரத்தை எங்கும் காண முடியாது. அனைத்து மக்களும் விழிப்புணர்வுடன் இருந்து இம்மரத்தை வளர விடாமல், பரவ விடாமல் அழித்து வருகின்றனர்.
மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
===========================================================
சமூகத்திற்கும், உயிரினங்களுக்கும், இயற்கைக்கும் எதிராக உள்ள சீமைக் கருவேல மரம் ஒழிக்கப் பட வேண்டும் என மக்கள் நல அக்கறையில் வழக்கு தொடர்ந்தனர்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை, சம உரிமை அமைப்பு தொடர்ந்து, மக்கள் வழ க்கறிஞர். அழகுமணி வாதாடிய வழக்கில் சீமை கருவேல மரம் ஒழிப்பு பற்றி தீர்ப்பு ஒன்றை அளித்து தமிழக அரசிற்கு உத்தரவிட்டது. உத்தரவு எண்:WP/MD No.18748/2013 ஆகும். இதில் 11 தலைப்பில் சீமைக் கருவேல மரம் ஒழிப்பு பற்றி குறிப்பிட்டு உத்திரவிட்டது
மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பும் - தமிழக அரசின் அணுகுமுறையும்
=========================================================
நமது தமிழகத்தில் நீதிமன்றம் உத்தரவு கொடுத்தால், அது நடைமுறைக்கு வந்துவிடும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.
கடந்த காலத்தில், தாமிரபரணி மணல் கொள்ளை வழக்கு தீர்ப்பும் :
2010ம் ஆண்டில் சமூக ஆர்வலர் நெல்லை சுடலைக்கண்ணு, இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர். நல்லக்கண்ணு ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் 5 மணல் குவாரிக்களின் பெயரில் ஆறு முழுக்க நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நீதிபதி பானுமதி, நீதிபதி நாகமுத்து ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளிலும் மணல் அள்ளுவதில் முறைகேடு நடந்துள்ளது, நடந்து வருகிறது எனக் கூறி தமிழகம் முழுக்க உள்ள ஆற்றுமணல் குவாரிகளில் பின்பற்ற வேண்டிய பொது வழிகாட்டுதல் வழிமுறைகளை அளித்தது.
மேலும், ஆற்று மணல் அள்ளுவதைக் கண்காணிக்க, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்பு குழுவையும், மாவட்ட நீதிபதி தலைமையிலான மண்டலக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்தனர்.
தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளையைப் பற்றி கண்காணிக்க மாநில கண்காணிப்புக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைமையாகக் கொண்டும் அரசு நியமிக்கும் உறுப்பினர் செயலர் மாநிலக் கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு தொழில்நுட்ப விசயங்களில் உதவி செய்வார் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை நான்கு மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை தலைவராகவும் நீர்வளத் துறையிலிருந்து ஒருவரையும் சுற்றுப்புறவியலாளர் ஒருவரையும் கொண்ட மண்டல அமைப்புக் கமிட்டி அமைத்துச் செயல்பட வேண்டும் என்று கூறி 2. 2. 2010 அன்று ஆற்று மணல் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி நீதிபதி நாகமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
மேலே குறிப்பிட்ட கண்காணிப்புக் குழுக்கள் 2 ஆண்டுகள் பொறுப்பிலிருக்கும். குழுத் தலைவருக்கு மாதம் ரூ 75 ஆயிரமும் குழு உறுப்பினருக்கு மாதம் ரூ 25 ஆயிரமும் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவகத்திலும் இந்தக் குழு செயல்பட ஒரு அலுவலக அறை ஒதுக்கியும், அலுவலக வேலைக்காக தட்டச்சர் ஒருவரையும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் ஒதுக்க வேண்டும் என்றது. மேலும் தமிழகம் முழுவது ஆற்றுமணல் அள்ளுவதில் பொதுவழிகாட்டும் நெறிமுறைகளைக் கூறும் 42 பக்க தீர்ப்பு ஒன்றை அளித்தது.
கண்காணிப்புக் குழு எடுக்கப்படும் மணலின் அளவு, கனிமவளச் சட்டத்தில் கூறப்பட்ட வழிமுறைகளின்படி அறிவியல்பூர்வமாக மணல் அள்ளப்படுவதைக் கண்காணிக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இக்குழுவினரிடம் முறையிடலாம். பாதிப்புகளுக்கு எவ்வாறு இக்குழு தீர்வுகாண வேண்டும் என்பது உட்பட பல்வேறு நடைமுறை சார்ந்த செயல்பாடுகளை, தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி தீர்வுகாணும் வகையில் அமைத்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பு அன்றைக்கு தமிழகத்தை ஆண்டுவந்த கருணாநிதி அரசாலும் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசாலும் பின்பற்றப்படவேயில்லை. ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் தீவிரமாக இருந்தனரே தவிர, ஆற்றுமணல் தடுத்து நிறுத்துவதில் அக்கறை காட்டவேயில்லை. உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புப் குழுக்களை செயல்படுத்த தமிழக அரசு விடவேயில்லை. அவர்களுக்கு அலுவலகங்கள் அறைகூட ஒதுக்கவில்லை. மணல் கொள்ளை பற்றி கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்கள் செயல்படாமலேயே 2012 பிப்ரவரியில் இல்லாமல் போனது. ஆற்று மணல் கொள்ளை தமிழகம் முழுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட சில இடங்களைத் தவிர்த்து அனைத்து இடங்களிலும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பான கூட்டணியோடு இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருகிறது. நீதிமன்றம் உத்தரவு, நடைமுறைக்கு வராமலேயே ஒழிக்கப்பட்டு விட்டது.
நடப்பு காலத்தில் கனிமவளக் கொள்ளை:
கனிமவளக் கொள்ளைகள் அம்பலமாகி நாறிப் போய் உள்ள இன்றைய நிலையில், தமிழகம் முழுக்கவும் நடைபெற்றுள்ள கனிமவளக் கொள்ளையை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் அவர்களை சிறப்பு அதிகாரியாக நியமித்து,. "தமிழகம் முழுவதும் உள்ள கனிமவள முறைகேடுகளை சகாயம் அவர்கள் ஆய்வு செய்து 2 மாதத்தில் நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என செப்டம்பர் 11, 2014 அன்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற மேலும், சகாயம் அவர்களை உடனடியாக பணிமாற்றம் எதுவும் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். கே. கௌல் மற்றும் நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு.
சகாயம் தலைமையிலான ஆய்வுக் குழு கனிம முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரியானதல்ல எனக் கூறி, அதற்கு தடை கோரி டெல்லி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது தமிழக அரசு. டெல்லி உச்சநீதிமன்றம் "சென்னை உயர்நீதிமன்றம் கனிமவள முறைகேடு குறித்து சகாயம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது சரியானது, இதற்கு தடைவிதிக்கவோ மாற்றவோ முடியாது" என செப்டம்பர் 18, 2014 அன்று தீர்ப்பளித்தது.
செப்டம்பர் 11, 2014 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின் உ. சகாயம் அவர்கள், அவருக்கு வந்த நீதிமன்ற உத்தரவுப்படி, கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்ய தனக்குத் தேவையான நிதி மற்றும் பல்வேறு தேவைகள் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசு இதற்கு எவ்விதமான பதிலையும் தரவில்லை. இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட 48 நாட்களுக்குப் பின் அக்டோபர் 28, 2014 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மீண்டும் தமிழக அரசு "சகாயம் ஆய்வுக் குழு தேவையில்லை. அரசு ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு குறித்து மிகச் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. நீதிமன்றத்தில் கிரானைட் உரிமையாளர்கள் பல வழக்குகள் தொடர்ந்து இருப்பதால்தான் தமிழக அரசால் முழுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது. சகாயம் மீண்டும் இதை ஆய்வு செய்யச் சென்றால் அரசின் நடவடிக்கையை தாமதப்படுத்தும்" என தமிழக அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து தமிழக அரசுக்கு ரூ. 10, 000 அபராதம் விதித்தது.
தமிழக அரசு, தமிழகம் முழுக்க தாதுமணல், கிரானைட், ஆற்றுமணல் உட்பட சுமார் 30 லட்சம் கோடிக்கு பல்வேறு கனிம முறைகேடுகள் நடந்திருக்க மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகளின் மீது மட்டும் எடுக்கப்பட்ட சில நடவடிக்கையை மட்டும் காட்டி சகாயம் ஆய்வுக்குழுவின் செயல்பாடு தேவையில்லை என்பது எதற்காக. தமிழக அரசு கனிம கொள்ளையர்களை பாதுகாக்க மிகுந்த அக்கறையுடன் இருப்பது, அதன் நீதிமன்ற நடவடிக்கை மூலமும் உ. சகாயம் இ. ஆ. ப அவர்கள் அரசிடம் கேட்டு உள்ள உதவிகளை அரசு செய்து கொடுக்காதன் மூலமும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. கனிமவளக் கொள்ளையர்களின் ஏஜண்டாகவே தமிழக அரசு செயல்படுவது உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி போல அப்பட்டமாகத் தெரிந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் “சகாயம் அவர்களுக்கு அவர் கேட்டுள்ள உதவிகளை நான்கு நாட்களுக்குள் செய்து தர வேண்டும். உ. சகாயம் அவர்கள் தமிழக அரசின் தலைமை செயலருக்கு தனக்கு பாதுகாப்பு கோரி 3 ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் எழுதி இருந்தும் அரசு இதுவரை வழங்காததை சுட்டிக் காட்டியவுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பை உ. சகாயம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் வழங்க வேண்டும்” என அக்டோபர் 28, 2014 அன்று உத்திரவிட்டது.
ஆற்றுமணல் தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை அரசு நடைமுறைப்படுத்த தவறினாலும் தீர்ப்பை சுட்டிகாட்டி அரசியல் இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் அழுத்தம் கொடுத்து கடந்த காலத்தில் ஆற்றுமணல் தொடர்பான உத்தரவை அரசு நடைமுறைப்படுத்த வைக்க தவறின. அது போன்ற நிலைமை சகாயம் ஆய்வுக் குழுவிற்கும் ஏற்பட்டு விடக் கூடாதென முடிவு செய்து தமிழகம் முழுக்க நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகளைப் பற்றி ஆய்வு செய்யும் உ. சகாயம் அவர்களுக்குத் தேவையான விவரங்கள் கிடைக்க உதவ வேண்டியது, சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை என்ற அடிப்படையில் செயல்படுவது என முடிவு செய்தோம்.
31. 10. 2014 அன்று உ. சகாயம் ஆய்வுக்குழுவுக்குத் தேவையான விவரங்கள் மக்களை தர வைப்பதற்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் ஒவ்வொரு தனிநபர்களும் எவ்வாறெல்லாம் உதவலாம் என்பதையும், ஆய்வுக் குழுவிற்கு உதவுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதற்கான வகையில் தீர்மானிப்பதற்காகவும் தமிழகம் தழுவிய அளவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடினோம். இதில் ”கனிமவள முறைகேடு-சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்” என்ற பெயரில் செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டது..
இதன் சார்பில் சகாயம் ஆய்வுக் குழுவினர் ”கனிமவள முறைகேடுகளால் ஏற்பட்ட இழப்பீடுகள் பற்றி மதிப்பீடு செய்வதுடன் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், உயிரிய பன்மயச்சூழல் பாதிப்புகள், மேய்சல் நிலம் அழிப்பு, மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் (health impact study), குடிநீர் ஆதாரங்கள் அழிந்ததால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், தொல்லியல் சின்னங்கள் பாதிப்பு, பொதுவழித்தடம் அழிப்பு, தடுப்பு, கண்மாய், குளம், நீர்வழி பாதை அழிப்பால் ஏற்பட்ட இழப்புகள், பஞ்சமி நிலம் அழிப்பு, உயிரிழப்புகள், ஊர் அழிப்பு, ஊரை விட்டு மக்களை விரட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, மீன்வளம் குறைந்ததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகள், இயற்கைக்கு (lose of echo system service) ஏற்பட்ட பாதிப்புகள், மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள், ஒவ்வொரு கிராமத்திலும் கனிமவளக் கொள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகப் பாதிப்புகள் (social impact study) பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என்பதை முன்வைத்தும் இது பற்றி மக்கள் சகாயம் ஆய்வுக் குழுவினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என பரப்புரை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதன் பின்பும் தமிழகஅரசு சகாயம் ஆய்வுக் குழு, சென்னை உயர்நீதிமன்றம் 11. 09. 2014, 28. 10. 2014 அன்றும் உத்தரவிட்டுள்ளபடி, தமிழகம் முழுவதும் 32 மாவட்டத்தில் உள்ள கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அனுமதி அளிக்காமல் அக்டோபர் 31, 2014 அன்று மதுரை பகுதியை மட்டும் ஆய்வு செய்ய அனுமதி அளித்தது.
நடப்பு காலத்தில் சகாயம் ஆய்வுக் குழு எவ்வளவு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். நீதிமன்ற தீர்ப்பு நிலை இதுதான்.
அரசின் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தாத இப்படிப்பட்ட நிலையில், சீமைக் கருவேல மர ஒழிப்பு இயக்கத்தை இங்கு தொடங்கி உள்ளீர்கள்
தமிழக அரசு என்ன செய்தது :
=================================
தமிழக அரசு கடந்த ஆண்டு அனைத்து ஊராட்சி மன்றங்களின் கிராமசபையிலும் சீமைக் கருவேல மரம் ஒழிக்கப்பட வேண்டும் என ஒரு தீர்மானத்தை தமிழகம் முழுக்க கொண்டு வர வைத்து நிறைவேற்றியது..
அனால் இது நடைமுறையில் ஒரு ஆண்டு காலம் ஆகியும் கூட சீமைக் கருவேல மரம் எங்கும் ஒழிக்கப்படும் வேலை தொடங்கப்படவே இல்லை. விறைவுபடுத்தப்படும் வேலையும் நடக்கவில்லை. ஏற்கனவே பார்த்தீனியம் ஒழிப்பும் இப்படித்தான் குப்பை தொட்டிக்கு சென்றது. இது பற்றி கேள்வி எழுப்பும் நிலையில் எந்த அரசியல் கட்சிகளும் இல்லை.
ராமநாதபுறம் ஆட்சிதலைவர் மட்டும் சில நம்பிக்கையான முன்னெடுப்புகளை சீமைக் கருவேல மரம் ஒழிப்பில் முன் எடுத்து வருகின்றார். பல இடங்களில் சமூக் செயல்பாட்டாளர்களின் முன்முயற்சியில் மட்டுமே இது நடந்து வருகிறது.
நாம் செய்ய வேண்டியது என்ன ?
==============================
கடந்த தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் தற் போது இந்த மரங்கள் வேலிகளைத் தாண்டி வயல்வெளிகளிலும் பரவிவிட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் 10 ஏக்கர் பரப்பு நிலத்தையாவது இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 முதல் 400 பஞ்சாயத்துகள் உள்ளன. எனவே, 
1. சீமைக் கருவேல மரம் ஒழிக்கப் பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு நடைமுறைபடுத்த தமிழக அரசுக்கு எல்லா வகையிலும் நிர்பந்தம் கொடுக்க வேண்டும்
2. ஊராட்சி மன்றங்களின் கிராமசபையிலும் சீமைக் கருவேலமரம் ஒழிக்கப்பட வேண்டும் என நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். இது பற்றி தொடர்ந்து அரசு அதிகாரிகளின் கவனத்திறக்கு எடுத்துச் சென்று நடைமுறைப்படுத்த வேண்டும்
3. வாய்ப்புள்ள தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகள், தங்கள் அமைப்பு மூலம் இதை செய்யலாம். ஜே சி பி, பொக்லைன், இட்டாட்சி போன்ற இயந்திரங்கள் மூலம் இந்த மரங்களின் பக்கவாட்டு வேர், தூர் வேர்களை பறித்து எறிய வேண்டும். வேரின் தூரில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட வேண்டும். மற்ற மரங்களில் தீவைத்து எரித்தால் வளராது. இந்த மரங்களை அதிக கவனத்துடன் அழிக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும் சிறிதளவு மழை பெய்தாலும் இந்த மரங்களின் வேர் துளிர்த்து வந்துவிடும்.
4. செப்டம்பர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் இந்த கருவேல மரங்கள் அழிப்பு தொடர்பான இயக்கம் வீறுகொண்டு எழுந்தால் மட்டுமே குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான இந்த மரங்களை எடுக்க முடியும். அரசு இங்கு புதிய மரங்களை நடாவிட்டாலும் பரவாயில்லை, கருவேல மர ஒழிப்பை போர்கால அடிப்படையில் நடத்த வேண்டும்.
5. நாட்டு மக்களிடம் மக்களுக்கு விரோதமான மதுவிலக்கு பற்றி பேசுவது போல, அரசியல்வாதிகள், அரசியல்கட்சிகள், சமூக அமைப்புகளை, இதுபோன்ற விவசாயத்துக்கு, இயற்கைக்கு தீமை செய்யும் சீமைக் கருவேல மர ஒழிப்பு பற்றி பேச, வேலிகாத்தான் மரங்களை முற்றிலுமாக அகற்ற செய்ய பேச வைக்க வேண்டும்.
6. கேரளா போல பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடேயும் சீமைக் கருவேல மர ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
6. a). நமது மண்ணின் மரமான கருவேல மரம்- அந்நிய மரமான சீமைக் கருவேல மரம் இவை பற்றிய வேறுபாட்டை அனைத்து மக்களும் உணர வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்
7. ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள் சீமைக் கருவேல மர ஒழிப்பை பற்றி மதுவின் பாதிப்பு போல் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
8. மக்களிடையே சீமைக் கருவேல மர ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சுவரெழுத்து, துண்டறிக்கை, சுவரொட்டி, திரையரங்க விளம்பரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், காட்சி ஊடக விளம்பரங்களை அரசு விரைந்து விரிவாக செய்ய வேண்டும்.
9. சீமைக் கருவேல மரத்தை பார்த்தாலே
-நமது மிகப் பெரிய எதிரியை பார்ப்பது போல்
- கதைகளில் வரும் ராட்சசனை பார்ப்பது போல்
- தண்ணீரை உறிஞ்சும் ராட்சச ஆழ்குழாய் கிணறு போல
- இயற்க்கை, விவசாயம், நீர்நிலை, மண், காற்றை, உயிரினத்தை வேரடி மண்ணாக அழிக்கும் எமனாக பார்க்கும் வகையில்
-அனைத்து வளங்களையும் அழிப்பதாக பார்க்கும் வகையில் மன நிலையை சமூகத்தில் உருவாக வேண்டும்
10. நூறு நாள் வேலை திட்டத்தை கொண்டு சீமைக் கருவேல மரங்களை அழிக்க கிராமத்து அதிகாரிகள், ஊராட்சிகள் முன் வரவேண்டும். அழிக்கும் போது அந்த மரங்களை வேரோடு பிடுங்கி விடவேண்டும்.
11. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதை விட "ஒவ்வொருவரும் ஒரு சீமைக் கருவேலம் மரம் அழிப்போம்" என்ற முழக்கத்தை முன் எடுக்க வேண்டும்.
12. காலிமனை, விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களை பொதுமக்களே பறித்தெறிய வேண்டும். மக்களிடையே சீமைக் கருவேல மர ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
13. "சீமைக் கருவேல மரம் இல்லாத வீடு,
சீமைக் கருவேல மரம் இல்லாத காடு,
சீமைக் கருவேல மரம் இல்லாத தெரு,
சீமைக் கருவேல மரம் இல்லாத ஊர்,
சீமைக் கருவேல மரம் இல்லாத ஊராட்சி,
சீமைக் கருவேல மரம் இல்லாத ஊராட்சி ஒன்றியம்
சீமைக் கருவேல மரம் இல்லாத வட்டம்,
சீமைக் கருவேல மரம் இல்லாத மாவட்டம்,
சீமைக் கருவேல மரம் இல்லாத தமிழகம்"
- அமைக்க அரசும், ஒவ்வொரு தனிநபரும் செயல்பட வேண்டும்.
14. போலியோ ஒழிப்பு என்பதை நாடு முழுக்க நடத்தியது போல், நாடு முழுக்க இயக்கமாக "சீமைக் கருவேல மரம் ஒழிப்பு" நடத்த வேண்டும்
15 நமது மண்ணுக்கு பொருந்தாத சீமைக் கருவேல மரம் அகற்றும் இடங்களில், கட்டாயம் நமது நாட்டின் இயற்கை கொடையாக வளர்ந்து, நமக்கு பல்வேறு வகைகளில் காய்கள், கனிகள் வழங்கி பறவைகளும், பல்வேறு விலங்குகளையும் வாழ வைப்பவைதான் மண்ணின் மரங்கள். பனை, ஆலமரம், அரசு, இலுப்பை, மருதம், கடம்பம், கடுக்காய், எட்டிக்காய், தான்றி, பூவரசு, புங்கன், புன்னை, வேம்பு, வெட்பாலை, அத்தி என நம் நாட்டு மரங்கள் அனைத்தும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அழிந்து வரும் இத்தகைய நம் மண்ணின் மரங்களை மீட்டு வளர்த்து வேர் பிடிக்கச் செய்ய வேண்டும். இல்லையெனில், நிலமும், இடமும் காலியாக் இருந்தால் மீண்டும் அங்கு சீமைக் கருவேல மரம் வளர வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுப்பதாக மாறி விடும்.
நமது மண்ணின் மரங்கள், பல நூறு மடங்கு பயன்களை நமக்கு கொடுக்கும். மழை, நிழல், நல்ல காற்று, கனி, காய், தழை வீட்டு பயன்பாட்டு பொருட்கள் கொடுக்கும்.
காற்றுக்கு ஈரப்பதம், மண்ணுக்கு நிலத்தடி நீர், பறவைக்கு கனி மூலம் விதை பரவல், பறவைகள் கூடு கட்ட இடம் என எண்ணற்ற பயன் கிடைக்கும்.
நம் நிலத்தை அழிக்கும் சீமைக் கருவேல மரத்தினை வேரறுப்போம்... மண்ணை, நீரை, காற்றை, இயற்கையை, பறவை, விலங்கு, மனிதனை பாதுகாப்போம்...
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்த திட்டம் செயல்பட வைக்க, தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியாக இதற்காக இரண்டு அலைபேசி எண்களை அறிமுகப்படுத்தினர். 9597261510, 9597261241.
இந்த எண்களில் தொடர்பு கொண்டால் அந்த பகுதினர் உதவியோடு சீமைக் கருவேல மரத்தை ஒழிக்க அகற்ற ஆய்வுகள் மேற்கொள்ளபடும் என்கின்றனர் தாகம் மாணவர் அமைப்பும், திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கமும்..
எனவே நல்ல முன்முயற்சியை மேற்கொண்டுள்ள திருப்பூர் திருமுருகன் பூண்டி சுழற்சங்கமும், தாகம் மாணவர் அமைப்பும் செயல்பாடுகள் முன்மாதிரியாக அமையட்டும். அவர்களுக்கு எப்போதும் துணை நிற்போம்.

===========================================
(தாகம் மாணவர் அமைப்பு சார்பாகவும், திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கமும், சீமைக் கருவேல மரம் ஒழிப்பு இயக்கம் சார்பாகவும் 19-07-2015 அன்று நடைபெற்ற திருப்பூர் மாவட்டம் முழுவதும் சீமைக் கருவேல மரம் ஒழிப்பு சம்பந்தமான "கருத்தரங்கம்" ஞாயிறு மாலை திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நான் (முகிலன்) பேசிய செய்தி தொகுப்பு இது)
- முகிலன்

கருத்துகள் இல்லை: