வியாழன், 29 நவம்பர், 2012

பக்தி முத்தி கருவறைக்குள் நுழைந்த பெண்ணை போலீசில் ஒப்படைத்த கோவில் காட்டு மிராண்டிகள்

கடலூரில் உள்ள வைணவ திவ்யதேசமான திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி எழுந்தருளியிருக்கிறார். நேற்று பதினெட்டு வயது பெண் ஒருத்தி பக்திப் பரவசத்தில், “கோவிந்தா கோவிந்தா” என்று உரக்க சொல்லியபடி பெருமாளின் சன்னதிக்குள் சட்டென்று நுழைந்து, உத்சவ மூர்த்தியை தொட்டு வழிபாடு செய்த காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயிலின் மூத்த அர்ச்சகர், கோயில் நிர்வாகிகள் அப்பெண்ணை போலீசிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அப்பெண்ணின் செய்கையால், தீட்டு ஏற்பட்டு கோயிலின் பவித்திரத்திற்கு தோஷம் உண்டானதால் கோயிலை உடனடியாக மூடி விட்டதாகவும் தெரிவித்தார்!
கோயிலின் நிர்வாக அதிகாரி, அப்பெண்ணின் மீது திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், புலவனூரில் இருக்கும் கண்ணன் பட்டாச்சாரியர் என்பவரை வரவழைத்து, பவித்திரோத்சவ காரியங்களை மேற்கொண்டதாக அவர் கூறினார் (இவ்விஷயத்தில் கண்ணன் வாத்தியார் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கக்கூடும்!). ஒரு 2 மணி நேர ஜல சம்ரோக்‌ஷண பூஜைக்குப் பின்னர் 4.45 மணி அளவில் கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. சன்னதிக்குள் நுழைந்த பெண்ணுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்ததாகவும், ஒருவித மோன நிலையில் அப்பெண் அப்படி செய்து விட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பதிக்கே லட்டா என்பது போல பெருமாளுக்கே தீட்டா (அவன் அண்டசராசர அதிபதி என்பதால், அந்த 2 மணி நேரம் சகல லோகங்களும் தீட்டு தோஷத்தில் இருந்திருக்க வேண்டும் அல்லவா?) என்பது ஒரு புறமிருக்க, ஒரு சாதாரண விஷயத்தை போலீஸ் வரை எடுத்துச் சென்று ஒரு பெரிய செய்தியாக்க வேண்டுமா என்பதும் தொக்கி நிற்கிறது! ஆண்டாள் என்ற சிறுமி அணிந்த மாலையை (விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) அதை தவறான செயலாக கருதியபோதும்) மனமுவந்து ஏற்றுக் கொண்டவன் அந்த திருவரங்கப் பெருமாள்! வைணவ வாழ்த்தே, “அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ” என்று அடியார்களுக்கு முதல் மரியாதை செய்கிறது!
- எ.அ.பாலா

கருத்துகள் இல்லை: