திங்கள், 26 நவம்பர், 2012

FDI விட்டுக் கொடுக்காத திமுக.. விரக்தியடைந்த குலாம்நபி ஆசாத்

சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் திமுகவை சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. சென்னையில் தம்மை சந்தித்த காங்கிரஸ் தூதர் குலாம்நபி ஆசாத்திடம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியிருக்கின்றன. இந்த விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ விவாதம் மட்டும் நடத்தலாம் என்று கூறி வருகிறது.
இந்நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுகவும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டுவந்தால் திமுகவும் ஆதரித்துவிடும் என்ற நிலை இருக்கிறது.  http://tamil.oneindia.in/

இதனால் அச்சமடைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி தமது பிரதிநிதியாக மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை சென்னைக்கு நேற்று அனுப்பி வைத்தது. சென்னை வந்த குலாம்நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். ஆனால் இச்சந்திப்பில் திமுக விட்டுக்கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல்கட்சிகளின் கூட்டத்தை கூட்ட கருணாநிதி, ஆசாத்திடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
மேலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற்றால் தமது நிலை என்ன என்பதையும் தெரிவிக்க இயலாது என்றும் ஆசாத்திடம் கருணாநிதி கூறியிருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சி குழப்பம் அடைந்திருக்கிறது.
கருணாநிதியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதிக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதையும் ஆதரிக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யமாட்டோம். அதைப்போல மாநில அரசுகளை நிர்பந்தம் செய்ய மாட்டோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்டத்தை மீண்டும் கூட்டி ஆலோசனை நடத்துமாறு கருணாநிதி கூறினார். அதனை ஏற்றுக்கொண்டேன். ஓரிரு நாள்களில் அந்தக் கூட்டமும் கூட்டி ஆலோசிக்கப்படும் என்றார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி விவகாரத்தில்தான் திமுக தமது உறுதியான ஒரு நிலைப்பாட்டை தெரிவித்திருப்பதாகவே கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை: