வெள்ளி, 30 நவம்பர், 2012

தமிழக போலீசார் என்கவுண்டரில் இருவரை சுட்டுகொன்றனர்

மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் குத்திக் கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பிரபு, பாரதி ஆகியோர் மதுரை லேக்வியூ கோமதிபுரம் பகுதியில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடியபோது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 27-ந் தேதி மருதுபாண்டியர் குருபூஜையின் போது இரு தரப்பினரிடையே மோதலைத் தடுக்க முயன்ற திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதனை ரவுடிக் கும்பல் ஒன்று கத்தியால் குத்திக் கொன்றது. இதைத் தொடர்ந்து மானாமதுரை சுற்றுவட்டாரத்தில் 4 பேர் வெட்டப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதி கிராமங்களில் கலவரம் வெடித்தது.இதைத் தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி கருணாநிதி மாற்றப்பட்டு 'என்கவுன்ட்டர்' புகழ் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். ஆல்வின்சுதன் கொலையில் உள்ளூர் ரவுடிகளுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. ஆனால் உள்ளூர் ரவுடிகளை உள்ளூர் போலீசார்தான் காப்பாற்றி வருவதால் சில நாட்களுக்கு முன்பு 15க்கும் மேற்பட்ட போலீசாரை மானாமதுரை பகுதியில் இருந்து வெள்ளத்துரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார். http://tamil.oneindia.in/

இந்நிலையில் எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான பிரபு, பாரதி ஆகியோர் இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை இன்று போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது வழியில் லேக்வியூ பகுதியில் இருவரும் தப்பி ஓடியதாக முதலில் போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவித்தன. அவர்களைப் போலீஸார் தேடி வருவதாகவும், அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரையும் போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

கருத்துகள் இல்லை: