புதன், 27 ஏப்ரல், 2011

sai trust மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம்

சத்ய சாயி பாபா

ஆங்கிலப் பத்திரிகைகள் ‘சத்ய சாயி பாபா மறைந்தார்’ என்று எழுத, தமிழ்ப் பத்திரிகைகள், ‘முக்தி அடைந்தார், சித்தி பெற்றார்’ என்றன. ஆந்திர மாநில அமைச்சர்கள் கண்ணில் நீருடன் பேசினர். மன்மோகன் சிங்(கே) நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

40,000 கோடி ரூபாய் என்றும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அவரது அறக்கட்டளையின் சொத்து மதிப்பு பற்றித் தகவல்கள் வெளிவந்துள்ளன. சொத்தைப் பராமரிக்கப்போவது யார் என்ற கேள்வி ஒருபக்கம். ஆனால் அடுத்த ஆன்மிக வாரிசு யார் என்று இதுவரை கேள்விகளும் இல்லை; எனவே பதில்களும் இல்லை. எங்கோ கர்நாடக கிராமத்தில் அடுத்த சாயி பாபா பிறந்து வருவார் என்பதுடன் இப்போதைக்கு முற்றுப்புள்ளி.

அரசியல்வாதிகளுக்கு சத்ய சாயி பாபாவிடம் வேறு பல ஆதாயங்களும் இருந்திருக்கலாம்.
கடந்த பல பத்தாண்டுகளில் இந்து மதப் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் உருவாக்கிய வெகு சிலரில் சத்ய சாயி பாபாவும் ஒருவர். ஹரே கிருஷ்ணா இயக்கத்தை உருவாக்கிய பக்தி வேதாந்த பிரபுபாதா, ‘செக்ஸ் சாமியார்’ என்று எளிதில் புறந்தள்ளிவிட முடியாத ரஜனீஷ், Transcendental Meditation என்பதைப் பிரபலமாக்கிய மகேஷ் யோகி ஆகியோர் வட்டத்தில் வருபவர் சத்ய சாயி பாபா. முதல் மூவர் வேதாந்தம்/கிருஷ்ண பக்தி, தத்துவம்/தாந்திரிகம், வேதம்/தியானம் ஆகியவற்றை முன்வைக்க, சத்ய சாயி பாபா அற்புதங்கள்/கூட்டு வழிபாடு ஆகியவற்றை முன்வைத்தார். இந்த நால்வருமே உருவாக்கிய அகில உலகத் தொண்டர் குழாம் இவர்களது காலத்துக்குப்பின் குலைந்துள்ளது, குலையப்போவது புரிந்துகொள்ளக்கூடியதே. இவர்கள் யாருமே வலுவான அடுத்த நிலைத் தலைவர்களை உருவாக்கவில்லை. சொத்துகளை மட்டும் எக்கச்சக்கமாகச் சேர்த்தார்கள்.

சத்ய சாயி பாபா அறக்கட்டளைமூலம் பல நல்ல காரியங்கள் (கல்வி நிலையங்கள், சென்னைக்குக் குடிநீர், சூப்பர் ஸ்பெசியாலிடி மருத்துவமனையில் நடக்கும் இலவச சிகிச்சைகள்) நிகழ்ந்தேறியுள்ளன என்றாலும் அடிப்படையில் தனியான ‘சாமியார்’ ஒருவர் கோடிக்கணக்கான சொத்துகளைச் சேகரிக்கும் நிலை நாட்டுக்கு நல்லதல்ல, பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல. இந்தியாவில் பொதுவாக சாமியார்கள் புனிதப் பசுக்களாகவே கருதப்படுகிறார்கள். அதிலும் அரசியல் லாகவம் தெரிந்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
இந்த நிலை மாறவேண்டுமானால் ஆன்மிக/மத அறக்கட்டளைகள் அனைத்தும் வலுவான கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்குக்கீழ் கொண்டுவரப்படவேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் பட்டியலிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் வரி வசூலிக்கப்படவேண்டும். கருப்புப் பணம் புரளாமல் இருக்க வகை செய்யப்படவேண்டும்., அந்நிய நாடுகளில் இந்த ஆசாமிகள் சொத்துகளைச் சேர்ப்பது கண்காணிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செய்வது, மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக ஆகாது. பணம் கொட்டும் வழியை ஓர் அரசு கவனமாகக் கண்காணிக்கத் தவறிவிட்டால் அதனால் நாட்டுக்குப் பெரும் கேடுதான் நிகழும்.

உதாரணத்துக்கு, பொதுமக்கள் கொடுத்துள்ள பல கோடி ரூபாய் பணம் இப்போது சத்ய சாயி அறக்கட்டளையை நிர்வகிக்கப்போகும் யாரோ சிலர் கையில். அந்தப் பணம் என்ன ஆகுமோ... மக்களுக்குப் பயன்படப்போகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதற்குமுன்பாவது சத்ய சாயி பாபா என்ற மனிதரால் தமக்கு ஏதோவிதத்தில் நிம்மதி என்று எண்ணிக்கொண்டு மக்கள் இந்தப் பணத்தை இந்த அறக்கட்டளைக்கு வழங்கினர். இப்போது அதுவும் கிடையாது.

எவ்வளவு விரைவில் இதுபோன்ற மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் இதனைக் கொண்டுவரக்கூடிய மனவலு இந்திய அரசியல்வாதிகளிடம் இப்போதைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளிலாவது இது உறுதியாக ஏற்பட்டால் நல்லது.

கருத்துகள் இல்லை: