ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

The Hindu ஹிந்து குடும்பச் சண்டை

நான் ஆங்கிலம் கற்றுக்கொண்ட நாளிலிருந்து ஹிந்து செய்தித்தாள் படிக்கிறேன். இன்றும் அந்தச் செய்தித்தாளைத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். இடையில் வெளிநாடு ஒன்றில் சில ஆண்டுகள் வசித்தபோதும் பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு வாரம் கழித்துக் கிடைக்கும் இந்தப் பத்திரிகையை விடாமல் வாசித்துவந்திருக்கிறேன்.

இந்தப் பத்திரிகைமீது குறைகள் இல்லாமல் இல்லை. எதோ ஒரு மாதிரியான ஆங்கிலத்தில் எழுதுவது இவர்கள் வழக்கம். ஆனால் அதன்மூலம்தான் நான் பல adjective-களைக் கற்றுக்கொண்டேன். சமீப காலங்களில் மொழியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்.ராம் எடிட்டர்-இன்-சீஃப் ஆவதற்குமுன் பெரும்பாலும் எஸ்டாபிளிஷ்மெண்ட் வழியைப் பின்பற்றும் கன்சர்வேடிவ் பத்திரிகை என்றே பெயர்பெற்றிருந்தது. ஆனால் என்.ராம் palace coup மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதும் எடிட்டோரியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கைப் பிரச்னையில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக, முதலில் சந்திரிகா குமரதுங்கவுக்கும் பின்னர் மகிந்த ராஜபக்‌ஷேவுக்கும் குரலாகவும், விடுதலைப் புலிகள் தரப்புக்கு முற்றிலும் எதிராக, பொய்க் கதைகளைப் பரப்பும் அளவுக்குச் சென்றது, முற்றிலும் சீன ஆதரவு நிலைப்பாடு, பொதுவான கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடு என்று தொடங்கி மேலும் பலவற்றைச் சொல்லலாம்.

அதனால் என்ன? பத்திரிகைகள் பக்கச் சார்புநிலை எடுப்பதில் என்ன தவறு என்று பலரும் கேட்கலாம். ஒன்றுமில்லை. என் பத்திரிகை எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்பது ஒரு பக்கம். சார்புநிலை தாண்டி பத்திரிகா தர்மம் என்பதிலிருந்து வழுவும் அளவுக்கு ஒரு செய்தித்தாள் போனால் அதைக் கண்டிக்கவேண்டிய தார்மிக நியாயம் ஒன்று மறுபக்கம்.

உதாரணமாக சமீபமாக நடக்கும் விக்கிலீக்ஸ் இந்தியா செய்திகளை எடுத்துக்கொள்வோம். ஏதோ, உலகையே உலுக்கும் செய்திகள் என்பதாக ஹிந்து வெளியிடும் இவற்றை இந்தியாவில் யாருமே கண்டுகொள்வதில்லை. ஆனால் அதில் எந்த அளவுக்கு உள்நோக்கத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்பது ஆத்திரத்தை வரவழைக்கிறது.

மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதையே அமெரிக்கா விரும்புகிறது என்று விக்கிலீக்ஸ் ஆவணங்களைக் காட்டி தி ஹிந்து செய்தி வெளியிடுகிறது. அமெரிக்க என்ன வேண்டுமானாலும் விரும்பிக்கொள்ளட்டும். ஆனால் மமதாவும் அமெரிக்காவும் உள்கை; மமதா அமெரிக்காவிடமிருந்து பணத்தை பெட்டி பெட்டியாகப் பெற்றார் என்று ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்றால் அப்படி ஏதும் இல்லை. இன்று ஹிந்துவில் வந்திருக்கும் கார்ட்டூனில் திரிணாமுலின் மூன்று இலைகள்மீது அமெரிக்கா ஸ்டார்ஸும் ஸ்டிரைப்ஸுமாக நீர் ஊற்றுவதுபோல உள்ளது. இதன் மறைபொருள் என்ன? திரிணாமுல் வளர அமெரிக்கா நீர் ஊற்றுகிறது என்கிறது தி ஹிந்து. இது அபாண்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. சரியாக இரண்டு பக்கங்கள் தள்ளி பிரகாஷ் காரத் குய்யோ முறையோ என்று குதிக்கிறார். ‘அய்யாமாருங்களே, அம்மாமாருங்களே, பார்த்தீங்களா, மமதாதான் ஜெயிக்கணும்னு இந்த அமெரிக்கா அசிங்கப்பய சொல்லுறான்’ என்று புலம்புகிறார். இப்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கிறது. இதைவிட அசிங்கமாக ஒரு பத்திரிகை நடந்துகொள்ளமுடியாது.

இது ஓர் உதாரணம் மட்டுமே. இன்றும் நேற்றும் நடந்ததால் இதனைப் பற்றி எழுதுகிறேன். ஈழப் பிரச்னையில் எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். ராஜபக்‌ஷே கூட அப்படி தன்னை டிஃபெண்ட் செய்திருக்க மாட்டார். என். ராம் தானே முன்னின்று பேட்டி எடுத்து அவரைக் காப்பாற்றுகிறாராம்!

***

இது இப்படி இருக்க, திடீரென என். ராம் கனவில் கார்ல் மார்க்ஸ் வந்து குடும்பத்தையும் பிசினஸையும் கலக்காதே என்று வழிகாட்டினாராம்! உடனே அவர் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வேலையிலிருந்து விலகி, professional எடிட்டர்களைக் கொண்டு பிசினஸை நடத்தவேண்டும் என்று போர்ட் மீட்டிங்கில் சாதித்துவிட்டார். விஷயம் வேறு என்று புலம்புகிறார் என். ராமின் சகோதரர் என். ரவி. அவர்கள் பிரச்னை எப்படி வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் ரவி, தன் கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் ராஜா விஷயம் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதையே சற்றே நீட்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி விவகாரத்தில் எந்த அளவுக்கு தன் செய்தித்தாளைத் தவறாகப் பயன்படுத்துகிறார் ராம் என்ற கேள்வியையும் நாம் கேட்கவேண்டும்.

***

நான் தொடர்ந்து ஹிந்து வாங்கப்போகிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால் ஹிந்துவை தொடர்ந்து 132 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; இந்தியாவின் தேசியச் சொத்து என்று ராம் குறிப்பிடுவதுபோல நாமும் தொடர்ந்து குறிப்பிடவேண்டுமா என்பதுதான் கேள்வி.

கருத்துகள் இல்லை: