Ovia Rajamoni : நேற்று முன்தினம் தோழர் யமுனா இராஜேந்திரன் பதிவை நான் கண்ணுற்ற வேளை,
அதன் கூறுகளை நான் ஏற்கனவே உணர்ந்திருந்ததால் அதனைப் பகிர விரும்பினேன்.
அந்த பதிவு தோழர் மருதையன் பெயரைக் குறிப்பிட்டு பதிவாகியிருந்தது.
நான் அவர் உரை எதையும் கேட்காததால் நான் அவர் கருத்தை அறியவில்லை என்பதையும் சேர்த்தே பதிவிட்டிருந்தேன்.
பெரும்பாலும் எதிர்கருத்துக்களே பின்னூட்டங்களாக வந்திருந்தன.
இன்றைய தமிழ் சமுதாயத்தை தமிழின உணர்வுக்கு எதிராகப் பண்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருவதை நான் அறிந்திருந்ததால் எனக்கு அது பெரிய அதிர்ச்சியாக இல்லை.
மேலும் மருதையன் உரையை நான் கேட்காமல் பதிவிடக் கூடாது என்று வேறு அறிவுறுத்தல்கள் தரப்பட்டிருந்தன.
சரி. அது நியாயம்தானே என்று அரண்செய் ப்ளஸ் சேனலுக்கு தோழர் மருதையன் தந்திருந்த பேட்டியை முழுமையாகப் பார்த்தேன்.
தொடர்ந்து எழுது முன் படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இதே பிரச்சினை தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு முகப்புத்தகத்தில் என் பதிவைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அடிப்படையில் நான் தமிழின உணர்வை ஏற்றவள்.
புலிகள் ஆதரவாளராக நான் என்றும் இருந்ததில்லை.
நான் பழகிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணித் தோழர்களிடமும் எனக்குக் கருத்து மாறுபாடுகள் நிறைய உண்டு.
ஆனால் நான் தமிழர்களுக்கு இன உணர்வும் அந்த அடிப்படையிலான அரசியலும் தேவை என்பதை பெரியார் , மணியம்மையார், பேரரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், #ஆசிரியர் வீரமணி வழியில் புரிந்து ஏற்றுக் கொண்டவள்.
இனி தோழர் மருதையன் பேட்டியில் என் ஏற்பும், மறுப்பும் கீழே……
1. அந்த பேட்டி சீமான் தனது கட்சியைக் கட்டுவதற்காக மக்கள் முன்வைத்த தகவல்கள் அதாவது தமிழீழப் போராட்டத்தில் புலிகள் இயக்கத்தலைவருடன் அவருக்கான நெருக்கம் குறித்து பரப்பிய பல்வேறு செய்திகள் அனைத்தும் பொய் என நிருபிக்கப் பட்டு வருவதிலிருந்து தொடங்குகிறது.
‘சீமானை’ மய்யப் புள்ளியாகக் கொண்டு நெறியாளர் பேட்டியைத் தொடங்க அந்த மய்யப் புள்ளியிலிருந்து விவாதத்தை வேறு இடத்துக்கு நகர்த்துகிறார் தோழர் மருதையன்.
அந்த இடத்தில் கொளத்துர் மணி அண்ணன், இராமகிருட்டிணன் அண்ணன் ஆகியோர் உள்ளிட்ட தமிழீழ விடுதலையை ஆதரித்த அல்லது குறிப்பாக புலிகள் அமைப்பை ஆதரித்த பெரியாரியலாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
அதாவது பதில் சொல்ல வேண்டியவர்களாக. அதாவது விவாத மய்யம் சீமானிடமிருந்து ஒட்டுமொத்த பெரியாரியலாளர்களை நோக்கி திருப்பப் படுகிறது.
சரி. அதெல்லாமிருக்கட்டும் கேட்ட கேள்வி சரியா தப்பா என்று பார்க்கலாம்.
2. சீமான் போன்ற ஒரு தவறான நபரை பெரியாரியலாளர்கள் ஏன் வளர்த்து விட்டார்கள்
சீமான் நாம் தமிழர் கட்சி தொடங்கிய போது மேலும் மேலும் சீமான் பொய் சொல்லிய போது இதனையெல்லாம் நீங்கள் ஏன் சொல்லவில்லை.
இவைதான் அடிப்படையான கேள்விகள்.
இதில் முதல் கேள்வி ‘சீமான்’ போன்ற நபரை ஏன் வளர்த்து விட்டீர்கள் என்பது என்னைப் போன்றோரும் அடிக்கடி இதைச் சொல்லி புலம்பியது உண்மைதான் என்ற போதிலும்,
துடிப்பான இளைஞர் நல்ல பேச்சாற்றலுடன் வரும்போது அவரை வளர்த்து விட நினைப்பது எந்தக் கட்சித் தலைவருக்கும் உள்ள ஒரு இயல்பான நடவடிக்கைதான்.
மேடைப் பேச்ச சுவைக்கு ஆட்படாமல் கட்சிக் கட்டமைப்பைக் காப்பாற்றிக் கொள்ளும் தலைவர்கள் மிகமிகக் குறைவு.
இதனை ஒரு குறையாகச் சொல்லலாமென்றாலும் அதற்கொரு அளவிருக்கிறது.
(சீமானின் தனிமனித ஒழுக்கமின்மையுடன் சமரசம் செய்து பெரியாரியக்க தலைவர்கள் அவரைப் பேணி வளர்த்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டை மருதையன் வைக்கிறார்.)
3. சீமான் ஒரு ஆர் எஸ் எஸ் காராகவே மாறப் போகிறார் என்று அன்றே உங்களுக்கு தெரியாதா என்கின்ற அளவுக்கு அந்தக் கேள்வியை வளர்த்துச் செல்வது கொஞ்சம் அதிகம்.
இரண்டாவது கேள்வி இந்த உண்மைகளை(ஈழம் சார்ந்த உண்மைகளை) ஏன் சொல்லவில்லை என்பது. பொதுவான மக்களுக்கு இது மாபெரும் குற்றமாகத் தெரியும்.
ஆனால் சிக்கல் எங்கிருக்கிறதென்றால் இவை அனைத்தும் ஒரு இரகசிய இயக்கம் சார்ந்தவை.
இரகசிய இயக்கங்கள் பற்றி என்னை விட தோழர் மருதையன் அதிகம் தெரிந்தவர்.
இவையெல்லாம் ஏன் இப்படி நடந்தது என்பதற்கு அவருக்கே பதில் தெரியும்.
எனவே நிகழ்ச்சி வாரியாக மறுப்பதில் அனைவருக்கும் தயக்கமிருந்திருக்கலாம்.
ஆனால் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து மணி அண்ணன் உட்பட பெரியாரியலாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தே வந்திருக்கிறோம்.
மிகத் தொடக்க காலத்திலேயே நான் எழுதி கருஞ்சட்டை இதழில் வெளிவந்த, ‘வரலாறு மன்னிக்காது, தமிழகம் ஏற்காது’ என்கின்ற கட்டுரை இந்த வரிசையில் அநேகமாக முதலில் வந்த கட்டுரையாக இருக்கும்.
எனவே தோழர் மருதையன் விமர்சனத் தளத்தை சீமானிடமிருந்து நகர்த்தி பெரியாரியலாளர்கள் மீது வைப்பதில் தர்க்கமிருக்கிற அளவுக்கு எதார்த்த நியாயம் இருப்பதாக எனக்குப் படவில்லை.
அவரது உரை மிகப் பெரிய அளவில் எடுபட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
ஆனால் சீமான் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பை ஒரு பகுதியாவது பெரியாரியக்கத்தவர் மீது மடைமாற்ற வேண்டும் என்பது அவர் நோக்கமாக இல்லாமல் கூட இருக்கலாம்.
ஆனால் விளைவது அதுதான்.
4. இந்த பேட்டியில் நாம் ஏற்கத் தக்க அம்சம் வலுவாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு விசயம் இப்படிப்பட்ட ஒரு போலி பிம்பமானது திமுக வை வீழ்த்தும் அரசியல் ஆயுதமாக மாற்றப் பட்டது என்பதுதான்.
முக்கியமாகக் கலைஞர் வெறுப்பாக இது மாற்றப் பட்டதும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு இவையெல்லாம் வித்திட்டதும் குறித்து மருதையன் பேசியிருக்கும் எடுத்து வைத்திருக்கும் விவாதங்கள் மறுக்க முடியாதவை.
மேலும் அவற்றை கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
புலம் பெயர் தமிழர்கள் சுயநலமாகச் செயற்பட்டார்கள் என்பதுடன் விவேகமாகத் தங்கள் அரசியல் சிக்கலை அணுகவில்லை என்பது உண்மையே.
ஆனால் அந்தத் தவறைப் புலிகள் அமைப்பு தொடக்கத்திலிருந்தே செய்து வந்தது.
தமிழ்நாட்டின் தலைவர்களுடன் உலகின் ஒட்டுமொத்தத் தமிழர்களின் நலனை உள்ளடக்கிய ஒரு நேர்மறையான செயற்திட்டம் பற்றி சிந்தித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழகத்திலிருந்தோ ஈழத்திலிருந்தோ அத்தகைய பங்களிப்புகள் வரவில்லை.
இத்தகைய ஆய்வை ஒட்டுமொத்தமாக ஈழம் மற்றும் மலையக மக்களின் வரலாற்றடிப்படையில் ஆய்ந்திட வேண்டும்.
அதனை ஒரு கட்டுரையிலோ அல்லது ஒரு பேட்டியிலோ நாம் முழுமையாகத் தந்து விட இயலாது.
ஆனால் முதற்புள்ளி எங்கு தொடங்குகிறது என்றால், “நானே அடிமையாக இருக்கிறேன், உங்களுக்கு நான் எப்படி உதவ முடியும்? எனவே எங்களை நம்பி நீங்கள் எதுவும் செய்யாதீர்கள்” என்று பெரியாரால் மட்டும்தான் சொல்ல முடிந்தது.
அதே அறிவுரையை மீறி நாம் ஏதாவது செய்து விட முடியும் என்று தமிழ்நாட்டுத் தலைவர்கள் கொடுத்த நம்பிக்கைதான் மிகப் பெரிய இழப்புக்கு இட்டுச் சென்று விட்டது.
5. புலிகளின் சொத்து பற்றி வைக்கப்படும் எண்ணங்கள் சரியானவை
ஆனால் அவற்றின் உண்மைத் தன்மை பற்றி நமக்கு எதுவும் தெரியாத காரணத்தினால் அவற்றைப் பற்றி நாம் எதுவும் பேச இயலாது.
ஆனால் இங்கு மருதையன் அவர்களின் இலக்கு சீமானிடமிருந்து விலகி முழுமையாக புலிகள் இயக்கம் அதனை ஆதரித்த பெரியாரிய இயக்கங்கள் பெரியாரியக்கத்தவரின் அரசியல் புரிதலின்மை என்பதைப் பற்றி விளக்கும் பேட்டியாகவே இது முழுமையாக மாறி நிற்கிறது.
6. இன்னும் சொல்லப் போனால் புலிகள் ஆதரவு என்கின்ற ஒற்றை இயக்க விமர்சனத்தை வைத்து அதே நேரத்தில் அந்த போராட்டத்துக்கான வரலாற்று மற்றும் அரசியல் தேவைகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடாத போது ஈழப் போராட்டம் பற்றிய ஒட்டு மொத்தப் பார்வையுமே இதுதானா என்கின்ற கேள்வி வருகிறது. அதற்கான பதில் அந்த பேட்டியில் அடுத்து வருகிறது.
7. இந்த பேட்டியில் நாம் ஏற்கக் கூடிய ஒரு பகுதியை நான் சுட்டிக் காட்டி விட்டேன்.
ஆனால் ஏற்கவே முடியாத பகுதியைப் பற்றி இப்போது பார்ப்போம்.
தோழர் மருதையின் பார்வை இது.
பெரியார் தமிழ் தேசம் கேட்டது, மொழி அடிப்படையிலோ இன அடிப்படையிலோ அல்ல மாறாக சாதி ஒழிய இந்திய அரசமைப்பு தடையாக இருந்தது என்பதற்காகதான்.
எனவே சிங்கள இன ஒடுக்குமுறையை எதிர்த்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பெரியாரியலாளர்கள் ஆதரித்தது பெரியார் கொள்கைப்படியே தவறு.
இங்குதான் நான் அடிப்படையிலேயே மருதையனுடன் முரண்படுகிறேன். நிறைய விளக்கலாம். இருந்தாலும் சுருக்கமாக சொல்கிறேன்.
பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை உயிர் நாடிதான்.
ஆனால் அதற்காக பெரியார் ஏன் சாமி இல்லை என்று சொன்னார் என்றால் சாதி ஒழிவதற்காக சாமி இல்லை என்று சொன்னார் என்று தொடங்கிய போதே தவறு ஆரம்பமாகிறது.
பெரியார் ஏன் சாமி இல்லை என்று சொன்னார் என்கின்ற கேள்விக்கு ஒரே ஒரு பதில்தான் . சாமி இல்லை என்பதால் அவர் சாமி இல்லை என்று சொன்னார்.
அதே போல்தான் பெரியார் ஏன் தனித்தமிழ்நாடு கேட்டார் என்றால் அது ஏற்கனவே ஒரு நாடுதான் என்பதால் கேட்டார்.
அந்த கோரிக்கை பிறந்ததே மொழிப் போராட்டத்தில்தான். திராவிட இயக்கத்தின் ஆணிவேர் இன உணர்வு.
அவர் தேசாபிமானம் பாஷாபிமானம் இல்லையென்று சொன்னது திருமணம் கிரிமினல் குற்றமாக்கப் பட வேண்டும்,
பெண்கள் தங்கள் விடுதலைக்குத் தடையானால் கர்ப்பப் பையை அறுத்தெறிய வேண்டும் என்று சொன்னவற்றிற்கு சமமானது.
அவை ஒட்டுமொத்த மனித இனத்தின் கோரிக்கைகள்.
ஒன்றுபட்ட மனித இனத்துக்கு பொருந்தக் கூடியவை.
அவற்றைத் தூக்கிக் கொண்டு இங்கு வந்து சொருகக் கூடாது.
இன்னும் விரித்து எழுத வேண்டும்.
ஆனால் இப்போதைக்கு நான் முடித்துதானே ஆக வேண்டும். எனவே விடுகிறேன்.
8, அடுத்து மருதையன் கூறுகிறார், “ஈழத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு பாடுபட்டது சிங்கள இடதுசாரி இயக்கம்தான்.”
தங்களை திராவிட இயக்கத்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் வழி வந்தவர்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்…?
கீழ் வெண்மணியில் நம் மீது வைக்கப் படும் குற்றச் சாட்டிற்கும் இவற்றுக்கும் கருத்தியல் ஓர்மை இல்லையா……?
9, தோழர் மருதையன் இந்த பேட்டியை மகஇக எங்கள் அமைப்பு என்கின்ற தொனியில்தான் கொடுக்கிறார். இன்று பெரியாரியக்கத்தின் மீது அவர் தொடுக்கின்ற கேள்விக் கனைகளை ஒத்த விமர்சனக் கனைகளை அந்த இயக்கத்தின் மீது தொடுக்க இயலாதா…. இந்த பேட்டி என்னைப் பொறுத்தவரையில் இரண்டு இலக்குகளைக் கொண்டதாக இருக்கிறது
ஒன்று பெரியாரியக்கம் இன உணர்வு அரசியல் வரலாறு உடையது என்கின்ற உண்மையை மறைப்பது அல்லது மாற்றுவது.
இரண்டாவது திராவிட முன்னேற்றக் கழகத்தை பெரியாரியக்கத்தவரிடமிருந்து பிரிப்பது.
ஆனால் இந்த இரண்டையும் யார் கவனிக்கிறார்களோ இல்லையோ திராவிட முன்னேற்றக் கழகத்தவர் கவனித்துத் தங்கள் தலைவர்களின் வழித்தடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக