tamil.oneindia.com - Halley Karthik : சண்டிகர்: 104 பேர் நேற்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
அமெரிக்க வாழ்க்கையை எதிர் பார்த்து கிளம்பிய இவர்கள், முகவர்களால் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்? என்கிற துயரத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் அமெரிக்காவுக்கு அதிகம் குடிபெயர்பவர்களில் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர்.
சில லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் உங்களை அமெரிக்காவுக்குள் கொண்டு சேர்த்து விடுவதாக வாக்குறுதியளிக்கும் முகவர்களால் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
நேற்று இந்தியா வந்து சேர்ந்த 104 பேரில் ஹர்விந்தர் சிங்கும் ஒருவர். பஞ்சாப் மாநிலத்தின் தாளி எனும் கிராமத்தை சேர்ந்த இவர், அமெரிக்கா செல்வதற்காக ரூ.42 லட்சம் பணத்தை கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் உங்களுக்கு வேலை விசா (work visa) கிடைக்கும் என்று முகவர்களால் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் விசா கிடைக்கவில்லை. முதல்கட்டமாக இவர் டெல்லியலிருந்து கத்தாருக்கு அனுப்பி வைக்கப்படார். அங்கிருந்து பிரேசிலுக்கு பயணப்பட்டார்.
பிரேசிலிருந்து பெருவுக்கு (Peru) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவேன் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அவருக்கு அப்படி எந்த சேவையும் வழங்கப்படவில்லை. மாறாக டாக்ஸி மூலம் கொலம்பியாவுக்கும், அங்கிருந்து பனாமா வரை அனுப்பி வைக்கப்பட்டார். பனாமா வந்துவிட்டால் அங்கிருந்து அடுத்து மெக்சிகோ. மெக்சிகோவை தாண்டினால் அமெரிக்கா.
ஆனால் இவர் கதையில் பனாமாவில் கப்பல் ஒன்று இவருக்காக காத்திருக்கும் என்று ஏஜென்ட் சொல்லியிருந்தார். அங்கு அப்படி எந்த கப்பலும் இல்லை. எனவே வெறும் காலில் நடக்க தொடங்கினார். இங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் வழி கழுதை பாதை என்று அழைக்கப்படுகிறது. ஹர்விந்தர் சிங் இங்கிருந்து 2 நாட்கள் நடந்து சென்றார். இந்த பயணத்தின்போது இவருடன் வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் இவர்கள் மெக்சிகோ நோக்கி படகு மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
படகு என்றால், நன்கு தாராளமாக, பல்வேறு வசதிகளுடன் இருக்கும் படகு கிடையாது. மாறாக, உட்காருவதற்கு மட்டுமே இடத்தை கொண்டிருக்கும் சிறிய, போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாத படகு. இந்த படகில் பயணிப்பது எப்போது வேண்டுமானாலும் ஆபத்தாக முடியலாம் என்று ஹர்விந்தர் சிங் அச்சமடைந்திருந்தார். அவர் நினைத்ததை போலவே படகு கவிழ்ந்தது. இதில் மற்றொருவர் உயிரிழந்தார். இப்படியாக இவரது பயணம் முடிவுக்கு வந்தது. இறுதியில் மெக்சிகோவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரை போன்றே சுக்பால் சிங் எனும் மற்றொருவரும் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றிருக்கின்றார். கடல் வழியாக சுமார் 15 மணி நேரம் பயணம் செய்து, மலை பாதையில் 45 மணி நேரம் நடந்து மெக்சிகோவுக்கு சேர்ந்திருக்கிறார். இந்த பயணங்களில் யாரேனும் காயமடைந்திருந்தால் அவர்களை அந்த குழு பாதியிலேயே கைவிட்டுவிடும். இப்படி கைவிடப்பட்டு மரணமடைந்தவர்களின் சடலத்தை வழியெங்கும் பார்க்க முடிந்ததாக சுக்பால் சிங் கூறியுள்ளார்.
இவர் அமெரிக்க எல்லையை கடக்க முயன்றபோது, திடீரென மெக்சிகோ காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை போலவே கைது செய்யப்பட்ட பலரும் இருட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நாட்கணக்கில் இவர்கள் சூரியனையே பார்க்காமல் இருந்திருக்கின்றனர். இப்படியான கொடூரம் யாருக்கும் நடக்கக்கூடாது என்றும், தவறான வழியில் அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக