ஞாயிறு, 14 ஜூலை, 2024

டொனால் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு . மயிரிழையில் உயிர் தப்பினார் . துப்பாக்கிதாரி சுட்டு கொலை

 Thesam Jeyabalan  : துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பினார் ட்ரம்! அடுத்த ஜனாதிபதி ட்ரம் உறுதியாகிவிட்டது!
சில நிமிடங்களுக்கு முன் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால் ட்ரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் தலைக்கு வைக்கப்பட்ட வெடி காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே குந்தி இருந்துவிட்டார்.
உடனடியாக ட்ரம்மைச் சுற்றி இருந்த மெய்ப்பாதுகாவலர்கள் அவரைச் சுற்றிவளைத்து அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்கின்ற போது ட்ரம் தன் மணிக்கட்டை மடித்து காற்றில் குற்றி தன்னுடைய தைரியத்தை காட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏறிய பின்னும் ட்ரம் கையை உயர்த்தி தன்னுடைய உறுதியைத் தெரிவித்து இருந்தார்.


ட்ரம் உரையாற்றிய மேட்டைக்கு எதிரே இருந்த கட்டிடத்தின் கூரையில் இருந்தே ரைபிளை வைத்திருந்த ஒருவர் ட்ரம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் செய்தவரை சிலர் ஒரு சில நிமிடங்கள் கண்டுள்ளனர். ஆனாலும் அவர் உடனடியாகக் கையளப்படவில்லை. ஆனால் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர், உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாகவே துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொதுமக்களும்காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அரசியல் படுகொலை, படுகொலை முயற்சிகள் இது முதற்தடவையல்ல. ஆபிரகாம் லிங்கன், ஜெ எப் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். டொனால்ட் ட்ரம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்து வந்தது. அமெரிக்க அரச கட்டமைப்புக்கு புறம்பாக செயற்படுவார் என நம்பபப்பட்ட ட்ரம் நேட்டோவை பலவீனப்படுத்துவார், ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயற்படுவார், உக்ரைன் யுத்தத்தை ரஷ்யாவுக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டுவருவார் போன்ற காரணங்களால் இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சம் இருந்தது. தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே  ஜோபைடனுடன் ஒப்பிடுகையில் முன்னணியில் நிற்கும் டொனால்ட் ட்ரம், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியதன் மூலமும் சம்பவம் நடந்த அடுத்த கணமே உஷாராக எழுந்து மணிக்கட்டை மடித்து கையை உயர்த்தி காற்றில் குத்தி தன்னுடைய தைரியத்தையும் ஆளுமையையும் உடல் ஆளுமையையும் காட்டியுள்ளார். தனது வயதால் உடல் தளர்ந்தும் பேச்சுத் தளர்ந்தும் உள்ள ஜோபைடன் ட்ரம் உடனான பேர்டியில் வெல்வதற்கு இனி வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: