புதன், 17 ஜூலை, 2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை! உறவினர் 4 பேர் கைது

tamil.asianetnews.com  - vinoth kumar :  மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (47). நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளர். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மதுரை பீபீ குளம் வல்லபாய் சாலையில் நேற்று காலை 7 மணியளவில் பாலசுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பாலசுப்ரமணியனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அவரை விடாமல் ஓட ஒட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து  உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலசுப்ரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொலையாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பப்பிரச்னை காரணமாகவே கொலை நடந்தது தெரியவந்தது. பாலசுப்ரமணியனின் தம்பி பாண்டியராஜன் குடும்பத்தினருக்கு உறவினர் மகாலிங்கம் பெண் கொடுத்துள்ளார். அந்த பெண் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும், சொத்து பங்கு பிரிப்பது தொடர்பாகவும் இரு குடும்பத்தினரிடையே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அழகுவிஜய், அவர்களிடம் லோடு மேன்களாக வேலை செய்து வரும் பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகியோருடன் சேர்ந்து சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பாலசுப்ரமணியனை கொலை செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: