ஞாயிறு, 31 மார்ச், 2024

ED க்கு மோடியின் அவசர அசைன்மென்ட்- அலர்ட் ஸ்டாலின்

 minnambalam.com - Aara  : “ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மார்ச் 30 ஆம் தேதி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம். இதுவரை ஆங்காங்கே செயல் வீரர்கள் கூட்டம் நிர்வாகிகள் சந்திப்பு என்று நடத்திக் கொண்டிருந்த வேட்பாளர்கள் நாளை முதல் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்குகிறார்கள்.
இந்த நிலையில்தான்… தமிழ்நாடு தேர்தல் களம் எப்படி இருக்கிறது, தமிழ்நாட்டில் பாஜகவின் நகர்வுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன என்பதையெல்லாம் அடிக்கடி ரிப்போர்ட்டாக கேட்டு தெரிந்து கொள்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் இருந்து,  பாஜக கூட்டணிக்கு எத்தனை எம்பிக்கள் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அடிக்கடி தமிழ்நாடு குறித்த அப்டேட்டுகளை கேட்டு பெறுகிறார் மோடி.
அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் பணத்தை அள்ளி இறைப்பதற்கு திட்டமிடுகிறார்கள் என்று பிரதமருக்கு லேட்டஸ்ட் ரிப்போர்ட் சென்றிருக்கிறது. 

இதையடுத்து அவர்கள் பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு வருமானவரித் துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்டிருக்கிறார் மோடி. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக மீதே அதி தீவிர கவனம் செலுத்துகின்றனர் இ.டி.யும், ஐடியும்.

இதன்படி வாக்குக்கு கொடுப்பதற்காக ஆங்காங்கே கரன்சிகள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை தீவிரமாக கண்காணித்து கைப்பற்ற வேண்டும் என்றும், அப்படி கைப்பற்றப்பட்டால் அந்த தொகுதியின் வேட்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட திமுக முக்கிய பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்றும் சீரியஸான உத்தரவு அமலாக்கத்துறைக்கு இடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் அனைவரது வாகனங்களும் பறக்கும் படைகளால் சோதனை இடப்படுகின்றன. கடந்த மார்ச் 25ஆம் தேதி கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த நீலகிரி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் ஆ. ராசாவின் வாகனத்தில் இருந்த பேக்குகளை அவர்கள் முழுமையாக சோதனை இடவில்லை என்று பாஜக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பறக்கும் படை அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய மாவட்ட தேர்தல் அலுவலர் மார்ச் 30 ஆம் தேதி, பறக்கும் படை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

திமுக வேட்பாளர்கள், திமுக அமைச்சர்களை குறி வைத்து அமலாக்க துறையும் வருமானவரித் துறையும் தீவிரமான கண்காணிப்பில் இறங்கி இருக்கின்றன. இதை உணர்ந்த திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்களுக்கு எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: