வெள்ளி, 1 மார்ச், 2024

தருமபுர மடத்தை ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் முதல்வருக்கு நன்றி - தருமபுரம் ஆதினம் !

கலைஞர் செய்திகள் -Praveen  :  தருமபுரம் ஆதீன மடம் என்பது பல ஆண்டுகளாக தமிழ் தொண்டாற்றிவரும் சைவ மடம். ஆன்மீக சேவை மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கு இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறது.
இந்த மடத்தின் ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி அவரை பல கோடி தொகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் அகோரம் மீது புகார் எழுந்தது.
இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரினைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தருமபுரம் ஆதினம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் முதல்வருக்கு நன்றி - தருமபுரம் ஆதினம் !

அந்த அறிக்கையில், "கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.. தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசீர்வாதம்" என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: