புதன், 28 பிப்ரவரி, 2024

உதயநிதியின் நம்பர் 6 பிளான் - ஒரே கல்லில் ஆறு மாங்காய்!

tamil.oneindia.com -  Shyamsundar :  லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதிமுக இன்னும் கூட்டணி எதையும் அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக பெரும்பாலும் கூட்டணியை 10 நாட்களில் இறுதி செய்துவிடும்..
பழைய கூட்டணியே இந்த முறை இந்தியா கூட்டணி என்ற பெயரில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம்.
 அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8- தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மற்ற கட்சிகளுக்கு 1-2 இடங்களை மட்டுமே கொடுக்கலாம் என்ற திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக அறிவிப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் இன்றே அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக அதிரடி: இதன் மூலம் திமுக முதல் ஆளாக தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட தொடங்கி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.

40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வேக்கள்: இந்த நிலையில்தான் கோவை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் திமுக சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் முக்கியமான சர்வே ஒன்றை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இந்த சர்வேபடி நேரடியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று சர்வே எடுப்பார்கள்.

அவர்களின் பூர்வீகம், வீடு, நிதி விவரங்களை கேட்பார்கள். இதில் ஜாதி தொடர்பான விவரங்களையும் சேகரிக்க உள்ளனராம். ஜாதி எண்ணிக்கையில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை திமுக எடுக்கிறதாம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதை வரை பல விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக திமுக இந்த கணக்கெடுப்பை கையில் எடுக்கிறதாம்.

குழு நியமனம்: இப்படிப்பட்ட சர்வேக்களுக்கு இடையில் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுக பல்வேறு குழுக்களை நியமித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன்உடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்: கடந்த சில மாதங்களாகவே கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் எல்லாம் உதயநிதி ஸ்டாலினின் தலையீடு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எடுக்க கூடிய முடிவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கட்சியின் அடுத்த அதிகார புள்ளியாகவும் உதயநிதி பார்க்கப்படுகிறார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவில் போட்டியிட உள்ள எம்பிக்கள் வேட்பாளர்கள் லிஸ்டை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறாராம். முன்னதாக கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பலரை தேர்வு செய்வதில் உதயநிதி பங்கு இருந்தது.

ஆனாலும் சீனியர்கள் பலர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் உதயநிதியின் முழுமையான லிஸ்ட் அப்போது பயன்படுத்தப்படவில்லை. பல சீனியர்களுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்கப்பட்டது. இதனால் உதயநிதிக்கு நெருக்கமான சில இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி வழங்க முடியாமல் போனது.

லோக்சபா தேர்தலில் இளைஞரணி : இந்த நிலையில்தான் இந்த லோக்சபா தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க உதயநிதி முடிவு செய்துள்ளாராம். 40 தொகுதிகளில் திமுக எப்படியும் 25 தொகுதிகளில் போட்டியிடும். அதில் 6-8 தொகுதிகளில் இளைஞரணி வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறராம்.

அதாவது 25 இடங்களில் 12- 13 இடங்களை ஏற்கனவே எம்பியாக இருக்கும் சீனியர்களுக்கு கொடுக்கலாம். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் 6-8 இடங்களை எப்படியாவது புதியவர்கள்தான் பெற வேண்டும். அதாவது இளைஞர்கள்தான் பெற வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி இருக்கிறாராம். குறைந்தது 6 பேர் இளைஞரணி பிரிவில் இருந்து வர வேண்டும் என்று உதயநிதி தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறாராம்; இதற்காக வாரிசுகள் இல்லாத, 6 புது முகங்களை தேர்வு செய்துவிட்டாராம்.

இந்த 6 புதுமுகங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.

யார் யார்?: இன்னொரு பக்கம் இந்த தேர்தலில் சில தொகுதிகள் ஏற்கனவே கூட்டணி கட்சிக்கும் சில சீனியர்களுக்கு திமுக தலைமை மூலம் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டதகாம். அதன்படி தென் சென்னை மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படலாம். இவர் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. விருதுநகர் துரை வைகோவிற்கு தரப்படலாம். ஆனால் இவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் சார்பாக சிவகங்கை கார்த்திக் சிதம்பரத்திற்கும், நாகர்கோவில் விஜய் வசந்த்திற்கும் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கே மோடி போட்டியிட உள்ளதாக பேச்சு வரும் நிலையில், இஸ்லாமிய கட்சிகளுக்கு பதிலாக இங்கே காங்கிரஸ் இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இது போக, திருச்சி, நெல்லை, திருவள்ளூர், தென்காசி, மதுரை ஆகிய தொகுதிகளுக்கு இந்த முறை திமுக களமிறங்கும் என்று பாராளுமன்ற தேர்தல் திமுக என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கே பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் சர்வே பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: